Friday, 24 January 2014

தமிழக மாவட்டங்கள் -3

தஞ்சாவூர் மாவட்டம்
காவிரி பாயும் கவின்மிகு பூமியான தஞ்சை சோழ சாம்ராஜ்யத்தின் தலைநகராக திகழ்ந்தது. சோழர்களுக்குப் பிறகு பாண்டியர்கள், செல்லப்ப நாயக்கர்,  மராட்டியர் ஆகியோர் ஆண்டனர்.
முதனிலைத் துறை
தமிழகத்தின் 'நெற்களஞ்சியம்’ என்று அழைக்கப்படுகிறது. செம்மை நெல் சாகுபடிக்கு புகழ் பெற்றது.
இரண்டாம் நிலைத் துறை
தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, தஞ்சாவூர் தட்டு போன்றவை புகழ்பெற்ற கைவினைப் பொருட்கள்.
மூன்றாம் நிலைத் துறை
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலை இங்கு உள்ளது.
கலை, இசை, இலக்கியம், நாடகம், கைவினைப் பொருட்களுக்கும் புகழ்பெற்ற மாவட்டம்.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பகோணத்தில் நடைபெறும் மகாமகம் பிரபலம்.
சனி பகவானுக்கான தனிக்கோயில் (குச்சனூர் சனீஸ்வரர் கோயில்.)
தியாகராஜ சுவாமிகளின் நினைவைப் போற்றும் வகையில், ஜனவரி மாதம் 8 நாட்கள் இசைத் திருவிழா நடைபெறும்.
1000 ஆண்டுகள் கடந்தும் அழகின் கம்பீர சாட்சியாக நிற்கும் பெரிய கோயில்.
கர்நாடக இசையின் தந்தையான தியாகையர் வாழ்ந்த திருவையாறு.

வழிபாட்டிடங்கள்:  தஞ்சாவூர் பெருவுடையார் கோயில், சுவாமிமலை, திருவலஞ்சுழி, பட்டீஸ்வரம், திருவிடைமருதூர், திருநாகேசுவரம் ஒப்பிலியப்பன் கோயில், பூண்டி மாதா கோயில், வளத்தூர் மசூதி, மாரியம்மன் கோயில், தாராசுரம், திருவையாறு, திருப்பனந்தாள்.
குறிப்பிடத்தக்க பெருமக்கள்
கரந்தை தமிழ்ச் சங்கம் கண்ட தமிழ்வேள் உமா மகேஸ்வரம் பிள்ளை; நாடகமணி நவாப் இராஜமாணிக்கம் பிள்ளை, தமிழ் இலக்கியங்களை பதிப்பித்த உ.வே. சுவாமிநாதய்யர், ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு.
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம்
தமிழக அரசால் 1981 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. மொழி, இலக்கியம் பற்றிய ஆய்வுகள் செய்து அவற்றை வெளியிடுவது; கல்வெட்டு மற்றும் ஓலைச்சுவடிகள் ஆகியவற்றை புத்தகமாக வெளியிடுவது; கலைக் களஞ்சியம் தயாரிப்பது; தமிழ்ப் பண்பாட்டை உலகு உணர்த்தும் வண்ணம் ஆய்வு; அருங்காட்சியகம் அமைத்தல்; உலகத் தமிழர்களுடன் உறவு அமைத்தல் அந்நிய நாட்டினர்க்கு தமிழ் கற்பித்தல் ஆகிய அரும்பணிகளை இப்பல்கலைக்கழகம் ஆற்றி வருகிறது. மிகப்பெரிய நூலகம் இங்கு அமைந்துள்ளது. 1995 ஆம் ஆண்டு உலகத் தமிழ் மாநாடு இங்கு சிறப்பாக நடத்தப்பட்டது.

திருவாரூர் மாவட்டம்
திருவாரூர் முன்பு சோழ மண்டலத்தின் ஒரு பகுதியாக இருந்தது.  தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து வலங்கைமான் தாலுக்காவையும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து திருவாரூர், நன்னிலம், கொடவாசல், நீடாமங்கலம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி தாலுக்காக்களையும் ஒன்றிணைத்து, 1997-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி உருவாக்கப்பட்டதே இந்த மாவட்டம்.
 முதனிலைத் துறை
இந்த மாவட்டத்தின் முக்கியத் தொழில், வேளாண்மை. 120 சதுர கிலோமீட்டர் பரப்பில் முத்துப் பேட்டை சதுப்புநிலக் காடுகள் அமைந்துள்ளன. முத்துப்பேட்டை தடாகத்தில் 73 வகையான மீன் இனங்கள் காணப்படுகின்றன. நவம்பர், டிசம்பர் மாதங்களில் உலகெங்கிலும் இருந்து முத்துப் பேட்டைக்கு பறவைகள் வருகின்றன.
இரண்டாம் நிலைத் துறை
ஆரூரான் சர்க்கரை ஆலை (வடபாதி மங்கலம்), இரசாயன ஆலை (வடசேரி), அரிசி ஆலைகள், செராமிக் தொழிற்சாலைகள் போன்றவை இம்மாவட் டத்தில் உள்ளன.
மூன்றாம் நிலைத் துறை
வடுவூர் பறவைகள் சரணாலயம், முத்துப்பேட்டை ஏரி, தியாகராஜ சுவாமிகள் ஆலயம் போன்றவை முக்கிய சுற்றுலாத் தலங்கள்.
வடுவூர் பறவைகள் சரணாலயம் 1999ல் உருவாக்கப்பட்டது. வெள்ளை அரிவாள் மூக்கன், நத்தை கொத்தி நாரை, நீர்க்காகம், ஊசி வாழ் வாத்து, நாமக் கோழி, பவளக் கால் உள்ளான், சிறவி போன்றவை வடுவூருக்கு வலசை வரும் பறவைகளில் குறிப்பிடத்த தக்கவை.
தியாகராஜ சுவாமிகள் ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் 'தியாகராஜ ஆராதனை’ புகழ் பெற்றது.
மத்தியப் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது.
தமிழகத் தேர்களில் 'திருவாரூர் தேர்’தான் மிகப் பெரியது. திருவாரூர் தேரை அடிப்படையாக கொண்டே 'வள்ளுவர் கோட்டம்’  அமைக்கப்பட்டது.
குறிப்பிடத்தக்கவர்கள் : சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜ சுவாமிகள், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் பிறந்த மாவட்டம்.
வலங்கை சண்முகசுந்தரம், திரு.வி.க., ஏ.டி.பன்னீர்செல்வம், முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி, கே.பாலசந்தர், திருவாரூர் தங்கராசு, ஆரூர்தாஸ், மன்னை நாராயணசாமி, கோட்டூர் அரங்கசாமி முதலியார், வடபாதி மங்கலம் ஆரூரான், சர்க்கரை ஆலை தியாகராஜ முதலியார், கந்தசாமி, நெடுஞ்செழியன்

நாகப்பட்டினம் மாவட்டம்
தமிழத்தின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள இந்த மாவட்டம், பண்டைய காலம் தொட்டே துறைமுக நகரமாகஉள்ளது. காவிரிப் பூம்பட்டினம் அழிந்த பிறகு, துறைமுகப் பட்டினமாக விளங்கிய இங்கு புத்தவிகாரைக் கட்டினார், அசோகர்.
சோழர் ஆட்சியில் 'சோழகுலவல்லி பட்டினம்’ என்ற பெயரைப் பெற்றது. சோழர்கள் ஆண்ட இந்தப் பகுதியை, பிறகு  போர்ச்சுக்கீசியருக்குத் தாரை வார்த்தனர். இவர்களுடன் சண்டையிட்டு டச்சுக்காரர்கள் இதனை ஆண்டனர். இதன்பிறகே இந்தப் பகுதி ஆங்கிலேயேரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
தஞ்சை மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த நாகப்பட்டினம், 1991-ம் ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி தனி மாவட்டமாக உருவெடுத்தது.
முதனிலைத் துறை
நெல் (மயிலாடுதுறை, கொள்ளிடம், நாகப்பட்டினம்), கரும்பு, வாழை, ராகி, காய்கறிகள், பூக்கள் மணிலா, முதலியவை இம்மாவட்டத்தின் முக்கிய பயிர்கள்.
மயிலாடுதுறை தலைஞாயிறு விவசாய ஆராய்ச்சி நிலையம் புதிய நெல்வகைகளை உருவாக்கியுள்ளது.
கடற்கரை மாவட்டமாதலால் மீன்பிடித் தொழில் சிறப்பாக நடை பெறுகிறது.
நரிமனத்தில் பெட்ரோலியம்,சீர்காழி இயற்கைவாயு, கோடியக்கரையில் பழுப்பு நிலக்கிரி, தரங்கம்பாடி கடற்கரை மணலில் இல்மனைட் தாது மற்றும் ஜர்க்கான் தாது போன்றவை இம்மாவட்டத்தின் முக்கிய கனிம வளங்களாகும்.
இரண்டாம் நிலைத் துறை
உப்பளத்தொழில் நாகை மாவட்டத்தில் சிறப்பாக நடைபெறுகிறது. நாகப்பட்டினம், வேதாரண்யம், தரங்கம்பாடி ஆகிய இடங்களில் உப்பு காய்ச்சப்படுகிறது.
வேதாரண்யம் உப்பு ஜிப்சம் செய்ய ஏற்றது.
பட்டுப்புடவை நெய்தல் (கூறைநாடு), பாய்நெய்தல், பிரம்புத் தொழில் (ஆனைக்காரன் சத்திரம்) போன்ற கைத்தொழில்களும் நாகையில் நடைபெறுகிறது. 
மூன்றாம் நிலைத் துறை
திருக்கடையூரின் திருக்கடவூர் தலம் தேவார மூவரால் பாடப்பெற்றது. அபிராமி அந்தாதி இத்தலத்தில் பாடப்பெற்றது.
சுற்றுலா இடங்கள்:
காவிரியாறு கடலோடு கலக்கும் இடமே காவிரிப் பூம்பட்டினம், தரங்கம்பாடி 'டேனிஷ் கோட்டை’, கோடியக்கரை வனவிலங்கு புகலிடம் 
நாகப்பட்டினத்தின் மற்றொரு பெயர் 'நீர்பெயற்று’.
வேளாங்கண்ணிக்கு, 'கீழை நாட்டு லூர்டீஸ்’ (Lourdes of the East) என்ற பெயர் உண்டு.
புகழ்பெற்ற நாகூர் தர்க்கா இங்குதான் உள்ளது.
காவிரியின் கடைமடைப் பகுதியான இங்கு, நெல் விளைச்சல் அதிகம்.
இது மறைமலை அடிகள் பிறந்த மாவட்டம்.
நாகை மாவட்டம் இந்து, கிறிஸ் தவ, முஸ்லீம் மக்களின் மதநல்லிணக்க மாவட்டமாக விளங்குகிறது.

கடலூர் மாவட்டம்
 அண்ணாமலைப் பல்கலைக் கழகம், நெய்வேலி பழுப்பு நிலக்கரிச் சுரங்கம், வள்ளலார் வாழ்ந்த வடலூர் என்று பல்வேறு சிறப்புகளை கொண்டது கடலூர்.
பண்டைய காலத்தில் தொண்டை நாடாக விளங்கியது. சென்னையில் இருந்து 183 கிலோ மீட்டர் தொலைவில் கிழக்குக் கடற்கரை சாலையில் அமைந்திருக்கிறது.
ராபர்ட் கிளைவ், தனது நிர்வாகச் செயல்பாடுகளை இந்த மாவட்டத்தில் இருந்துதான் தொடங்கினார்.
1993, செப்டம்பர் 30-ம் தேதி, தென்னாற்காடு மாவட்டம், தென்னாற்காடு வள்ளலார் மற்றும் விழுப்புரம் ராமசாமி படையாச்சியார் என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டன. தென்னாற்காடு வள்ளலார்
மாவட்டம்தான், தற்போது கடலூர் மாவட்டமாக விளங்குகிறது.
முதன்மைத்துறை
கொள்ளிடம் பாயும் பகுதிகளில் நெல்லும், பண்ருட்டி வட்டத்தில் பலாப்பழமும், முந்திரியும் பெருமளவு விளைகின்றன.பலாப்பழம், முந்திரி, முந்திரி எண்ணெய் போன்றவை களுக்கு பண்ருட்டி புகழ்பெற்றது. மணிலாப்பயிர் விளைச்சல் இம்மாவட்டத்தில் அதிகம். அதிக எண்ணெய் சத்து உள்ள காரணத்தால் இங்கு விளையும் மணிலா ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தமிழகத்தின் முந்திரி அதிகம் விளையும் மாவட்டம்.
இனிப்புச்சத்து அதிகம் உள்ள கரும்புகள், கேழ்வரகு, கம்பு, எள், சோளம், துவரை, வரகு போன்றவையும் குறைந்தளவு பருத்தியும் விளைகின்றன.
சுண்ணாம்புக்கல், உயர் ரக களிமண் (காடாம் புலியூர், பண்ருட்டி), பீங்கான் தொழிலுக்கேற்ற வெள்ளைக் களிமண் (பணிக்கன் குப்பம்), துத்தநாகம், ஈயம், செம்பு படிவங்கள்(மாமண்டூர்), பழுப்பு நிலக்கரி (நெய்வேலி )  என கடலூர் கனிமவளம் மிகுந்தது.
இரண்டாம் நிலைத் துறை
சர்க்கரை ஆலைகள் (நெல்லிக் குப்பம், பெண்ணாடம்),  எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (கடலூர்), முதலிய இரசாயனக் கலவை உரத்தொழிற்சாலைகள் (பண்ருட்டி, கடலூர்), வடலூர் சேஷசாயி தொழிற்சாலை, ஈ.ஐ.டி பாரி சாக்லேட் மற்றும் சர்க்கரை ஆலை, சிப்காட் தொழிற்கூட ஆலைகள் இம்மாவட்டத்தின் முக்கியத் தொழிற்சாலைகள்.
மூன்றாம் நிலைத் துறை
புகழ்மிகு தில்லை நடராசர் கோயில், நாட்டிய கலைக் கோயிலாக உள்ளது.
போர்ச்சுக்கீசியர்கள் வாணிபம் நடத்திய பரங்கிப்பேட்டை, கடலூரில்தான் இருக்கிறது.
கடல் நீர் உட்புகுந்து வரும் கழிமுகத்தின் இடையே பரந்து விரிந்து கிடக்கும் சுரப்புன்னைக் காடுகளை கொண்ட 'பிச்சாவரம்’, இந்த மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலம்.
அண்ணாமலைப் பல்கலைக் கழகம் : 1920ஆம் ஆண்டு மீனாட்சிக் கல்லூரியாக தொடங்கப்பட்டு 1929ஆம் ஆண்டு பல்கலைக்கழகமாக ராஜா சர்.முத்தையாச் செட்டியாரின் தந்தை அண்ணாமலை செட்டியாரால் உருவாக்கப்பட்டது. இப்பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறை புகழ் பெற்றது. தமிழ்துறையில் சிறந்த தமிழறிஞர்களான பண்டிதமணி கதிரேசன் செட்டியார், சோமசுந்தர பாரதியார், சதாசிவ பண்டாரத்தார் போன்றோர் பணியாற்றியுள்ளனர். இதுமட்டுமல்லாது தமிழிசை விழிப்பு உணர்விலும், இந்திப் போராட்டத்திலும் இப்பல்கலைக் கழகம் பெரும்பங்கு வகித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம்
 இது, 1993-ம் ஆண்டு, செப்டம்பர் 30-ம் தேதி உதயமானது. தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்த இந்தப் பகுதி, தனியாக பிரிக்கப்பட்டு விழுப்புரம் மாவட்டமாக உருவாக்கப்பட்டது.
முதனிலைத் துறை
நெல், கரும்பு, மணிலா, பருத்தி, பருப்பு, சோளம், கம்பு, கேழ்வரகு,  நவதானியங்களும் இம்மாவட்டத்தில் அதிகம் விளைவிக்கப்படுகின்றன.
உப்பு (மரக்காணம்), ஃபயர் க்ளே (திண்டிவனம்), ஸ்டீடைட் தாது (கள்ளக்குறிச்சி), சிலிகா மண் (அகரம் காடுகள்), பிளாக் கிரானைட் (வானுர், திண்டிவனம், செஞ்சி), பலவண்ண கிரானைட் (செஞ்சி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி), . புளு மெட்டல் போன்றவை இங்கு கிடைக் கும் முக்கிய கனிமங்களாகும்.
இரண்டாம் நிலைத் துறை
சர்க்கரை ஆலைகள் (முண்டியம் பாக்கம், மூங்கில் துறைப் பட்டு, செங்கல்வராயன்), நூற்பாலைகள்,வனஸ்பதி தொழிற்சாலை, இரசாயனக் கலவை உரத் தொழிற்சாலைகள், சிட்கோ தொழிற்கூடங்கள், பாண்ட்ஸ் இந்தியா வாசனை திரவியத் தொழிற்சாலை உள்ளன.
மூன்றாம் நிலைத் துறை
தமிழ்நாட்டின் 2-வது பெரிய மாவட்டமான இங்கு, செஞ்சிக் கோட்டை, கல்வராயன் மலை ஆகியவை முக்கியச் சுற்றுலாத் தலங்கள்.
திருநங்கைகளின் குடும்பக் கோயிலான 'கூத்தாண்டவர் கோயில்’ உளுந்தூர் பேட்டை தாலுகாவில் உள்ள கூவாகத்தில் இருக்கிறது.
சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தியான இடம், மேல் மலையனூர்.
திண்டிவனத்திலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள செஞ்சிக் கோட்டை 'கிழக்கின் ட்ராய்’ என்று அழைக்கப்படுகிறது.
1677ல் சத்ரபதி சிவாஜியால் செஞ்சிக் கோட்டை கைப்பற்றப்பட்டது. 1691ல் ஒளரங்க சீப்பின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு ஸ்வரூப்சிங் என்ற ராஜ புத்திரரால் ஆளப்பட்டது. ஸ்வரூப் சிங்கின் மகனான ராஜா தேசிங்கு, தமிழ்நாட்டுப் பாடல்களிலும் இடம் பெற்ற சிறப்புக்குரியவர்.
புகழ்பெற்ற மரக்காணம் கடற்கரை, கோமுகி அணை, சங்க காலப் புலவர் கபிலர் பற்றிய தகவல்கள் இடம்பெற்ற கல்வெட்டு உள்ள திருக்கோவிலூர் போன்றவையும் இம்மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க இடங்களாகும்.
மயானக் கொள்ளைத் திருவிழா புகழ்பெற்றது. இங்கு, திருக்கோவிலூர், திருவக்கரை புகழ்பெற்ற வழிபாட்டுத் தலங்கள்.
குறிப்பிடத்தக்கவர்கள்: காஞ்சிப் பெரியவர், நாயன்மார்களில் ஒருவரான நந்தனார், ஓமந்தூர் பி.இராமசாமி ரெட்டியார், உழைப்பாளர் கட்சியின் தோற்றுநர்களில் ஒருவரான எஸ்.எஸ். இராமசாமி படையாச்சி, திண்டிவனம் இராமமூர்த்தி, திருக்குறள் வி.முனுசாமி, கவிஞர் உளுந்தூர்பேட்டை சண்முகம் முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

No comments:

Post a Comment