Friday 24 January 2014

தமிழக போக்குவரத்தும் தகவல் தொடர்பும்

தமிழக போக்குவரத்தும் தகவல் தொடர்பும்
Posted Date : 16:12 (15/12/2013)Last updated : 16:12 (15/12/2013)
 சாலைப் போக்குவரத்து
சாலைப் போக்குவரத்து நான்கு விதமாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன; தேசிய நெடுஞ்சாலைகள்,மாநில நெடுஞ்சாலைகள், மாவட்டச் சாலைகள் மற்றும் கிராமச் சாலைகள்
தமிழ்நாட்டின் 24 தேசிய நெடுஞ்சாலைகள் 4500 கி.மீ. தொலைதூரத்தை இணைக்கின்றன. இந்திய அரசாங்கம் முனைந்து உருவாக்கிய தங்க நாற்கரசாலைத் திட்டத்தின் முடிவிடமாக தமிழ்நாடு விளங்குகிறது.
தமிழ்நாடு போக்குவரத்துக் கழகங்கள்
 பெருநகரப் போக்குவரத்துக் கழகம், சென்னை - இது சென்னை நகரத்தில் எல்லாப் பகுதிகளையும் இணைக்கிறது.
தமிழ்நாடு மாநிலப் போக்குவரத்துக் கழகம், விழுப்புரம் கோட்டம் (வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர்)
 தமிழ்நாடு மாநிலப் போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் கோட்டம். (கும்பகோணம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், காரைக்கால், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் பகுதிகளுக்கான போக்குவரத்து)
 தமிழ்நாடு மாநிலப் போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் (சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி)
 தமிழ்நாடு மாநிலப் போக்குவரத்துக் கழகம், கோயம்புத்தூர் கோட்டம். (கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நீலகிரிப் பகுதிகளுக்கான போக்குவரத்து)
தமிழ்நாடு மாநிலப் போக்குவரத்துக் கழகம், மதுரை கோட்டம். (மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி)
தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகம், திருநெல்வேலி கோட்டம். (மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி)
மாநிலத்தின் மொத்த வாகன போக்குவரத்தில் இரண்டு, மூன்று சக்கர வாகனங்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 83.9 விழுக்காடாக உள்ளது.
 பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 2007 - 08இல் 100.64 லட்சமாக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் 64 போக்குவரத்து வாகன மண்டலங்கள் உள்ளன. சாலைப் போக்குவரத்து அலுவலக மையங்களில், சென்னை அதிகபட்சமாக 61 மையங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது.
சாலைப் போக்குவரத்தின் வளர்ச்சி
மாநில நெடுஞ்சாலையின் ஒரு வழிப் போக்குவரத்து, இருவழி மற்றும் பலவழி சாலைப் போக்குவரத்தாக மாற்றப்பட்டுள்ளது.
தற்பொழுது கிழக்கு கடற்கரைச்சாலை சிதம்பரம், நாகப்பட்டினம், இராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி வரை விரிவாக்கப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலையின் தங்க நாற்கர சாலைத்திட்டம் தமிழ் நாட்டில் 1232 கி.மீ. தொலைவிற்கு அமைக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான புறநகர் சாலைப் போக்குவரத்து தடங்கள் புறவழிச் சாலைகள் மூலம் திருப்பிவிடப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டில் அமைக்கப்பட்டுள்ள புறநகர் பேருந்து நிலையம் ஆசியாவிலேயே மிகப் பெரிய பேருந்து நிலையமாகும்.
 தமிழ் நாட்டில் பல மாவட்டங்களின் தேசிய நெடுஞ்சாலைகள் செல்லும் வழியில் பாலங்களும், மேம்பாலங்களும் கட்டப்பட் டுள்ளன. அவற்றுள் சென்னை நகரில் அமைந்துள்ள குறிப்பிடத்தக்க பாலங்கள் - சென்னை விமான நிலைய மேம்பாலம், அண்ணா மேம்பாலம், பெரம்பூர் மேம்பாலம், கத்திபாரா சந்திப்பு மேம்பாலம். இவற்றைத்  தவிர வேலூர், திண்டிவனம் மற்றும் உளுந்தூர்பேட்டையிலும் மேம்பாலங்கள் அமைக்கப்பட் டுள்ளன. இவை அனைத்தும் போக்குவரத்து நெரிசலை வெகுவாகக் குறைக்கின்றது.
புறநகர்ப் பகுதிகளைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள வட்டச் சாலைகள் மூலம், வாகனப் போக்குவரத்து பிரதான நகர்ப்புற மையப்பகுதிகள் வழியாகச் செல்வதைத் தவிர்த்து புறவழிகளில் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மாநில விரைவுப் போக்குவரத்துக் கழகம் பல சொகுசுப் பேருந்துகளை இயக்குகிறது. நவீனமான, அதி நவீனமான மிதவைப் பேருந்துகள் மற்றும் ஒளி-ஒலிக் காட்சிக் கருவிகள் பொருத்திய பேருந்துகளையும் தமிழ்நாட்டிலும் அண்டை மாநிலப்பகுதிகளிலும் போக்குவரத்துக் கழகம் இயக்குகிறது.
தமிழ்நாட்டில் இரயில் போக்குவரத்து
 தமிழ்நாட்டில் இரயில் போக்குவரத்து தென்னிந்திய இரயில்வேயின் ஒருபகுதியாக சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவருகிறது
 தமிழ்நாட்டில் மொத்த இரயில்வே பாதையின் நீளம் ஏறத்தாழ 5952 கிலோ மீட்டராகவும் மொத்த இரயில் நிலையங்களின் எண்ணிக்கை 532 ஆகவும் உள்ளது. இவை தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கிறது.
 மாநிலத்தில் உள்ள  முக்கிய இரயில்வே சந்திப்புகளாவன: சென்னை, ஈரோடு, கோயம்புத்தூர், திருநெல்வேலி, மதுரை, திருச்சிராப்பள்ளி மற்றும் சேலம் ஆகும்.
 தெற்கு இரயில்வே மண்டலம் ஆறு கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு; சென்னை, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் மற்றும் திருச்சிராப்பள்ளி.
 சென்னை நகர புறநகர் இரயில் போக்குவரத்து மூன்று முக்கிய வழித்தடங்களில் சிறப்பாக செயல்படுகிறது. அவை: சென்னை - அரக்கோணம் இணைப்பு, சென்னை - செங்கல்பட்டு இணைப்பு மற்றும் சென்னை கடற்கரை - வேளச்சேரி அதிவேக இரயில் போக்குவரத்து திட்டம் (MRTS)
தமிழ்நாட்டில் இரயில்போக்குவரத்து  வளர்ச்சி
 அனைத்து மீட்டர் இருப்புப் பாதைகளும் அகலப்பாதையாக மாற்றப்பட்டு அதில் 26 விழுக்காடு நீளமுள்ள பாதைகள் மின்மயமாக்கப் பட்டுள்ளது.
அகலப்பாதை மாற்றும் திட்டம் சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு மற்றும் புறநகர் பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
நீர்வழிப்போக்குவரத்து
 நீர்வழிப் போக்குவரத்து மிகக் குறைந்த செலவுடையதாகும். அவை, உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து, கடல்வழி போக்குவரத்து என இரு வகைப்படும்.
 தமிழ்நாடு ஏறக்குறைய 1,000 கி.மீ. நீளமுள்ள கடற்கரையைக் கொண்டுள்ளது. அதில் அமைந் துள்ள தமிழ்நாட்டின் மூன்று பெரிய துறைமுகங்கள், சென்னை, தூத்துக்குடி மற்றும் எண்ணூர் ஆகும்.
 சிறிய துறைமுகங்கள் கப்பல்கள் நங்கூரமிட்டு பொருட்களை கப்பலிலிருந்து கரைக்கு கொண்டு செல்ல உதவுகிறது. கடலூர், நாகப்பட்டினம், குளச்சல் மற்றும் இராமேஸ்வரம் ஆகியவை சிறிய துறைமுகங்களாகும்.
 பெரிய துறைமுகங்கள் கையாளும் சரக்குகள் (மில்லியன் டன்னில்)
சென்னை 57.15
தூத்துக்குடி 21.62
எண்ணூர் 11.56
நீர்வழிப் போக்குவரத்திற்கான திட்டங்கள்
சேது சமுத்திரக் கால்வாய் திட்டம்
 இந்தியப் பெருங்கடலிலிருந்து, மன்னார் வளைகுடா, ஆதம்ஸ் பாலம், பாக் வளைகுடா, பாக் ஜலசந்தி வழியாக வங்காள விரிகுடாவை அடைய கப்பல் போக்குவரத்து கால்வாயை உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கம்.
 இது அருகில் உள்ள அண்டைக் கண்டங்களையும் நாடுகளையும் இணைக்கக் கூடியது. ஆதலால் இது அதிமுக்கியத் திட்டமாகக் கருதப்படுகிறது.
 இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் தொழில் மற்றும் வர்த்தக வளர்ச்சி, விரைவான கப்பல் போக்குவரத்து, வேலைவாய்ப்பு ஆகியவற்றை ஊக்குவிக்கும் காரணியாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணத்தையும், ஆந்திராவில் உள்ள விஜயவாடாவையும் இணைக்கும் பக்கிங்காம் கால்வாய் தற்பொழுது அதன் முக்கியத்துவத்தை இழந்துள்ளது.
இதேபோன்று வேதாரண்யத்தையும், நாகப்பட்டினத்தையும் இணைக்கும் வேதாரண்யம் கால்வாயும் தனது முக்கியத்துவத்தை இழந்துள்ளது.
ஆகாயவழிப் போக்குவரத்து
ஆகாயவழி மக்களையும் மற்ற பொருட்களையும், தபால்களையும் துரித வேகத்தில் கொண்டு செல்லும் விலைஉயர்ந்த மார்க்கமாகும். இது உள்ளூர் பகுதி, வட்டாரப் பகுதி, மற்றும் தேசிய, பன்னாட்டு நகரங்களையும் இணைக்கிறது.
தமிழ் நாட்டில் உள்ள முக்கிய பன்னாட்டு விமான நிலையம் அண்ணா விமான நிலையமாகும். இவ்விதமான நிலையம் 19 நாடுகளுக்கான விமான போக்குவரத்து சேவை புரிகின்றது.
ஒரு வாரத்தில் 169க்கும் மேற்பட்ட நேரடி விமானப் போக்குவரத்தையும் இது கையாளுகிறது.
இந்தியாவில் மும்பை, டெல்லிக்கு பிறகு மூன்றாவது பெரிய விமான நிலையம் சென்னையில் அமைந்துள்ள விமான நிலையமாகும்.
இலங்கை, ஜெர்மனி, ஜகார்த்தா, மலேசியா, இங்கிலாந்து, மாலத்தீவுகள், சவுதி அரேபியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு சென்னையிலிருந்து நேரடி போக்குவரத்து சேவை நடைபெறுகிறது.
பன்னாட்டு விமானநிலையங்கள்
1) சென்னை (அண்ணா)
2) கோயம்புத்தூர்
3) திருச்சிராப்பள்ளி
 உள்நாட்டு விமான நிலையங்கள்
1) சென்னை (காமராஜர்)
2) மதுரை
3) தூத்துக்குடி
தமிழகத்தில் தகவல் தொடர்பு வளர்ச்சி
தனிப்பட்ட தகவல் பரிமாற்றம், பொது தகவல் பரிமாற்றம் என இருவகைப்படும்.
தனிப்பட்ட தகவல் பரிமாற்றம் என்பது அஞ்சல் சேவை, தந்தி, தொலைபேசி, இணையதளம், மின்அஞ்சல் மற்றும் தொலைதூர நகல் (FAX) ஆகும்.
பொது தகவல் பரிமாற்றம் அரசு நிறுவனங்களால் செயல்படுத்தப்படுகிறது. அவையாவன; செய்தி அச்சுத்துறை (புத்தகங்கள், பத்திரிகைகள், நூல்கள் மற்றும் நாளேடுகள்) மின்னணு துறை (வானொலி, தொலைக்காட்சிப் பெட்டி, தொலைத்தொடர்பு, கைபேசி, மின்னஞ்சல், மின்வர்த்தகம், டெலிபிரிண்டர்)
தபால் தந்தித்துறை
தமிழ்நாட்டில் நான்கு அஞ்சல் மாவட்டங்கள் உள்ளன. அவையாவன;
மண்டலம் தலைமையிடம்
சென்னை சென்னை
மேற்கு மண்டலம் கோயம்புத்தூர்
மத்திய மண்டலம் திருச்சி
தென் மண்டலம் மதுரை
அஞ்சல் துறை: அஞ்சல் குறியீட்டு எண்கள் அளித்ததன் மூலம் தபால்கள், விரைவுத் தபால்கள், விமான தபால் சேவை, விரைவு சேவை மற்றும் அதிவிரைவுச் சேவைகளை கால தாமதமின்றி அளிக்கின்றது.
 தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல் தந்தி அலுவலகங்கள்
அஞ்சல் அலுவலகங்களின் எண்ணிக்கை மட்டும் - 12,115
அஞ்சல் மற்றும் தந்தி அலுவலகங்களின் எண்ணிக்கை - 3,504
இந்தியாவில் தகவல் பரிமாற்றத்தில் பாரத் சஞ்சார் நிகாம் முக்கிய சேவையை அளித்து வருகிறது.
நாடு முழுவதிலும் நேரடித் தொலை தொடர்புக்கு ஷிஜிஞி மூலமும், உள்ளூர் தொலை தொடர்புக்கு பொது தொலைபேசி மூலமும், பன்னாட்டு தொலைத் தொடர்புக்கு மிஷிஞி மூலமும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள, தொலைபேசி இணைப்பகங்கள் - 2,408.
தனியார் தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்களாவன; பாரதி இன்ஃபோடெல், டாடா, ரிலையன்ஸ், வோடபோஃன், ஏர்செல், ஐடியா மற்றும் யுனிநார்.
தமிழ்நாட்டில் உபயோகத்தில் உள்ள கைபேசிகளின் எண்ணிக்கை - 33,37,087
குறிப்பு: தந்தி சேவை ஜூலை 14ம் தேதி நள்ளிரவில் இருந்து நிறுத்தப்பட்டது.
தொலை தொடர்பு
 பாரத் சஞ்சார் நிகாமின் சேவைகள் 1.வாடிக்கையாளர்களுக்கு டேட்டா-ஒன் பிராட்பேண்ட் என்ற பெயரின் மூலம் இணையதள வசதியை வழங்குகிறது.2)அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் முன் / பின் பணம் செலுத்தும் கைபேசி சேவை வழங்கப்படுகிறது.
அகில இந்திய வானொலி நிலையம்
 இந்திய வானொலி ஒலிபரப்பு 1927ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பின்பு அகில இந்திய வானொலி என்ற பெயரை 1936ஆம் ஆண்டு பெற்றது.
 தமிழ்நாட்டில் 15 வானொலி ஒலிபரப்பு நிறுவனங்கள் உள்ளன.
 தனியார் ஒலிபரப்பு நிறுவனங்கள் பண்பலை ஒலிபரப்பு நிலையங்கள் அமைத்து அதன் மூலம் கல்வி, விவசாயம் மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுகின்றன.
தொலைக்காட்சி
 வான்வெளி ஒளிபரப்புகளிலேயே மிகப்பெரிய சேவை தொலைக் காட்சி ஒளிபரப்பாகும்.
 நேரடி தேசிய மற்றும் பன்னாட்டு ஒளிபரப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதன் மூலம் உலக தொலைக்காட்சி பார்வையாளர்கள் அனைவரையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவர முடிகிறது.
 எடுசாட் (EDUSAT)  மூலம் பள்ளிக்கூடங்களுக்கும், பல்கலைக்கழகங்களுக்குமான கல்வி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுகிறது.
பொது இணையதளம் மற்றும் தனித்த இணையதளம்
(Internet and Intranet)
 அனைவரையும் மின்னணு வலைப்பின்னல் ஒன்றிணைக்கும் இணையதளம் கல்விப்பணியிலும், அறிவாற்றலை பரிமாறிக் கொள்வதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
INTRANET எனும் தனியார் இணையதள வலைப்பின்னல் மூலம் அந்தந்த நிறுவனங்களுக்கு சொந்தமான உள்கட்டமைப்புகள் மூலம் குறிப்பிட்ட அந்த நிறுவனத்தில் உள்ளவர்கள் மட்டும் ஒருவருடன் ஒருவர் தொடர்புகொள்ள முடியும்.
 உலகிலுள்ள அத்தனை மனிதர்களும் எந்த இடத்திலிருந்தும் தொடர்பு கொள்ள முடியும். தகவல் பரிமாற்றத்தில் உலகம் முழுவதும் வியக்கத்தக்க மாற்றங்களைக் கொண்டுவந்த செயற்கைக் கோள்கள் மிக சமீப காலத்திய தகவல் பரிமாற்ற சாதனமாகும்.
செயற்கைக் கோள்
 இந்திய தகவல் பரிமாற்றம் இரண்டு முக்கிய செயற்கைக்கோள்களான இந்திய தேசிய செயற்கைக் கோள்  (INSAT)  மற்றும் இந்திய தொலை நுண்ணுணர்வு (IRS)  செயற்கைக்கோள் ஆகியவற்றின் மூலம் நடைபெறுகிறது.
 இந்த இரண்டு செயற்கைக் கோள்களும், தகவல் பரிமாற்றத்தைத் தவிர, வானிலை முன்னறிவிப்பிற்கும், இயற்கை வளங்களின் மேலாண்மைக்கும் உதவுகிறது.
செய்தி அச்சுத்துறை
 செய்திகளைப் பலரும் அறிய தெரியப்படுத்துவதில் மிகப்பெரிய சக்தி வாய்ந்த சாதனமாக செய்தி அச்சுத்துறை விளங்குகிறது.
 இவற்றுள் முக்கியமானவை இந்திய  செய்தி நிறுவனம், யுனைடட் நியூஸ் ஆஃப் இந்தியா மற்றும் செய்தி தகவல் நிறுவனம் ஆகும்.

No comments:

Post a Comment