Saturday 25 January 2014

விண்வெளித் தொழில்நுட்பத் துளிகள்

விண்வெளித் தொழில்நுட்பத் துளிகள்
Posted Date : 19:12 (16/12/2013)Last updated : 19:12 (16/12/2013)
கண்ணன்
1. தொலை உணர் செயற்கைக்கோள்கள்
பூமியின் மேற்பரப்பைச் சுற்றிலும் துருவ வட்டப்பாதையில் (Polar Orbit) 960 கி.மீ உயரத்தில் தொலைஉணர் செயற்கைகோள்கள் வலம் வருகின்றன.   இந்தியாவின் இவ்வகை செயற்கைகோள்களை  Indian Remote Sensing Satellites  (IRSS) என்று அழைக்கின்றனர்.  விவசாய பரப்பில் பயிரிடப்படும் பல்வேறு வகையான பயிர்களின் பரப்பளவைக் கணக்கிடுவது, மண்ணிற்கு அடியில் புதைந்துள்ள பல்வேறு வகையான கனிம, கரிம மற்றும் நீர்வளங்களைக் கணக்கிட்டு வரைபடங்களாக வெளியிடுவது, நிலநடுக்கம், வெள்ளம், புயல், சுனாமி போன்ற பேரிடர்களின்போது சேத மதிப்பைக் கணக்கிடுவது, இப்படிப்பட்ட பேரிடர்கள் வருவதை முன்கூட்டியே புவியியல் பின்னணியில் கணிப்பது, பாதுகாப்புத் துறையில் எதிரி நாட்டு ஆயுதக் கிடங்குகள், போர்க் காலத்தில் படை நடவடிக்கைகளைச் சர்வதேச எல்லை வழியே ஊடுருவல், போன்றவற்றை வானிலிருந்து வேவு பார்த்தல் என அரிய பணிகளைத் தொலைஉணர் செயற்கைக்கோள்கள் சிறப்பாகச் செய்து வருகின்றன. NRSA என்னும் தேசிய தொலை உணர் முகமை (National Remote Sensing Agency) ஹைதராபாத்தில் இயங்கி வருகிறது. எ.கா. RESOURS AT, CARTOSAT
2. உலகப் புவியிடம் காட்டி :       (Global positioning system)
உலகின் மேற்பரப்பில்  எந்த ஓர் இடத்திலும் உள்ள ஓர் அசையும் மற்றும் அசையாப் பொருளின் இருப்பிடத்தைக் கண்டறிய உதவும் செயற்கைக் கோள்களை உள்ளடக்கிய தொழில் நுட்பக் கருவியே உலகப் புவியிடங்காட்டி எனப்படும். குறிப்பிட்ட பொருள் அமைந்துள்ள இடத்தின் அட்சரேகை, தீர்க்க ரேகை மற்றும் உயரம் (Latitude, Longitude and altitude) ஆகியவற்றைச் செயற்கைக் கோள் உதவியுடன் துல்லியமாகக் கணக்கிட்டு அப்பொருளின் இருப்பிடத்தைக் கண்டறிய உதவுகிறது.அசையும் பொருள் ஒன்றின்  திசை மற்றும் வேகத்தையும் புவியிடங்காட்டி துல்லியமாகக் கண்டறிகிறது.
உலகப் புவியிடங்காட்டி, பயன்பாட்டுப் பிரிவு, விண்வெளிப் பிரிவு மற்றும் கட்டுப்பாட்டுப் பிரிவு என்ற மூன்று பிரிவுகளைக் கொண்டது.பயன்பாட்டு பிரிவு என்பது செயற்கைக் கோள்களை நம்முடன் இணைக்கும் GPS receiver என்பதாகும். இது  சிம் கார்டு  போன்றதே ஆகும். விண்வெளிப் பிரிவு என்பது ஒரு குறிப்பிட்ட உயர வட்டப்பாதையில் உலகை தொடர்ச்சியாக வலம் வரும் செயற்கை கோள்களைக் குறிக்கும். கட்டுப்பாட்டுப் பிரிவு என்பது விண்வெளிப் பிரிவையும், பயன்பாட்டுப் பிரிவையும் இணைத்து அதனைக் கண்காணிக்கும் தளமாகும்.
3. உளவு செயற்கைக் கோள்கள் (Spy satellites)
நவீன போர் முறைகளிலும் அண்மை நாட்டை உளவு பார்க்கும் படலம் நடந்து கொண்டு தான் வருகிறது. மன்னர்கள் காலத்தில் 'ஐந்தாம் படை’ என்ற பெயரில் உளவு பார்த்த நிலை மாறி இன்று வானில் கழுகுப் பார்வையாய் தன் எதிரி நாடுகளைக் கண்காணிக்க உலகின் அநேக முன்னேறிய நாடுகள் ஒன்றுக்கும் மேற்பட்ட உளவு செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தியுள்ளது. தொலைஉணர் (Remote sensing) வகையைச் சேர்ந்த இச்செயற்கைக் கோள்கள், பூமியைத் துருவ வட்டப்பாதையில் சுழன்று வானில் இருந்தவாறே  பூமியின் குறிப்பிட்ட பகுதிகளைப் படம் பிடித்து அனுப்பியவாறே இருக்கும். பூமியில் நகரும் ஒரு வாகனத்தின் பதிவு எண் பலகையைக் கூட துல்லியமாகப் படம் பிடிக்க இயலும் என்பது குறிப்பிடத் தக்கது. 
4. வழிகாட்டு ஏவுகணைகள் (Guided missiles)
பலநூறு மைல்கள் தொலைவிலுள்ள இலக்கைச் துல்லியமாகச் சென்று தாக்கும் வழிகாட்டு ஏவுகணைகள் செயற்கைக் கோள்கள் மூலம் இயங்குகின்றன. செயல்பாட்டின் அடிப்படையில் இவ்வகை ஏவுகணைகள்  Go-Onto-Target (GOT), Go-Onto-Location-in-Space (GOLIS) என இருவகைப்படும். காட் (GOT) வகை ஏவுகணை ஓர் அசையும் அல்லது அசையா இலக்கை சென்று தாக்கும் ஆற்றல் படைத்தது. கோலிஸ் (GOLIS) வகை ஏவுகணை அசையாத இலக்குகளைத் தாக்கக்கூடியது.
5. விண்வெளிப் போர் (Space War)
போர் விமானங்களையும், ஏவுகணைகளையும் வைத்துப் போர் புரியும் வான்வெளி தாக்குதலை விட சிறு சிறு கோள்களையே (Asteroids) கவண் கற்களாக விண்ணிலிருந்து பூமியில் குறிப்பிட்ட இடத்தை நோக்கி தாக்கி அழிக்குமாறு அதன் சுற்றுப் பாதையை மாற்றும் சூட்சுமத்தை விண்வெளிப் பந்தாட்டம் (Space Golf) என்று அழைக்கின்றனர். 
இயற்கையாகச் சூரியனைச் சுற்றி வரும் இத்தகைய  சிறு கோள்களின் நீள்வட்டப் பாதையை மாற்றும் வித்தையை சில முன்னேறிய நாடுகள் ஆராய்ந்து வருகின்றன. இந்த விண்வெளிப் பந்தாட்டம் மட்டுமல்லாது பூமியைச் சுற்றி வரும் எதிரி நாட்டு செயற்கைக் கோள் களைக் குறி வைத்து ஏவுகணைகள் மூலம் தாக்கவும்  வாய்ப்புண்டு.
6. சிறுகோள்கள் (Dwarf Planet)
சூரியக் குடும்பத்தில் புதன் தொடங்கி புளூட்டோ வரை 9 கோள்கள் உள்ளன என்ற கருத்தை 2006 ஆம் ஆண்டு சர்வதேச வானியல் கூட்டமைப்பு (International Astronomical Union) மாற்றியமைத்தது. புளூட்டோ கிரகத்தைக் கோள் என்ற தரத்தில் இருந்து சிறு கோள் என்ற நிலைக்கு கீழிறக்கிவிட்டது.  நெப்டியூனின் நீள்வட்டப்பாதையில் புளூட்டோவின் வட்டபாதை குறுக்கிட்டதே இதற்கு முக்கிய காரணம். மற்ற கோள்களை விட அளவில் மிகவும் சிறியதாக உள்ள புளூட்டோவைக் கோளாக தொடரவிடும் போது வேறு பலவற்றையும் கோள்களாக அங்கீகரிக்க வேண்டிய அறிவியல் நிர்பந்தம் இருப்பதை உணர்ந்து 2006ஆம் ஆண்டு சர்வதேச வானியல் கூட்டமைப்பு (International Astronomical Union) புளூட்டோ (Pluto), சிரஸ் (Ceres), எரிஸ் (Eris), மேக் மேக் (Makemake), ஹாமியா (Haumea)  ஆகியவற்றைச் சூரிய மண்டலத்தில் ஐந்து சிறுகோள்களாக (Dwarf Planet) அங்கீகரித்துள்ளது.
7. சந்திரயான் 2
2008 ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான ISRO சந்திராயன்1 என்ற செயற்கைக்கோளை நிலவிற்கு செலுத்தியது.  சந்திராயன் 1 அனுப்பிய புகைப்படங்கள் தற்போது சந்திரனில் நீர் ஆதாரங்கள் உள்ளதை உறுதிப்படுத்தியுள்ளன.
2013 ஆம் ஆண்டில் செலுத்த திட்டமிடப்பட்டிருந்த  சந்திரயான் - 2 தற்போது 2015 ஆம் ஆண்டு வானில் செலுத்தப்படவுள்ளது. இச்செயற்கைக் கோள் நிலவின் மேற்பரப்பில் ரோவர் (சூரிய சக்தியுடன் இயங்கக்கூடிய சிறிய ஆறு சக்கர வண்டி போன்ற அமைப்பு ஒன்றை தரையிறக்கி கற்கள் மற்றும் மண் மாதிரிகளைச் சேகரித்துத் தக்க வேதியியல் ஆய்வுகளின் முடிவுகளை நமக்கு வழங்கவுள்ளது. ISRO வின் கனவுத் திட்டங்களின் ஒன்றான இந்த சந்திராயன் 1ன் திட்ட இயக்குநராக இருந்த   தமிழகத்தைச் சேர்ந்த திரு. மயில்சாமி அண்ணாதுரை சந்திராயன் 2க்கும்  திட்ட இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.
8. மங்கள்யான் (Mass Orbiter Mission)
PSLV சி25  ராக்கட்டின் மூலம் செவ்வாய் கிரகத்திற்கு அக்டோபர் மாதம் 2013ல் செலுத்தப்பட்ட மங்கள்யான் ISRO வின் கனவுத் திட்டங்களில் ஒன்றாகும். செவ்வாய் கிரகத்திற்கு இந்தியா செலுத்தும் முதல் செயற்கைக்கோள் . செவ்வாய் கிரகத்திற்கு வருங்காலத்தில் இந்தியா செலுத்த உள்ள செயற்கைகோள் மற்றும் திட்டமிட்டுள்ள அனைத்து ஆராய்ச்சிகளுக்குமான அடிப்படை ஆய்வுகளை இந்த மங்கள்யான் செயற்கைகோள் மேற்கொள்ளும்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ராக்கெட் : ரோகிணி  75, 1967நவம்பர் 20  அன்று தும்பாவிலிருந்து செலுத்தப்பட்டது. இதன் எடை 32 கிலோ; குறுக்களவு 75 மி.மீ
இந்தியாவின் முதல் ராக்கெட் செலுத்துகை : அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட நைக் அப்பாச்சி என்ற ஏழு மீட்டர் உயரமும் 715 கிலோ எடையும் கொண்ட ராக்கெட், தும்பாவிலிருந்து செலுத்தப்பட்டது.
இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் புவிநிலையம் : புனேவுக்கு அருகே உள்ள ஆர்.வி. (பிப்ரவரி 1971).
இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் : ஆர்யபட்டா, சோவியத் யூனியனிலிருந்து 1975, ஏப்ரல் 19 அன்று ஏவப்பட்டது.
இந்தியா வெற்றிகரமாகச் செலுத்திய முதல் செயற்கைக்கோள் : ரோகிணி, இது 1979ஆகஸ்ட் 10 அன்று ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செலுத்தப்பட்டது. விண்வெளிக்குச் செயற்கைக் கோள்களைச் செலுத்தும் நாடுகளுள் உலகில் ஏழாவது நாடாக இந்தியா விளங்குகிறது.
இந்தியாவின் முதல் செய்தித் தொடர்பு செயற்கைக்கோள்: ஆப்பிள், பிரெஞ்சு கயானாவிலிருந்து 1981ஜூன் 19 அன்று செலுத்தப்பட்டது.
ராகேஷ் சர்மா மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் போன்ற பெண் விண்வெளி ஆய்வாளர்களும் விண்வெளிக்குச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்தியாவின் முதல் தொலைஉணர் செயற்கைக் கோள் :  IRS – 1A செயற்கைக்கோள் 1988 ம் ஆண்டு  மார்ச் 17 அன்று செலுத்தப்பட்டது.
இந்தியாவின் முதல் வெற்றிகரமான  கிரையோஜெனிக் ராக்கெட் எஞ்சின் பரிசோதனை : திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியிலுள்ள திரவ உந்து பொருள் அமைப்பு நிலையத்தில் (Liquid propulsion systems centre) 2006ம் ஆண்டு அக்டோபர் 28 நடைபெற்றது.
இந்தியா முதன் முதலில் பத்து செயற்கைக் கோள்களை ஒரே ராக்கெட்டில் 2008ம் ஆண்டு ஏப்ரல் 28 அன்று செலுத்தியது: PSLV C-19 என்ற ராக்கெட் மூலம் பல செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. ரஷ்யாவுக்குப் பிறகு  பத்துக்கும் மேற்பட்டச் செயற்கைக்கோள்களை ஒரே நேரத்தில் விண்ணுக்குச் செலுத்திய உலகின் இரண்டாவது நாடு இந்தியா.
விண்வெளி மைல்கற்கள்
1961ம் ஆண்டு ரஷ்யாவைச் சேர்ந்த யூரி காகரின் முதன் முதலில் விண்வெளிக்குச் சென்று திரும்பினார்.
1969 ம் ஆண்டு ஜூலை மாதத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த நீல்ஆம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்ரின், கொலின்ஸ் ஆகியோர் முதன் முதலில் அப்பல்லோ  விண்கலத்தில் நிலவிற்குச் சென்றனர். ஆம்ஸ்ட்ராங்,ஆல்ட்ரின் இருவரும் நிலவில் இறங்கினர்.
விண்வெளி பற்றி விரிவான தகவல்களை அறிந்து கொள்ள உலகில் உள்ள 16 நாடுகள் இணைந்து விண்வெளியில் மிர் என்ற சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்துள்ளன. அங்கு அனைத்து நாட்டு விண்வெளி வீரர்களும் சென்று தங்கி, ஆய்வுகள் செய்து பல புதுப்புதுத் தகவல்களைப் பூமிக்கு அனுப்பி வைக்கின்றனர்.
இந்திய விண்வெளி வீரர்
இந்தியாவின் முதல் விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா.
ராகேஷ் சர்மா 1984 ம் ஆண்டு ஏப்ரல் 2 ம் தேதி சோயூஸ் T-11 என்ற விண்கலத்தில் விண்வெளிப் பயணம் செய்தார். விண்வெளியில் 8 நாள்கள் தங்கி ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.
கல்பனா சாவ்லா
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கல்பனா சாவ்லா, அமெரிக்காவின் கொலம்பியா விண்கலத்தின் மூலம் 1997 ஆம் ஆண்டு முதன் முதலில் விண்வெளிக்குச் சென்றார்
2003 ம் ஆண்டு இரண்டாவது முறையாக விண்வெளிக்குச் சென்று திரும்பும் போது விண்கலம் விபத்துக்குள்ளாகி வீரமரணம் அடைந்தார்.
சுனிதா வில்லியம்ஸ்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் அமெரிக்காவின் ஒகியோ மாகாணத்தில் 1965 ம் ஆண்டு செப்டம்பர் 19 ம் தேதியன்று பிறந்தார். தந்தை டாக்டர் தீபக் பாண்டியா; தாய் போன்னி ஆவார்.
1987ஆம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்தவுடன் கடற்படையில் சேர்ந்து ஹெலிகாப்டர்களை ஓட்டுபவராகப் பணிபுரிந்தார். கடற்படை விமானங்களையும் ஹெலிகாப்டர்களையும் திறமையாக ஓட்டியதால், தான் ஒரு  விண்வெளி வீரராக ஆக வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் தோன்றியது.
2006 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் நாள் STS 116 என்னும் விண்வெளித் திட்டத்தில் டிஸ்கவரி விண்வெளி ஓடத்தில் விண்ணிற்குச் சென்று 6 மாதங்கள் அங்குத் தங்கிப் பணிபுரிந்தார்.
விண்வெளியில் அதிக நாள் பயணம் செய்து, டாக்டர் கேதரின் என்பவரின் சாதனையை முறியடித்து (விண்வெளியில் பயணம் செய்த பெண்களில் அதிக நேரம் விண்வெளியில் பயணம்) 195 நாட்கள் விண்வெளியில் பயணித்த உலகச் சாதனையைக் கொண்டிருக்கிறார்.
பன்னாட்டு விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருக்கும் ஒரு விண்வெளி வீரர் கலந்து கொள்ளும் முதல் மாரத்தானில் வில்லியம்ஸ் ஓடினார். 2007 பாஸ்டன் மராத்தானை வில்லியம்ஸ் நான்கு மணி நேரம் 24 நிமிடங்களில் பூர்த்தி செய்தார்.
விண்வெளியில் பல சாதனைகளைச் செய்து புகழ்பெற்ற விண்வெளி வீரர்களின் வரிசையில் இவர் 24 ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.
(கட்டுரையாளர் ஓர் அறிவியல் ஆர்வலர்)

No comments:

Post a Comment