Sunday 10 July 2016

மனிதாநீ மனிதனாய் பிறந்ததேஓர் புண்ணியம்

வந்தவழி அறியலியே
போரவழி புரியலியே
எந்தவழி போனாலும்
எவ்விலக்கும் தெரியலியே

கூவத்துல விழுந்ததண்ணீ
குடிதண்ணீ ஆகாது
பாவம்அந்த தண்ணீக்கேன்
அந்தபழி நேர்ந்தது

பிறப்பதும் இறப்பதுவும்
மட்டுமல்ல அவன்கையில்
உழைப்பதை தவிரவேறு
ஒன்னுமில்ல ஓங்கையில்

மதிகொண்டு ஆசைப்பட்டு
மாடாக நீஉழை
விடையேதும் கிடைக்கலியா
விதியென்று நீபிழை

கையெழுத்த போட்டுசிலர்
கட்டுக்கட்டா சம்பாதிக்கிறான்
கைகாய்ப்பு வரஉழைச்சும்
கஞ்சிக்கின்றி பலர்சாகுறான்

மனுசபிறப்பின் சூட்சமத்தை
முழுசாய்கண்டவன் எவனுமில்லை
வந்தவேலை முடிந்துவிட்டால்
போகமலிருக்க முடியவதில்லை

எதுவுமே நிரந்தரமில்லை
ஏனிந்த போராட்டம்
போட்டியிலும் பொறாமையிலும்
முடிவதுஏன் நம்மாட்டம்

மனிதாநீ மனிதனாய்
பிறந்ததேஓர் புண்ணியம்
மகிழ்ச்சிதந்து மகிழ்ச்சியாய்
வாழ்ந்துசாவதே கண்ணியம்

நிரந்தரமில்லை

எந்தகல்லை வணங்கினாலும்
ஈடேற முடியாது ...
வைரக்கல்லாய் உனைமாற்ற
வைராக்கியம் போலேது ...

தயக்கத்தைவிட மிகப்பெரிய
தடையேதும் கிடையாது
அதைநீ தாண்டாமல்
எதையும்அடைய முடியாது

ஒன்பது கிரகங்களும்
உனக்காய்மட்டுமே உலவாது
ஆறுடத்தையே நம்பிஇருந்தால்
அப்பியபீடை அகலாது

அனுபவம்தான் ஆண்டவன்
அவனைநீ தேடிப்போ
கோவில்கோவிலாய்ப் போவதைவிட
தோல்விகளை நாடிப்போ

யார்தான் தோற்கவில்லை
எதற்குநீ வெட்கவேண்டும்
எம்முயற்சியும் செய்யாமல்
ஏளனிப்போர்தான் வெட்கவேண்டும்

ஐம்புலத்தின் காதைமட்டும்
அவ்வப்போது ஊனமாக்கு
ஆசைகளை ஓடவிட்டு
அதையேஉன் பாதையாக்கு

பிறப்புஓர் பந்தயம்
இறப்பின்பின்னே முடிவுதெரியும்
இடையில்தெரியும் முடிவுயெல்லாம்
எங்கனமும் மாற்றம்புரியும்

மரணத்தைவிட எதுவுமே
நிரந்தரமில்லை புரிந்துகொள்
என்னொடியும் இறப்புவரலாம்
எண்ணியதையடைய விரைந்துசெல்

DO NOT

1.தற்பெருமை கொள்ளுதல்
2.பிறரைக் கொடுமை செய்தல்
3.கோபப்படுதல்
4.பிறரைப் போலவே வாழ ஆசைப்பட்டு, அதற்கேற்ற பாவனை செய்தல்.
5.பிறர் துன்பத்தைக் கண்டு சந்தோஷப்படுதல்
6.பொய் பேசுதல்
7.கெட்ட சொற்களைப் பேசுதல்
8.நல்லவர் போல் நடிக்கும் இரட்டை வேட மனப்பான்மை
9.புறம்பேசுதல்
10.தகாதவர்களுடன் சேருதலும், ஆதரவு கொடுத்தலும்
11.பாரபட்சமாக நடத்தல்
12.பொருத்தமற்றவர்களைப் புகழ்ந்து பேசுதல்
13.பொய்சாட்சி கூறுதல்
14.எளியோரையும், வலிமை குறைந்தோரையும் கேலி செய்தல்
15.வாக்குறுதியை மீறுதல்
16.சண்டை, சச்சரவு, வாக்குவாதம் செய்தல்
17.குறை கூறுதல்
18.வதந்தி பரப்புதல்
19.கோள் சொல்லுதல்
20.பொறாமைப்படுதல்
21.பெண்களை தீய நோக்குடன் பார்த்தல்.

தோல்விகள் வீணாவதில்லை-

தோல்விகள் வீணாவதில்லை-
இந்த உலகத்தில் வெற்றிக்காக உழைக்காதவர்கள் மிகக்குறைவு. பலர் மற்றவர்களுக்கும் குடும்பத்துக்காவும் கச்சாப் பொருளாகவே இருந்து தங்கள் காலத்தை கடந்து சென்று விடுகிறார்கள். இன்னும் பலருக்கு உழைப்புடன் நேரம் கூடி வரும்போது வெற்றிகளும் அவர்களுக்கானதாக ஆகிவிடுகிறது. ஒரு இரும்பு இரும்பாக இருக்கிறவரை அது அது எத்தனை உறுதியாக இருந்தாலும் அது வெறும் கச்சாப்பொருள்தான். அதுவே காந்தமாக மாறுகிற போது அது அனைத்தையும் ஈர்த்துக் கொள்கிறது. இரும்பாக இருக்கும் நாம் காந்தமாக மாற ஒரு அவகாசம் எடுத்துக் கொள்ளத் தான் வேண்டும். இது தான் என் வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது.

எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் சோர்ந்து போய்விடக் கூடாது என்ற ஊக்கத்தை என் அப்பா மற்றும் நடிகர் சில்வர் ஸ்டர் ஸ்டோலனிடமிருந்து கற்றுக்கொண்டேன். “நீ எத்தனை ஏழை என்றாலும் சரி, அணிந்து கொள்ள ஒரேயொரு ஆடை தான் இருக்கிறது என்றாலும் சரி, உறங்க இனி நடைபாதை மட்டும் தான் என்ற நிலை வந்தாலும் சரி, உன் கனவை மட்டும் அணைத்துவிடாதே. அது உன்னை ஒரு நாள் உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியே தீரும். அதற்கு நானே உதாரணம்” என்று கூறியிருந்தார். அந்த வார்த்தைகளை அப்படியே எனக்குள் சேகரித்து வைத்துக் கொண்டதும் நெருக்கடியான காலங்களில் உயிர்ப்புடன் இருக்க உதவியது.

ஒருவனது தோல்விகள் கூட வீணாவதில்லை என்பதற்கு நான் உதாரணம் என்று தன்னடக்கத்துடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன். அருள் கதாபாத்திரம் தனிப்பட்ட முறையிலும் என் இதயத்துக்கு நெருக்கமானது என்பதை மறுக்கவில்லை. ஒடாத வாட்சக்கூட ஒரு நாளைக்கு இரண்டு முறை சரியான நேரம் காட்டும் என்று சொல்வார்கள் இல்லையா? அதுபோல, தோல்விகளின் பின்னால் இருக்கும் உழைப்பு வீணாவதில்லை

வெற்றி நிச்சயம்.

கடலில் இருக்கும் அத்தனை நீரும் ஒன்று சேர்ந்தால் கூட ஒரு கப்பலை மூழ்கடிக்க முடியாது.
கப்பலுக்குள் புகுந்தால் மட்டுமே அது சாத்தியம்.
" வாழ்வின் எந்த பிரச்சனையும் உங்களை பாதிக்கவே முடியாது நீங்கள் அனுமதித்தால் தவிர "
🌿 நமக்கு நாமே செய்து கொள்கின்ற துன்பத்தை தவிர வேறு எந்தத் துன்பமும் நம்மை அணுகாது.
🌿நாம் செய்யும் செயல் எதுவாயினும் நமது முழு மனத்தையும் அதில் செலுத்த வேண்டும்.
🌿 இந்த உலகம் மிகப்பெரிய ஓர் உடற்பயிற்சிக் கூடம். இங்கு நாம் நம்மை வலிமையுடையவர்களாக்கி கொள்வதற்காக வந்திருக்கிறோம்.
🌿உனது எதிர்காலத்தை நீயே உருவாக்கு. ஏற்கனவே நடந்து முடிந்ததைக் குறித்து வருந்தாதே. எல்லையற்ற எதிர்காலம் உன் முன்னால் விரிந்து பரந்திருக்கிறது. உன்னுடைய ஒவ்வொரு சொல்லும் சிந்தனையும் செயலும், அதற்கு ஏற்ற பலனைத் தரும்.
🌿நீங்கள் எந்த பிரச்சினையையும் சந்திக்காமல் அமைதியாக சென்று கொண்டிருந்தால், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
🌿 சரியான உற்சாகத்தோடு வேலை செய்ய ஆரம்பித்தால் வெற்றி நிச்சயம்.
🌿 இதயம் சொல்வதையை செய். வெற்றியோ, தோல்வியோ அதை தாங்கும் வலிமை அதற்கு மட்டுமே உண்டு.

உன்காலம் வரும்வரை

உன்காலம் வரும்வரை
ஊமையாக பொறுத்திரு
உதாசினம் செய்வோரின்
உற்சாகத்தை ரசித்திரு

உள்ளத்தாலும் உடலாலும்
ஓய்வின்றி உழைத்திடு
அறுத்துன்னை போட்டாலும்
அருகம்புல்லாய் தளைத்திடு

எந்நொடியும் மாற்றம்வரும்
எதிரிக்கு சொல்லிவை
அடுத்தநொடி உனக்கேயென
ஆர்வத்தை அள்ளிவை

சோம்பலை இன்றேகொண்டு
சுடுகாட்டில் கொள்ளிவை
சூடுபட்ட மண்புழுவாய்
சுறுசுறுப்பை உன்னில்வை

உன்னைவெல்ல இதுவரைக்கும்
ஒருவன்கூட பிறக்கவில்லை
பிறக்கும்போதே லட்சம்விந்தை
தோற்கடித்ததா நினைவில்இல்லை

எதிர்பார்ப்பு காந்தத்தால்
எதையும்நீ ஈர்த்திடலாம்
உலகமே உனக்குத்தான்
வாஒருகை பார்த்திடலாம்

நாளை நமதே.......

பெரிய துணிக்கடையின் வாசலில் தன் துணிகளை விற்க நம்பிக்கையுடன் நிற்கும் பெரியவரை விட தன்னம்பிக்கை மிக்கோர் உலகில் எவரும் இல்லை !!.


வெற்றியே இறுதியானதல்ல...
தோல்வியே முடிவானதல்ல....
மனம் தளர வேண்டாம்.......
நாளை நமதே.......

நாம் வாழும் இந்த நொடி கூட நிஜம் கிடையாது. நாலை என்பது படைத்தவனிடம் உள்ளது. எனினும் நம்பிக்கையுடன் வாழ கற்போம். நல்லதை மட்டுமே நமக்கும் பிறருக்கும் நாடுவோம்

" iF YOU LIKE THE FLOWER , YOU WILL PLUCK IT
IF YOU LOVE THE FLOWER , YOU WILL POUR WATER "

எதுவும் நிரந்தரமில்லை

எதுவும் நிரந்தரமில்லை
எதற்கும்நீ கலங்காதே
எப்போது மகிழ்ச்சியாய் இரு

உனக்கானது உனக்கே சேரும்
பொறாமையால் யாருடமிருந்தும்
எதையும் பறிக்க இயலாது .

ஏற்றுக்கொள்ளுவதே
மிகச்சிறந்த மனப்பக்கும் .

நிறைய ஆசைப்படு
நிறையத் தேடு
கிடைத்தால் மகிழ்ச்சி கொள்
கிடைக்காவிடின்
உன்னையடையும் யோகம்
அதற்கு இல்லையென
விட்டுச்செல் .

உனக்கான அறிவுரை - உன்
மனசாட்சியிடமே கேள்
அதுவே உன் ஆண்டவன்

இவையனைத்துமே
என் மகிழ்ச்சிக்கு காரணம் ...

ஏற்றுக்கொள்ளுங்கள் எல்லாம்
மகிழ்ச்சியாய் மாறும் ...

மனிதனுக்கு மட்டும் ஏன் இவ்வளவு பிரச்சினைகள்?

தன்னை அறிந்தவன்
ஆசைப் பட மாட்டான்
உலகை அறிந்தவன்
கோபப்பட மாட்டான்
இந்த இரண்டையும்
உணர்ந்தவன்
துன்பப்பட மாட்டான்

- பகவத் கீதை.


மனித வாழ்வில் அனைவருக்கும் மகிழ்ச்சியும், வருத்தங்களும், துக்கங்களும், சோகமும் கூட ஏற்படுகின்றது. வெறும் இன்பம் மட்டுமே மனிதனின் வாழ்வு ஆகி விடுவதில்லை. அப்படி ஒரு வாழ்க்கை அமைந்து விட்டால் பிரச்சினை என்ற சொல்லே அகராதியில் இருந்திருக்காது. அதுபோல் வாழ்வு முழுவதுமே துக்கம், துயரம் என்றால் மனித சமுதாயம் என்ற ஒன்றே இன்று இருந்திருக்காது. ஆனால் ஈ, எறும்பு, புழு, பூச்சிகள், விலங்குகள் இவைகளுக் கெல்லாம் நம்மைப் போல் வாழ்க்கை போராட்டமாக இருப்பதில்லை.

மனிதனுக்கு மட்டும் ஏன் இவ்வளவு பிரச்சினைகள்?

காரணம் மனிதனுக்கு வசதிகள் வேண்டும். பணம் வேண்டும். பிற உறவுகள் வேண்டும். பணத்தினையும், சொத்தினையும் பதுக்கி பதுக்கி சேர்க்கும் குணம் மனிதனுக்கு மட்டுமே உண்டு. இதன் காரணம் பற்றாக்குறை ஏற்படும் காலத்தில் இவை பயன்படும் என்கிறான். வசதி இருக்கும்போது, வரும் முன் காப்போனாக பொருட்களை பத்திரம் செய்யும் மனிதன் தான் மகிழ்ச்சியாய் இருக்கும் போதே துக்கமும், துயரமும் வராதிருக்க ஏதாவது தடுப்பு முறை முயற்சிகளை மேற்கொள்கின்றானா என்ன? செய்வதில்லையே.

அதிக துக்கப்படும் மனிதனிடம் சென்று நீ இடைவிடாது இறைவனது பெயரைச் சொல்லிக் கொண்டு இரு. உன் கஷ்டம் நீங்கும் என்றால் அவனால் இதனைச் செய்ய முடியுமா? முடியாதே.

ஆக கஷ்டங்கள் இல்லாத பொழுதே கஷ்டத்தினை தடுக்கும் முறைகளை மனிதன் அறிய வேண்டும். நன்றாக உடல் இருக்கும் போதே இளம் வயதில் ஆரோக்கியம் இருக்கும் போதே உடலுக்கு முழு மருத்துவ பரிசோதனையை தொடர்ந்து செய்து கொள்ளுங்கள் என்று மருத்துவர்கள் பரிந்துரைப்பது போலத்தான் மனதிற்கும் தேவைப்படுகின்றது. உடலுக்கு உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மருந்து என்பது போல் மனதிற்கு என்ன செய்ய வேண்டும்?

மனம் உணர்ச்சி மயமானது. முணுக்கென்றால் கோபத்தில் கொப்பளிக்கும், மகிழ்ச்சி வந்தால் தலை-கால் புரியாது ஆடும். காலத்திற்கும் நீங்காத மன வலியினையும், வேதனையினையும் தன்னுள்ளே அடக்கி அவஸ்தைபடும் சுயநலமும், பொறாமையும் ஒவ்வொரு திசுக்களிலும் ஏற்றி வைத்திருக்கும். என் வீடு, என் மனைவி, என் குழந்தை என எனது, நான் என்றே நினைக்கும். நினைத்தால் பிறரை மகிழச் செய்யும். பிறரை வார்த்தைகளால் கொல்லவும் செய்யும். தானும் பிறரிடமிருந்து இந்த பாதிப்புகளை பெறும். பொருளால் ஆன சொத்துக்களின் மீதே மோகம் கொண்டு அலையும்.

மனம், மனம், மனம் இந்த மனதால் தான் மனிதன் படும்பாடுதான் வாழ்க்கையை போராட்டமாக்கி விடுகின்றது. உயர்வு மனப்பான்மை, தாழ்வு மனப்பான்மை இரண்டும் அவனுள் சுயநலம், குரோதம், காமம், பொறாமை என தீய குணங்களை அடுக்கி விடுகின்றன. மற்ற ஜீவ ராசிகளுக்கு இது போன்ற பிரச்சினைகள் எதுவும் இருப்பதில்லை. ஏனெனில் அவற்றிற்கு அறிவு என்ற ஒன்று இல்லை. அறிவு இருக்கும் மனிதனோ அதனை முறையாய் பயன்படுத்தவில்லை.

ஒரு நொடி நினைத்துப் பாருங்கள். துன்பமில்லாத மனித வாழ்க்கை எத்தனை சுகமானது என்று. நமக்கென்ன அறிவில்லையா என்று நினைக்கலாம். நாம் படிக்காத படிப்பா? நாம் பெறாத பட்டமா? நாம் பார்க்காத வேலையா? எனலாம்.

நினைத்துப்பாருங்கள், நமக்கு நம்மைப் பற்றிய அறிவு இருக்கின்றதா? இறைவனைப் பற்றிய தெளிவான அறிவு இருக்கின்றதா? நம்மை பற்றி நாம் சரியான எடை போட்டு வைப்பதில்லை. இறைவன் என்றாலே நாம் நினைத்தையெல்லாம் நடத்தி வைக்க வேண்டும். அதற்கு நம்மால் முடிந்த லஞ்சமாக பணம், காணிக்கை என பல வார்த்தைகளில் அவரோடு வியாபாரம் பேசுகின்றோம். ஆக நமது அறிவு கோணலான அறிவாக, விபரீதமான அறிவாக இருக்கின்றது. வாழ்வில் துன்பம், மேடு, பள்ளம் ஏற்படுவது இயற்கை. அதை சலனமின்றி தாண்டுவதுதான் சிறப்பு. அதுதான் அறிவின் பெருமை.

மனம் ஒரு நொடி எதனையும் நினைக்காது அமைதியாய் இருக்க மறுக்கின்றது. தூக்கத்தில் கூட பலருக்கு மனம் ஓடிக் கொண்டே இருக்கின்றது. இதனைக் கட்டுப்படுத்த சுவாமி விவேகானந்தர் கூறுவது ஓர் இடத்தில் அமைதியாய் சிறிது நேரம் உட்கார். உன் மனதினைக் கவனி. நீயே ஆச்சர்யப்படுவாய். என்னென்னவோ நினைக்கும். எங்கெங்கோ ஓடும்.

அப்போது அதனுடன் நீயும் ஓடாதே. நான் மனம் அல்ல நான் அதனை கவனிக்கின்றேன் என்று உன்னுள் நீ சொல்லிக் கொள். அடிக்கடி சொல்லு. இவ்வாறு காலை, மாலை இரு வேளையும் நீ செய்வது வர மனதின் வேகம் அடங்கும். தறிகெட்டு ஓடாது. நாளடைவில் மனம் தானே அமைதிபடும் என்கிறார். மனம் அமைதி பட்டு விட்டால் மனிதனுக்கு மிகப்பெரிய சுமை இறங்கியது போல் இருக்கும். அதே போன்று உன் உடலை நல்ல சக்தியுள்ளவனாக நினை.

இப்படி நீ நினைக்க நினைக்க நீ அது போலவே ஆவாய். சக்தியற்றவனால் இந்த வாழ்வில் இருந்து விடுதலை பெற முடியாது என்றும் கூறியுள்ளார். நீங்கள் ஆன்மீக வழியில் திரும்புகின்றீர்கள் என்பதன் முதல் அறிகுறி நீங்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். எல்லோரையும் மகிழ்ச்சியுடனேயே பார்ப்பீர்கள். ஆக மனதை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். மனம் உங்களை கட்டுப்படுத்தக் கூடாது என்பதனை முதலில் உணர வேண்டும்.

மனம் அடங்கினால் ஐம்புலன்களும் அடங்கி விடும் என்கிறார்கள். நம்மால் ஒரு வேளை காபி இல்லாமல் இருக்க முடியவில்லை. உப்பு சற்று குறைவான உணவினை உண்ண முடியவில்லை. சிறிது நேரம் மின்சாரம் இல்லாவிட்டால் பேன் இல்லை. ஏ.சி. இல்லை, டி.வி.இல்லை என பரிதவித்து போய் விடுகின்றோம். ஆக எந்த அளவு மனக்கட்டுபாடு இல்லாமல் இருக்கின்றோம் என்பது இதிலேயே நமக்குத் தெரிந்து விடுகின்றது.

ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று கூறுகின்றார்கள். உறவுகளின் மீதுள்ள ஆசையும், பணத்தின் மீதுள்ள ஆசையும் தான் இன்றைய உலகின் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கின்றது.

இந்த உடலை விட புலன்கள் உயர்ந்தது.
புலன்களை விட மனம் உயர்ந்தது

மனிதனை விட அறிவாற்றல் மிகவும் உயர்ந்தது என பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது.

ஆக புலன்களை அடக்கினால் மட்டுமே ஒருவன் தன்னை அறிய முடியும். மனதை கட்டுப் படுத்தினால் புலன்கள் அடங்கும். பிரணாயாமம் செய்வது அதாவது மூச்சு கட்டுப்பாடு பயிற்சி மன ஓட்டத்தினை கட்டுப்படுத்தி விடும். இடைவிடாது கடவுளையே நினைப்பது மனதினை கட்டுப்படுத்தி விடும். இவ்வாறு கடும் முயற்சி எடுத்து மனதை அடக்கி ஐம்புலன்களை கட்டுப்படுத்தி வைப்பதனை ‘வைராக்யா’ என்று சொல்வார்கள்.

* எல்லா ஆசைகளையும் துறந்து விட வேண்டும்.
* கெட்டவர்களின் சகவாசமே வேண்டாம்.
* தேவைகளை வெகுவாய் குறைத்துக் கொள்ளுங்கள்.
* யாருடனும் உங்களை ஒப்பிட்டு பார்க்காதீர்கள்.
* பிறரின் பாராட்டுதல்களையும், சுட்டிக் காட்டுதலையும் ஒதுக்கி விடுங்கள்.

எல்லாம் சரி, ஆனால் இதெல்லாம் ஒரு நொடியில் வந்து விடுமா என்ன? பத்து வருடங்கள் ஆனாலும் நாம் இதில் வழுக்கிக் கொண்டேதான் இருப்போம். இதற்கு என்ன செய்யலாம்? இப்படி வழுக்காதிருக்க நம் கையில் ஒரு பலமான ஆயுதம் தேவை. அந்த ஆயுதம் தான் ‘பகவத் கீதை’ எனும் புனித நூல்.

வேத வியாசரால் உருவாக்கப்பட்ட ‘மகா பாரதம்‘ என்ற இதிகாசத்தின் மத்தியில் ஸ்ரீகிருஷ்ண பகவான் அர்ஜூனனுக்கு உபதேசிப்பதாக வரும் இந்த ‘பகவத் கீதை’ மனிதனுக்கு கிடைத்த அரிய பொக்கிஷம். சமஸ்கிருத மொழியில் உருவான இந்நூல் இன்று உலகின் பல மொழிகளில் வெளிவந்துள்ளது. தொன்று தொட்டு பல மகான்களும், பெரியோர்களும் இதற்கு விளக்க உரை கொடுத்துள்ளனர்,

சுமார் ஐயாயிரம் வருடங்களுக்கு முன் எழுதப்பட்டது. பகவத் கீதை 18 அத்தியாயங்களையும் 700 ஸ்லோகங்களையும் கொண்டது. இவ்வத்தியாயங்களில் 6 அத்தியாயங்கள் மனித வாழ்வியல் பற்றி கூறுகின்றது. மனிதனின் குழப்பங்களைப் பற்றி கூறுகின்றன. அடுத்த ஆறு அத்தியாயங்கள் பகவானை பற்றி கூறுகின்றன. அடுத்த ஆறு அத்தியாயங்கள் மனிதன் + பகவான் = ஜீவாத்மா + பரமாத்மா பற்றி கூறுகின்றன.

பகவத் கீதை ஐந்தாவது வேதமாகப் போற்றப்படுகின்றது. புத்தி, ஞானம், மயக்கமின்மை, பொறுமை, சத்தியம், அடக்கம், அமைதி, இன்பம், துன்பம், பிறப்பு, இறப்பு, அஞ்சுதல், அஞ்சாமை, அகிம்சை, திருப்தி, தனம், தானம், மகிழ்ச்சி, இகழ்ச்சி ஆகிய பல வித மனித குணங்கள் உயிர்களுக்கு என்னிடமிருந்தே உண்டாகின்றன.

- பகவத்கீதை 

ஒரு மனிதனின் சராசரி வாழ்க்கை

 தாயின் கறுவறையில் இருந்து
பனிக்குடத்தைக் கிழித்துக்கொண்டு
அழுகையுடன் வெளிவரும் ஜனனத்தின் தொடக்கம்!

கனவுகளை மட்டும் மூளையில் அப்பிக்கொண்டு
கற்பனைகளை, ஆசைகளை சுமக்கத் தொடங்கும்
ஒரு சராசரி மனிதனின் அற்ப வாழ்க்கை!



தாயின் மடியில் சுகம் கண்டு,
தாய்ப்பால் உண்டு,
பண்ணிய பண்டங்கள் தின்று,
சுவைத்தலில் தொடங்கி,
களித்தலில் மயங்கி,
ரசித்தலில் கிறங்கும் மனசு...

திமிர்தல், கற்றல், சுற்றல், பொய், களவு,
ஏமாற்றமும், ஏமாற்று நிமித்தமும்...

பெண் மனது கவர்தலும்,
ஆண் மனம் அறிதலும்...

காதலின் சுகத்தில் கிரங்குதல்
காதல், காமம், திருமணம், தாம்பத்யம், சல்லாபம்...

பேறு பெறுதல், வளர்த்தல்,
சொத்து சேர்க்கை,
பணம் என்னும் பேய்,
பயம் என்னும் பிசாசு,
வாழ்தலுக்கான காரணமின்மை,
வஞ்சகத்தின் அறுவறுப்பு,
இயலாமையின் அழுகை,
தோல்வியின் விரக்தி,
விரக்தியின் வெறுமை,
வெறுமையின் தனிமை,
தனிமையின் சிறுமை...

மதுவின் போதையில் மிதத்தல்,
போதையின் அறிவில் உலறல்,
விடியும்போது முக்கல், முணகல்...

வாழ்க்கை வெறுத்தல்
வெறுப்பை உமிழ்தல்,
அரக்க தணத்திற்கும், இரக்க குணத்திற்கும்
இடையேயான ஊசலாட்டம்...

அடிமை சங்கிலியின் பிணைப்பில் வீழ்தல்,
எழுதல், தடுமாறல், மீண்டும் வீழ்தல்,
ஆன்மாவை இழத்தல்,
சுயமரியாதை அற்றல்..

உறவு, பிரிவு, வெறுப்பு, கசப்பு,
போற்றல், தூற்றல், சபித்தல்,
சகித்தல், நொந்து கொள்ளுதல்,
மோதல், சாதல்!

இதுதானே ஒரு மனிதனின் சராசரி வாழ்க்கை?
தொலையட்டும் சரி....!

வெல்லும்வரை விடமாட்டேன் ...

ஈன்றபொழுதின்பெரிதுவக்கும்தன்மகனைச் சான்றோன்எனக்கேட்டதாய்" மற்றும் "தந்தைமகற்காற்றுநன்றிஅவையத்து முந்திஇருப்பச்செயல்" என்னும் வள்ளுவப்பெருந்தகையின் வாக்கினை மெய்ப்பிக்கும் வகையில் "மகன்தந்தைக்குஆற்றும்உதவிஇவன்தந்தை என்நோற்றான்கொல்எனும்சொல்" என்று கைமாறாக தன்னை ஈன்றெடுத்த பெற்றோருக்கு மட்டும் பெருமை சேர்க்காமல் "மாபெரும் சபையினில் நீ நடந்தால் உனக்கங்கு மாலைகள் விழவேண்டும் , ஒரு மாற்று குறையாத மன்னவனிவனென்று போற்றி புகழ வேண்டும் " என்ற கவியரசு கண்ணதாசனின் கூற்றிற்கு இணங்க பாரதத்தின்பெருமைகளை பாருலகம் பாராட்டும்படி பாங்காக பறைசாற்றி, ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்படுத்திய உலகமே வியக்கும்வண்ணம் பாரதம் போற்றும் பெருமகன் மோடி அவர்களின் மாண்பினை பாராட்டுவதற்கு வார்த்தைகள் ஏது?

வெல்லும்வரை விடமாட்டேன் ...

ஆற்றுவெள்ளத்தில் அடித்துப்போகும்
இலையல்ல நான் ...
பாதைபோட்டு பயணிக்கும்
ஆறுதான்டா நான் ...

என்பாதையை தீர்மானிக்க
எனக்குமட்டுமே உரிமையிருக்கு ...
புதிதாய்வோர் பாதையை
பூமிக்குத்தருவதே எந்தன்கணக்கு ...

" எதிர்காலம் எனக்குத்தான் "

இன்பம்துன்பம் நிரந்தரமில்லையென - நான்
என்றைக்கு உணர்ந்தேனோ ....

அன்றிருந்தே ...

கவலை ...
என்னை கவலைப்படுத்த முடியாமல் கவலைப்படுகிறது ...

வாழ்க்கை

1. உங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதியை நீங்கள் செய்கிற வேலைதான் நிரப்புகிறது. அந்த வேலையில் நீங்கள் மனப்பூர்வமாக திருப்தியடைய ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. அந்த வழி... நீங்கள் செய்கிற வேலையை மனதார நேசித்து செய்வதுதான். உங்களின் நேசத்துக்கு உரிய வேலையை கண்டடையும் வரை தேடிக் கொண்டே இருங்கள். ஒரே இடத்தில் தேங்கி நின்றுவிடாதீர்கள்.

2. உங்களுக்காக ஒதுக்கப்பட்ட நேரம் வரையறுக்கப்பட்டது. மற்றொருவரின் எண்ணங்களில் கருத்துக்களில் வாழாமல் உங்களின் உள்ளுணர்வை பின்பற்றிச் செல்லுங்கள்.

3. கல்லறையில் ஒரு பெரும் பணக்காரனாக இருப்பது எனக்கு ஒரு விஷயமே இல்லை. இரவு உறங்கப் போகும் போது நாம் இன்று ஒரு அற்புதமான விஷயத்தை செய்திருக்கிறோம் என்று சொல்வதுதான் எனக்கு பெரிய விஷயமாகும்.

4. எனக்கு 17 வயதாக இருக்கும் போது சில வார்த்தைகள்  என்னை மிகவும் கவர்ந்தது. " உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் கடைசி நாளாக நினைத்து வாழ்ந்தால், நிச்சயமாக ஒரு நாள் அது நிறைவேறும்' என்பதுதான் அந்த வார்த்தைகள். இந்த வார்த்தைகள் என்னை பெரிதும் பாதித்தது. கடந்த 33 வருடங்களாக தினமும் காலையில் கண்ணாடியில் என்னைப் பார்க்கும் போது "இன்று தான் என் வாழ்க்கையின் கடைசி நாள் என்று எனக்கு நானே  சொல்லிக்கொண்டு என் வேலைகளை ஆரம்பிப்பேன்.

5. சில நேரங்களில் இந்த வாழ்க்கை உங்கள் தலையை செங்கல் கொண்டு அடித்து நொறுக்கும். எந்த நேரத்திலும்  நம்பிக்கையை இழந்து விடாதீர்கள்.

6. வாழ்க்கை என்பது வரையறுக்கப்பட்டது. அன்பு மட்டுமே பல மைல்கள் கடந்து பயணிக்கும்.

7. பொருட்களை, செல்வங்களை தொலைத்து விட்டால் திரும்ப கண்டுபிடித்து விடலாம். ஒன்றே ஒன்றை மட்டும் தொலைத்து விட்டால் மீண்டும் அதை கண்டுபிடிக்கவே முடியாது அந்த ஒன்று தான் வாழ்க்கை.

சோர்ந்து போகாதீர்

என்னை நானே யாரென்று
புரிய எனக்கு தேவைப்படும்
ஓர் ஆயுதம் தான் அவமானம்!
இது உண்மை என்பது போல்,
அனைவரின் வாழ்விலும் ஏதாவது ஒரு சம்பவம் நடந்திருக்கும்.

அவமானங்கள் தான், நம்மை திசைமாறச் செய்கின்றன. அப்படி மாறுகிற திசை சரியாக அமைய வேண்டும். அதில் தான் நாம் கவனமாக இருக்க வேண்டும். அப்படியே அந்தஅவமானத்தில் கூனிக் குறுகி நின்று விடக் கூடாது.

வெற்றியாளர்களின் ஆரம்ப கட்ட அடிதளமே, ஏதாவது ஒரு அவமானத்தில் தான் ஆரம்பித்து இருக்கும். அவர்கள் உயருவதற்கான படிக்கட்டுகளில் இந்த அவமானத்திற்கும், ஓர் இடம் இருந்திருக்கும்.
நம்மை அவமானப்படுத்து வோரை பார்த்து பாதிப்படையக் கூடாது; அவர்களுக்கு நன்றிதான் சொல்ல வேண்டும்.

அவமானம் என்பது தோல்வி என எடுத்துக் கொள்ளக் கூடாது. இது இழிவும் அல்ல; ஒரு பாடம். நம் வாழ்க்கையில் வெற்றிகளுக்கு மட்டுமல்ல; தோல்விகளுக்கும், இந்த மாதிரி அவமானங்களுக்கும் இடம் உண்டு. உங்களை உருவாக்குவதில் அந்த அவமானங்களுக்கு இடமில்லை என்று நினைக்காதீர்கள். ஏற்பட்ட அவமானங்களுக்காக குமைந்து கொண்டிருக்காதீர்கள்.

நம் வாழ்வில் தவறுகள் என்கிற காற்று அடிக்கும்போது, அவமானம் போன்ற புழுதிகள் கிளம்பத் தான் செய்யும்.
நாம் வாழ்க்கையில், மற்றவர்களை விட ஏதாவது ஒரு காரியத்தில் வேறுபட்டு சாதிக்க வேண்டுமெனில், பல அவமானங்களை சந்தித்து தான் ஆகவேண்டும்.

நம் மீது குப்பையையும், சாணத்தையும் கொட்டுகின்றனரே என்று, செடி ஒருநாளும் நம்மைப் போல் ஆதங்கப்படுவதில்லை; அழுது ஆர்ப்பாட்டம் செய்வதில்லை. அந்த குப்பையை தனக்கான உயிர்ச்சத்தாக எடுத்துக் கொண்டு, பூக்களை, காய், கனிகளை தருவதில்லையா! நாம் அந்த செடியை போல இருக்க வேண்டும். மற்றவர்களின் ஏளனங்களையும், அவமானங்களையும் உரமாக ஏற்று, வெற்றி நோக்கி செல்ல வேண்டும்.

உங்களுடைய குறைகளை சொல்லி மற்றவர்கள் இன்று அவமதித்தாலும், நாளை உங்கள் வெற்றியை பார்த்து பூரிப்படைந்து, நல்ல வாழ்த்தையும் அவர்களே சொல்வர்! ஆனால், ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்… ‘நம்மை இவ்வளவு அவமானப்
படுத்துகின்றனரே…’ என்று மட்டும் சோர்ந்து உட்கார்ந்து விடாதீர்கள்.

சோர்ந்து போகாதீர்
அப்படி ஒவ்வொரு துறையிலும் அவமானப்பட்டவர்கள் உட்கார்ந்து விட்டால், சமுதாயத்தில் வெற்றியாளர்களே உருவாக முடியாது; இப்போது இருக்கும் வெற்றி
யாளர்களும் உருவாகியிருக்க மாட்டார்கள்.
எல்லாவற்றிலும் முதல் முயற்சியில் வெற்றி கிடைக்கும் என, எதிர்பார்ப்பது எவ்வளவு முட்டாள்தனமோ, அதைவிட பெரிய முட்டாள்தனம், ஒரு அவமானத்தை கண்டு சோர்ந்து போய், அந்த காரியத்திலிருந்து விலகிவிடுவது.

மனித இனத்தை தவிர, மற்ற ஜீவராசிகள் எதையும் அவமானமாக எடுத்துக் கொள்வதில்லை. மனிதன் தான் ஒரு விஷயத்தில் அவமானப்பட்டால் துவள்வதும், அந்த வேலையே வேண்டாமென ஓடிப் போவதை வழக்கப்படுத்திக் கொள்கிறான்.

ஆகவே, அவமானப்படுவது ஒன்றும் பெரிய தப்பில்லை.

இப்போது சொன்ன விஷயங்கள் அனைத்துமே, நல்ல விஷயங்களுக்கு மட்டுமே… வேறு மாதிரியான காரியங்களுக்கு, நான் பொறுப்பல்ல!

மனித நேயம்

நீ வாழுகிற
இந்த வாழ்க்கையில் ...
நீ வாழ்ந்து கொண்டு இருக்கும்
இந்த நாள் ,
இனி எந்த நாளும் கிடைக்காது .
ஆதலால் ...
இந்த நாளை
இதுவரை எந்நாளும்
அனுபவிக்காதவண்ணம் அனுபவி ...


தனக்கென்ற போதும்-அதுவே
பிறர்க்கென்று வந்த போதும்...
இரண்டையும் ஒன்றாய் நினைத்து,
துடிக்கின்ற மனமும்,
கண்ணீர் வடிக்கின்ற கண்களும்,
இருக்கின்ற வரை..
நிலத்தில் தழைத்து நிற்கும்,
மாண்போடு மனித நேயம்!!!


இனி காந்தி என்றும்
கார்ல் மார்க்ஸ் என்றும்
யாரும்
பிறக்கப்போவதில்லை
மிச்சம் இருக்கும்
நீயும் நானும்தான்
எதாவது
செய்தாக வேண்டும் .

வெற்றி பெற்ற மனிதர்கள் கடைப்பிடிப்பவை

வெற்றி பெற்ற மனிதர்களிடம் ஒரு அமைதியைக் காணலாம். அவர்களின் பேச்சில் ஒர் தெளிவை பார்க்கலாம். முக்கியமாக அவர்கள் தேவையற்றதை பேசவோ அல்லது செய்யவோ மாட்டார்கள்.

............வெற்றி பெற்ற மனிதர்கள் கடைப்பிடிப்பவை..............

‪#‎தங்கள்‬ சுயமதிப்பை உணர்ந்தவர்களாக இருப்பார்கள். தங்கள் இலக்கில் தெளிவு கொண்டு இயங்கிக் கொண்டிருப்பார்கள். இருந்தாலும் எந்திரத்தனமாக செயல்பட மாட்டார்கள்.

‪#‎மற்றவர்களுடன்‬ ஒப்பிட்டு பார்க்க மாட்டார்கள். மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்ன நினைப்பார்கள் என்று யோசித்து தனது செயல்பாடுகளை முடக்கிக் கொள்ள மாட்டார்கள்.

‪#‎எந்த‬ ஒன்றுடனும் பலப்பரிட்சை நடத்தி போராடிக் கொண்டிருக்க மாட்டார்கள். ஒரு விஷயத்தை தீவிரமாக போராடிக் கொண்டிருப்பது மற்றவரை பாதிக்கும் என்பது அவர்கள் அறிந்த ரகசியம் ஒவ்வொன்றிற்கும் அவசியமான அளவு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

‪#‎குறை‬ காணும் பண்பை கொண்டிருக்க மாட்டார்கள். நேர்த்தியை மட்டுமே எதிர்பார்த்தால் குறைகளும், தோல்விகளும் பெருகும் என்பது அவர்கள் அறிந்ததே. குறைகளின் பின்னால் ஒடினால் வெற்றியை இழக்க நேரிடும் என்பதையும் உணர்ந்தவர்களாக செயல்படுவார்கள்

‪#‎நடந்ததை‬ எண்ணி வருத்தப்பட்டு கொண்டிருக்க மாட்டார்கள். அதே பிரச்சனையில் மூழ்கியிருக்க மாட்டார்கள்.

‪#‎எதிர்மறை‬ மனிதர்களுடன் சூழ்ந்திருக்க மாட்டார்கள் நல்ல பண்புடையவர்களை நாடிச் செல்வார்கள். நல்ல விஷயங்களை தேடிச் சேகரிப்பார்கள்.

‪#‎மனதுக்கு‬ இறுக்கம் தரும் போராட்டம் தரும் விஷயங்களை அனுமதிக்க மாட்டார்கள். அழுத்தத்தை மனதில் வைத்திருப்பது கோபம், விரோதம், பகை, அழிவு என ஏராளமான விளைவுகளை உண்டு பண்ணும் என்பதை அவர்கள் அறிந்திருப்பார்கள்.

‪#‎மகிழ்ச்சியில்‬ திளைத்திருக்க மாட்டார்கள். அதற்காக மகிழ்ச்சியை தடை செய்து வாழ மாட்டார்கள்

‪#‎பிறரின்‬ தவறுகளை எளிதாக மன்னித்து விடுவார்கள். ஆனால் எதையும் மறந்து விடுவதில்லை.

வாழ்க்கை

போராட்டம் இல்லாத வாழ்க்கை உப்பில்லாத உணவு போன்றது. அதில் சுவை இருக்காது! என்றார் உலக உத்தமர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம். போராட்டம் என்பதை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று அகப்போராட்டம் இன்னொன்று புறப்போராட்டம்.
அகப்போராட்டம் என்பது நமது ஆக்க சிந்தனைகளுக்கும் எதிர்மறை சிந்தனைகளுக்கும் இடையே நொடிகள் தோறும் நடப்பெறும் போராட்டத்தை குறிக்கும். அதிகாலை எழுந்து உழைஅகிலம் உனக்கு! என்று சிந்தனை நம்மை எழுப்ப முயலும் போது, எல்லம் விதிபோல்தான் நடக்கும் படுத்து உறங்கு!" என்று எதிர்மறை எண்ணம் இழுத்து மூடும்!
இதுபோலத்தான், ஒவ்வொன்றும் நிகழ்கின்றது. ஆதாவது முயற்சி செய்! முடியாது உலகில் இல்லை! என்று ஆக்க எண்ணங்கள் உத்வேக சிறகுகளைக் கொடுக்கும்போது, எதிர்மறை எண்ணம் வேண்டாம். சும்மா இருப்பதே சுகம் என்று சோம்பல் விலங்குகளை எடுத்து நமது கைகளில் மாட்டும். மதித்து நட, உயர்வுக்கு உழைப்பு மட்டும் போதாது, மற்றவர்கள் ஒத்துழைப்பும் வேண்டும்! பணிதான் உன்னை உயர வைக்கும் என்று ஆக்க சிந்தனை அறிவுறுத்தும் போது; நீ தான் சிறந்தவன் மற்றவன் எல்லாம் மடையன்&' என்று அகந்தை நெருப்பை பற்ற வைத்து தலையில் கனத்தை ஏற்றும்! எதிர்மறை எண்ணம்.

ஆகவே, அகப்போராட்டத்தில், ஆக்க சிந்தனைகளை மட்டுமே வெல்ல வைக்கும் வைராக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். அகப்போராட்டத்தில் வெற்றி பெற்றால், வெளியில் எதிர்வரும் எந்த சவாலுக்கும் சவால்விட்டு வெற்றி வாகை சூட்ட முடியும்.

அகப்போராட்டத்தில் வெற்றி பெறுவதற்கு சில யோசனைகள்:

1. உங்களால் முடியும் என்று முதலில் நம்புங்கள். ஏனென்றால் நம்பிக்கைதான் வாழ்க்கை.

2. ஒவ்வொரு வேலையையும் ஒத்திப் போடாமல், சாக்குப் போக்குச் சொல்லாமல் உடனுக்குடன் செய்யும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் காரணங்கள் சொல்பவர்கள் காரியங்கள் செய்வதில்லை. காரியங்களைச் செய்பவர்கள் காரணங்களை சொல்வதில்லை.

3. செய்ய வேண்டிய பணிகளைப் பட்டியலிட்டு செய்து முடிப்பதுடன், அவற்றை முடித்ததும் உங்களை நீங்களே பாராட்டி ஊக்கப்படுத்திக் கொள்ளுங்கள்! ஏனென்றால், சுயஊக்குவிப்பே சிறந்த பாராட்டு.

4.மனம் தளர்கின்றபோது, இதுவரையில் நீங்கள் பெற்ற வெற்றிகளை அடைப்போடுங்கள். ஏனென்றால் வெற்றுமனமாக இருப்பதைவிட வெற்றி மனத்தோடு இருப்பதே சிறந்தது.

5.உங்கள் முயற்சிச் சிறகுகளை வெட்டி வீழ்த்தும் முட்டாள்களிடமிருந்து விலகியே இருங்கள்.

6.வெற்றி என்பது எனது பிறப்புரிமை என்று மனதுக்குள்ளாக முழங்கிக் கொண்டே சவால்களுக்குச் சவால் விடுங்கள்.

தமிழ்

# “இலக்கியம் வாழ்வின் கண்ணாடி என்றும் காலத்தைக் காட்டும் கண்ணாடி என்றும்” எதனைக் கூறுவர் – சங்க இலக்கியம்.

# 99 வகை மலர்களின் வருணை அமைந்து வரும் பாடல் – மலைபடும்கடாம்

# பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள அறநூல்களின் எண்ணிக்கை – 11

# ”முடி பொருள் தொடர்நிலைச் செய்யுள்” என்று அழைக்கப்படுவது – சீவக சிந்தாமணி

# வேளாண் வேதம் என அழைக்கப்படும் நூல் – நாலடியார்

# உத்திரவேதம் என அழைக்கப்படும் நூல் – திருக்குறள்

# திருக்குறளில் தனமனிதனது வாழ்வின் மேன்மையைக் குறிக்கும் பகுதி – அறத்துப்பால்

# காலந்தோறும் தமிழ் சங்க காலத் தமிழ், பல்லவர் காலத் தமிழ் என வழங்கப்படுகிறது.

# மூவேந்தர்களின் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தோர் – பாண்டியர்

# தொல்காப்பியம் பொருளாதிகாரம் எதற்கு இலக்கணம் கூறுகிறது – அகத்திணை, புறத்திணை.

# தொல்காப்பியம் – முழுமையாகக் கிடைத்த எழுத்து சொல்பொருள் நூல்.

# தினையியல், களவியல், கற்பியல் பொருளியல் ஆகிய நான்கும் உரைப்பது – அகப்பொருள்.

# பூதத்தாழ்வார் பிறந்த இடம் – காஞ்சிபுரம்

# நம்மாழ்வாரின் சீடராகக் கருதப்படுபவர் – திருப்புளி ஆழ்வார்.

# சுந்தரர் பிறந்த ஊர் – திருமுனைப்பாடி

# சுந்தரரின் இயற்பெயர் – நம்பி ஆரூரர்

# ”வையம் தகளியாக, வார்கடலே நெய்யாக” என்று முதல் திருவந்தாதியைப் பாடியவர் – பொய்கையாழ்வார்.

# தமிழ்மாறன் என்று அழைக்கப்படுபவர் – நம்மாழ்வார்

# புறப்பொருளுக்கு இலக்கணம் உரைக்கும் நூல் – புறப்பொருள் வெண்பாமாலை

# தமிழில் வேர்ச்சொல் ஆராய்ச்சியில் மிகவும் புகழ் பெற்றவர் – தேவநேயப் பாவாணர்

# இடைச்சங்கத்தின் கால எல்லை – 3700 ஆண்டுகள்

# இடைச்சங்கம் இருந்த இடம் – கபாடபுரம்

# அறிவுடை நம்பியைப் பாடியவர் – பிசிராந்ததையார் பாண்டியன

# தலைமுடி நரைக்காததற்கு விளக்கம் தந்தவர் – பிசிராந்தையார்

# சோழ மன்னனின் உள்ளம் கவர்ந்த நண்பர் – பிசிராந்ததையார்

# காரைக்கால் அம்மையார் அந்தாதித் தொடையில் பாடியுள்ள பாடல்கள் – அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணி மாலை

# காரைக்கால் அம்மையாரின் பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ள திருமுறை – பதினோராம் திருமுறை

# பண்பட்ட திராவிட மொழிகளில் தொன்மையானது – தமிழ்

# பத்துப்பாட்டு நூலில் மிகவும் பெரிய நூல் – மதுரைக் காஞ்சி

# பொருநராற்றுப்படையைப் பாடியவர் – முடத்தாமக் கண்ணியார்.

# மலைபடுகடாம் என்னும் இலக்கியம் – கூத்தாற்றுப்படை

# முல்லைப்பாட்டைப் பாடியவர் – நப்பூதனார்.

# தமிழ் நிலைபெற்ற மதுரை எனக்கூறும் நூல் – சிறுபாணாற்றுப்படை

# உலா நூல்களுள் மிகப் பழமையைனது – திருக்கைலாய ஞான உலா

# தூது இலக்கியத்திற்குரிய யாப்பு – கலிவெண்பா

உலகத்தின் முதல் தத்துவஞானி


சாக்ரடீஸ்

உலகத்தின் முதல் தத்துவஞானி என போற்றப்படுபவர் சாக்ரடீஸ். மதவாதிகளை நோக்கி “கடவுள் என்பவர் யார்?” எனக் கேள்வி கேட்ட முதல் பகுத்தறிவாளர். உலகில் எந்த மதமும் தோன்றாத காலக்கட்டத்திலேயே மனித அறிவின் தோற்றம், தர்க்க சாஸ்திரம் ஆகியவற்றில் திறன் பெற்று விளங்கியவர்.

 ''எனக்கு எதுவும் தெரியாது என்பது எனக்கு தெரியும், ஏனெனில் நான் ஒரு அறிவாளி'' என்பது சாக்ரடீஸின் புகழ்பெற்ற தத்துவம்.

பிளாட்டோ

க்ரீஸில் கி.பி 348-ம் ஆண்டுகளில் வாழ்ந்த தத்துவஞானி. பிளாட்டோவின் தத்துவங்கள்தான் 2400 ஆண்டுகளாக உலகத்தை ஆண்டு வருகிறது. சாக்ரடீஸின் மாணவரான பிளாட்டோ மேற்கத்திய அறிவியல், வாழ்வு மற்றும் கணித தத்துவத்தில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியவர். கண்மூடித்தனமான மத நம்பிக்கைகளை உடைத்ததில் ப்ளாட்டோவின் தத்துவங்களுக்கு பெரும் பங்கு உண்டு.
 
'உள்ளடக்கத்துடன் வாழ்வதே மிகப்பெரிய செல்வம். நல்லவர்களுக்கு சட்டங்கள் தேவையில்லை,  ஏனெனில் அவர்கள் பொறுப்புடன் வாழ்வார்கள். கெட்டவர்கள் தங்களுகே உரிய சட்டத்தை உருவாக்கிக்கொள்கிறார்கள்'' என்பது பிளாட்டோவின் புகழ் பெற்ற தத்துவம்.


அரிஸ்டாட்டில்

மனிதன், இறைவன், அரசியல்,  மூன்று பிரிவுகளையும் அலசி ஆராய்ந்து தமது தத்துவ தரிசனமாக உலக்கு வங்கியவர் அரிஸ்டாட்டில். இவர் பிளாட்டோவின் மாணவர். மாவீரனாகத் திகழ்ந்த அலெக்சாண்டருக்கு பன்னிரண்டு ஆண்டுகள் நண்பராகவும், ஆசிரியராகவும் இருந்தவர் அரிஸ்டாட்டில்.

“இந்த உலகம் இறைவனால் தோற்றுவிக்கப்படவில்லை. ஆனால் இந்த உலகை இயக்குபவன் இறைவனே!” “மனிதன் தனிமனிதச் சிந்தனை கொள்ளாமல், சமூகச்சிந்தனையோடு வாழ வேண்டும்'' என்கிறார்  அரிஸ்டாட்டில்

கார்ல் மார்க்ஸ்

பொதுவுடைமைக் கொள்கைகளின் மூலவர்களுள் முக்கியமானவர் கார்ல் மார்க்ஸ். பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையில், வரலாற்றை ஆராய்ந்து சொன்ன இவரது தத்துவங்கள், சமூக பொருளாதார அரசியல் அரங்கில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியது.

 ''மூலதனம் இறந்த தொழிலாளரை போன்றது. இது உயிருள்ள தொழிலாளரின் உழைப்பை உறிஞ்சும் வாழ்கிறது'' என்பது மார்க்ஸ்சின் கருத்து.

டார்வின்

'மனிதன் எப்படித் தோன்றியிருப்பான்?' என்ற பன்னெடுங்காலமாக தொங்கி நின்ற கேள்விக்கு தெளிவான விடையை சொன்னவர். மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியை பல நூற்றாண்டுக்கு முன்பே தெளிவுபடுத்திய வகையில், பல ஆராய்ச்சிக்கான கதவுகளை அகல திறந்து வைத்த பெருமைக்குரியவர்.

''மனிதன் ஒரு மணி நேரத்தை வீணாக்கிறான் என்றால், அவன் வாழ்கையில் மதிப்பை உணரவில்லை என்று அர்த்தம்'' என்கிறார் டார்வின்


விவேகானந்தர்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவராக திகழ்ந்தவர் விவேகானந்தர். இவரின் கருத்துக்கள் இளைஞர்களிடையே மாபெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. இவர் இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார்.

'' நீங்கள் யாருக்கும் உதவி செய்ய முடியாது. சேவை மட்டுமே செய்ய முடியும்'' என்பது விவேகானந்தரின் புகழ் பெற்ற கருத்து.

வள்ளலார்

வள்ளலார் என்ற இராமலிங்க அடிகளார் ஓர் சிறந்த தத்துவ ஞானி. சாதி சமய வேறுபாட்டுக்கு எதிரான தமது நிலைப்பாடு காரணமாக ஆன்மீகவாதிகளாலே விமர்சனத்திற்கு உள்ளானவர். ''அறியாமை என்னும் மாயத்திரைகள் நம்மை விட்டு விலகினால் அருட்பெருஞ்சோதியான ஆண்டவரை நாம் தரிசிக்கலாம்'' என்பது வள்ளலாரின் வாதம்.

ஓஷோ

சிறு வயதிலிருந்தே தியானத்தில் ஈடுபட்ட ஓஷோ, தன்னுடைய இருபத்தொன்றாவது வயதில் ஞானம் அடைந்தார். ஞானமடைதல் என்பது, முழுமையான தன்னுணர்வு அல்லது விழிப்பு உணர்வு நிலை என்பதை குறிப்பதாகும். கெளதமபுத்தர், கபீர், ரமணர் மற்றும் பலர் இப்படி ஞானம் அடைந்தவர்கள்தான்.

''கடவுள் உன்னிடமிருந்து தன்னை எப்போதும் மறைத்துக் கொள்வதில்லை.நீ தான் உன்னுடைய கோப தாபங்களால் அவரைக் காணமுடியாதபடி கண்களை மூடி வைத்துக் கொள்கிறாய்'' என்கிறார் ஓஷோ.

புத்தர்

தத்துவ ஞானி கௌதம புத்தரை அடிப்படையாகக்கொண்டு பௌத்த சமயம் உருவாக்கப்பட்டது. கௌதமருடைய வாழ்க்கையையும், வழிகாட்டல்களையும் புத்த மதம் ஏற்றுக்கொண்டுள்ளது.
''பிராத்தணைகளை விட மிக உயர்ந்தது பொறுமை தான்'' என்பது புத்தரின் புகழ்பெற்ற பொன்மொழி.

மகாவீரர்

சமண சமயத்தின் மையக் கருத்துக்களை நிறுவிய துறவி. மூன்று ரத்தினங்கள் என அழைக்கப்படும் ‘நன்னம்பிக்கை, நல்லறிவு, நற்செயல்’ என்ற போதனையை போதித்தவர்.அவருடைய போதனைகளும், தத்துவங்களும் இன்றும் உலகம் முழுவதும் அனைத்துத் தரப்பு மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு போற்றப்படுகிறது.

''கவனமுடன் செயலாற்றுங்கள்..நல்ல விஷயங்களில் மட்டும் மனதை திருப்புங்கள்.'' என்பது மகாவீரரின் அறிவுரை.

விவேகானந்தர்

கேள்வி கேள்:

இளம் வயதில் அம்மாவின் அரவணைப்பில் வளர்ந்தார் நரேந்திரன். ‘கரடி மோதிரம் போட்டால், செல்வந்தர் ஆகலாம்’ என்று பிறர் சொன்னதை அம்மாவிடம் கேட்டபோது, ‘அதை விற்கிறவன் ஏன் வறியவனாக இருக்கிறான்?’ என்று கேட்டார் அம்மா. ‘எதையும் பகுத்தறிந்து ஏற்க வேண்டும்’ என்று புரிந்துகொண்டார் விவேகானந்தர்.

உன்னை நம்பு:

ஒருநாள் குரங்குக் கூட்டம் துரத்தி வந்தது. எல்லாரும் பயந்து ஓடினார்கள். திரும்பி நின்று எதிர்த்தார் நரேந்திரன். பின்வாங்கின குரங்குகள். ‘தன்னை நம்ப வேண்டும்’ என்று உணர்ந்தார். ‘கடவுளை நம்பாதவனை நாத்திகன் என்றது பழைய மதம். தன்னை நம்பாதவனை நாத்திகன் என்பது புதிய மதம்’ என்று முழங்கினார்.

பயணம் செய்:

வாழ்நாள் முழுக்கப் பயணம் செய்வதில் பேரின்பம் கண்டார் விவேகானந்தர். மைசூர் அரசர், ”என்ன உதவி வேண்டும்?” என்று கேட்டபோது… ”திருச்சூருக்கு டிக்கெட் எடுத்துக் கொடுத்தால் போதும்” என்றார். அவர் சென்னையில் தங்கிய இடம், தற்போது விவேகானந்தர் இல்லம் எனவும், குமரியில் தவம் செய்த இடம், விவேகானந்தர் பாறை எனவும் அழைக்கப்படுகிறது.

அன்பு செய்:

‘சக மனிதர்களை நேசிக்கவும் உதவவும் வேண்டும்’ என்று வலியுறுத்துவார். அதற்காக, ‘ராமகிருஷ்ண மடம்’ என்ற அமைப்பை நிறுவினார். ‘உதவி வேண்டுபவர்களுக்கு உங்கள் கரங்களை நீட்டி உதவுங்கள். அப்படி முடியாவிட்டால், உதவுபவர்களை ஆசீர்வதித்து அனுப்புங்கள்’ என்பார்.

வாசிப்பை நேசி:

வேதங்கள், உலக இலக்கியங்கள், பைபிள் என்று ஓயாமல் வாசிப்பார். பிரிட்டானிகா கலைக்களஞ்சியத்தை ஒரே நாளில் படித்துவிட்டார். அதில் எந்தக் கேள்வி கேட்டாலும் பதில் சொல்லி அசத்தினார் விவேகானந்தர்.

தேசம் காத்தல் செய்:

தேசத்தின் பெருமைக்கும் அதன் உச்சத்துக்கும் உழைக்க, இளைஞர்களுக்கு அறைகூவல் விடுத்தார். ‘எழுமின்! விழிமின்! குறிசாரும் வரை நில்லாது செல்மின்!’ என்கிற தாரக மந்திரத்தைத் தந்தார். ‘ஆங்கிலேயர்கள் என்னைக் கைதுசெய்து சுடட்டும். தேசத்தின் பெருமைக்காக, எந்த வகையான தியாகமும் செய்யலாம்’ என்று முழங்கினார்.

உடலினை உறுதி செய்:

உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் கவனமாக இருந்தார் விவேகானந்தர். நீச்சல், மல்யுத்தம், சிலம்பம், உடற்பயிற்சிகளைப் பழகினார். ‘இளைஞர்கள், உடல் மற்றும் உள்ளத்தின் வலிமையில் கவனம் செலுத்த வேண்டும்’ என்பது அவரின் முக்கியமான அறிவுரை. இலக்கே முக்கியம்: கலிஃபோர்னியாவில் முட்டை சுடும் போட்டி நடைபெற்றது. யாராலும் சரியாகச் சுட முடியவில்லை. சுவாமி துப்பாக்கியை வாங்கி, ஆறு முட்டைகளையும் குறி தவறாமல் சுட்டார். ‘இதுதான் எனக்கு முதல் அனுபவம். நீங்கள் வெல்லப்போகும் பரிசில் கவனம் செலுத்தினீர்கள். நான் இலக்கில் மட்டும் கவனம் செலுத்தினேன்’ என்றார்.

அன்பால் வெல்க:

அமெரிக்காவின் சிகாகோ நகரில் அன்பு பொங்க, ”சகோதர சகோதரிகளே!’ என்றதும் அவையே எழுந்து நின்று கைதட்டியது. ‘உங்களை மாதிரி அறிவாளியும் என்னை மாதிரி அழகியும் திருமணம் செய்துகொண்டால், அற்புதமான மகன் பிறப்பான்’ என்று பெண் ஒருவர் சொன்னபோது, ‘என்னையே தங்களின் மகனாக ஏற்றுக்கொள்ளுங்கள் அன்னையே!’ என்றார் விவேகானந்தர்.

எளியோர் நலம் போற்று:

ஏழைகள், ஒடுக்கப்பட்டோர், விதவைகள் என்று எல்லாருக்காகவும் குரல்கொடுத்தார். ‘தீண்டாமையை நீக்காவிட்டால், இந்து மதம் காணாமல் போய்விடும்’ என்றார். ‘ஒரு விதவையின் கண்ணீரைத் துடைக்க முடியாத, ஓர் அநாதையின் வயிற்றில் கவளம் சோற்றை இட முடியாத கடவுளிடமோ, மதத்தின் மீதோ எனக்கு நம்பிக்கை கிடையாது’ என்று தைரியமாகச் சொன்னார்.

தலைமை பதவி

உங்கள் அலுவலகத்தில் எத்தனையோ பேர் வேலை செய்யலாம். ஆனால் அனைவருக்குமே தலைமை பதவியை அடைய வேன்டும் என்பதே இலக்காக இருக்கும். ஒரு நிறுவனத்தில் சி.இ.ஓ வாக அனைவரும், ஆசைப்படும் போது ஒருவர் மட்டுமே சிஇஓ ஆகிறார் . அதற்கு என்ன காரணம் என்று பார்த்தால் அவர் மற்றவர்களிடமிருந்து தனித்துத் தெரிவதுதான். இந்தத் திறனை வளர்த்துக்கொண்டால் மட்டுமே தலைவனாக முடியும். நீங்கள் சிறந்த தலைவனாக இருக்கு உங்களிடம் கட்டாயம் இந்த 10 பண்புகள் இருக்க வேண்டும்.

முடிவெடுப்பதில் உங்களின் பங்களிப்பை அதிகப்படுத்துங்கள்!

அலுவலகம் சில சமயங்களில் எடுக்கும் ஒரு முடிவு சிறப்பானதாக இல்லாமல் இருக்கலாம். அதனை நிர்வாகத்துக்குப் பயந்து மற்றவர்களும் அதனை ஆதரிக்கலாம். ஆனால், உங்களுக்குச் சரியில்லை என்றால் அதனைத் தெரிவிக்கத் தயங்காதீர்கள். அப்படியே உள்ளதைத் தெரிவியுங்கள். முடிவுகளில் உங்களின் பங்களிப்பை அதிகரியுங்கள், அது உங்களின் தலைமைப் பண்பை வெளிச்சம்போட்டு காட்டும். அலுவலக நிர்வாகமும் இதனைத்தான் விரும்பும். இதற்கு சிறந்த உதாரணம் இந்திய ரிசர்வ் வங்கி கவர்னராக இருக்கும் ரகுராம் ராஜன். அவரது பணியில் அரசின் குறுக்கீடு இருந்து தவறை சுட்டிக்காட்ட அவர் தயங்கவில்லை. அது தான் அவரை சிறந்த தலைவனாக உலகிற்கு காட்டியது.

புதிய உத்திகளை வகுப்பவராக இருங்கள்!

எல்லாரும் செய்வதையே செய்பவர் தலைவனாக இருக்க முடியாது. தலைவன் என்பவர் புதிதாக ஏதாவது ஒன்றை செய்து அதன்மூலம் தன்னைத் தனித்துக் காட்டிக்கொள்ள வேண்டும். அப்படி காட்டிக்கொள்ளாவிட்டால் அவர்கள் தலைவனாக நீண்ட காலம் நிலைக்க முடியாது. அதற்குப் புதிய உத்திகளைக் கையாள வேண்டும். புதிய உத்திகள் ஒருவேளை கண்டுபிடிக்கப்படவில்லை எனில், இன்று நம் கைக்குள் செல்போன் வடிவில் கணினி வந்திருக்காது. ஓர் அறை அளவிலான கணினியாகவே இருந்திருக்கும்.




அப்டேட் ஆகுங்கள்!

உங்களை நீங்களே அப்டேட் செய்து கொள்ளுங்கள். நீங்கள் எவ்வளவு வயதானவராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆறு வயது குழந்தை இன்றைக்கு இணையதளத்தில் அப்டேட்டாக இருக்கும்போது, அந்தப் போட்டியைச் சமாளிக்க அறுபது வயதுகாரரும் கணினி பயில வேண்டியுள்ளது. நீங்கள் அப்டேட் ஆகவில்லை எனில், உங்களைவிட அப்டேட்டாக உள்ள ஒருவர் உங்களைக் கடந்து வெற்றியடைய முடியும். இன்றைக்கு என்ன செய்யலாம் என்று யோசிக்கும் தொழிலதிபர்களைவிட, இன்றைக்கு என்ன தேவை என யோசிக்கும் தொழிலதிபர்கள்தான் அதிகம். அப்படி யோசிப்பதால்தான் இன்றும் அவர்கள் தலைவர்களாகத் தங்களை மேம்படுத்திக் கொள்கின்றனர்.

ரிஸ்க் எடுங்கள்!

சில விஷயங்களில் உங்களைச் சுற்றியுள்ள குழுக்கள் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று கூறுவது உண்டு. ஆனால், அதனைப் பற்றி கவலைப்படாமல் உங்களுக்கு சரி என்றுபட்ட விஷயத்தில் ரிஸ்க் எடுங்கள். ரிஸ்க் எடுக்கும் விஷயத்தை நன்கு புரிந்துகொண்டு இதனைச் செய்தால் வெற்றி மட்டும்தான் கிடைக்கும் என்ற நம்பிக்கை உங்களிடம் இருந்தால் எவ்வளவு பெரிய ரிஸ்க்கையும் எடுங்கள். அது உங்களது தலைமைப் பண்பை அதிகரிக்கும். ரிஸ்க் எடுப்பது எவ்வளவு வெற்றியை தரும் என்பதற்கு உதாரணம், அனைவரும் இன்டர்நெட் என்ற விஷயத்தைத் தேடலுக்குப் பயன்படுத்தியபோது, இதனை ஒரு சமூக விஷயத்துக்குப் பயன்படுத்த முடியும் என்று களமிறங்கிய மார்க் ஜூக்கர் பெர்க் எடுத்த ரிஸ்க் இன்று, ஃபேஸ்புக் இல்லாமல் இருந்தால் இயங்க முடியாது என்ற மனிதர்களை உருவாக்கியுள்ளது.

குறுகிய இலக்குகளில் திருப்தி அடையாதீர்கள்!

ஒரு வேலைதான் ஒதுக்கப்பட்டது, அதனைச் செய்துமுடித்துவிட்டேன் என்று குறுகிய இலக்குகளில் திருப்தி அடையாதீர்கள். அலுவலகம் ஒரு விஷயத்தைக் குறுகிய நேரத்தில் அவசரமாக முடிக்கத் திட்டமிட்டால், அதனை முடிப்பவர் நீங்களாக இருக்க வேண்டும் என நிர்வாகம் முடிவெடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருங்கள். இந்தச் சூழலை நீங்கள் உருவாக்கிவிட்டால் உங்களது ஆளுமைத்திறன் மீதான நம்பிக்கை அதிகரிக்கும், அது உங்களைத் தலைவனாக்கும்.





சுய மதீப்பீடு தேவை!

உங்களுக்கு என்று ஒரு மதிப்பீட்டையும், இலக்கையும் நிர்ணயித்துச் செயல்படுங்கள், அது கட்டாயம் நிறுவனத்தின் இலக்கைவிட சற்று அதிகமாக இருக்கும்படி அமைத்து, அதனை நீங்கள் அடையும்போது உங்கள் திறனும், இலக்குகளைக் கையாளும் விதமும் உங்களது தலைமைப் பண்பை தனித்துக் காட்டும். எல்லாரும் கூகுளில் தங்கள் இணையதளம்தான் முதலில் தோன்ற வேண்டும் என்று நினைக்கும்போது, அவர்கள் இணையதளத்தில் தேட என் இணையதளத்துக்குத்தான் வர வேண்டும் என்று யோசித்த கூகுள் நிறுவனர்களின் தலைமைப் பண்புக்கு இது ஒரு சிறந்த உதாரணம்.

அலுவலகத்தில் கற்றுக்கொள்ளுங்கள்!

அலுவலகத்துக்குச் செல்கிறேன். அங்கு எனக்கு வேலை ஒதுக்கப்படுகிறது. அதனைச் சிறப்பாகச் செய்கிறேன் என்று மட்டும் இல்லாமல், அலுவலகச் சூழலில் அதிக மனிதர்களை உயர்மட்ட அதிகாரிகள் எப்படிக் கையாளுகிறார்கள், வேலையைத் தட்டிக்கழிக்கும் நபரிடம் எப்படி வேலை வாங்கப்படுகிறது என்று நுணுக்கமான விஷயங்களைக் கற்றுக்கொள்ளுங்கள். நேர மேலாண்மை, அலுவலக விதிமுறைகளைப் பின்பற்றுவது போன்ற செயல்களில் இருந்து ஆளுமை பண்பை கற்றுக்கொள்ளுங்கள். அது நீங்கள் தலைவனாகும்போது உங்களது வேலையை எளிமையாக்கும்.

குழுவாகச் செயல்படுங்கள்!

நான் சிறப்பாக வேலை செய்கிறேன் என்று மட்டும் எண்ணாமல், உங்கள் குழுவில் சற்று குறைவான நிலையில் இருக்கும் சக ஊழியரையும் இலக்குகளை நோக்கி இழுத்துச்செல்லுங்கள்.ஒரு குதிரை வண்டியில் இரண்டு குதிரைகளும் சம வேகத்தில் பயணித்தால்தான் வெற்றி என்பதால் மற்றவர்களையும் உங்கள் வேகத்துக்கு மாற்ற முயற்சி செய்யுங்கள். அப்படி செய்யும்போது உங்கள் தலைமைப் பண்பும், குழுவின் வேலைதிறனும் தனித்துத் தெரியும்.



இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்
நீங்கள் ஸ்டீவ் ஜாப்ஸா... மார்க் சக்கர்பெர்க்கா... சுந்தர் பிச்சையா?

நீங்கள் ஒரு நிறுவனத்தில் பணி புரிபவரோ அல்லது சுயதொழில் செய்பவரோ... உங்களுக்கென பிரத்யேக தலைமைப் பண்பு இருக்கும். அதை மேலும் மேலும் மெருகேற்றவே முனைவீர்கள். உங்கள் தலைமைப் பண்பை நீங்கள் மெருகேற்ற சில சாதனையாளர்களை முன்னுதாரணமாகக் கொள்ளலாம். அல்லது யாரையும் பின் தொடராமல் ’என் வழி தனி வழி’ என நடை போடலாம். ஆனால், எந்த வழியில் பயணித்தாலும், மேலே குறிப்பிட்ட மூன்று சாதனையாளர்களின் சாயல்களில் சில எவரிடமும் இருக்கும். அப்படி உங்களிடம் இவர்களில் எவரின் சாயல் அதிகம். நீங்களே கண்டுபிடியுங்களேன்! What kind of leader are you?What kind of leader are you? | நீங்கள் ஸ்டீவ் ஜாப்ஸா... மார்க் சக்கர்பெர்க்கா... சுந்தர் பிச்சையா? - VIKATAN



பொறுப்பை உணர்ந்து செயல்படுங்கள்!

வேலை செய்வது மட்டும்தான் என் வேலை. அதனால் வரும் லாபம், நஷ்டம் எல்லாம் நிர்வாகம் சம்பந்தப்பட்டது என நினைக்காதீர்கள். நீங்கள் செய்யும் வேலைதான் உங்கள் நிறுவனத்தின் லாபத்தை நிர்ணயிக்கும். அதேநேரத்தில், உங்கள் நிறுவனம் லாபத்தில் இயங்கினால் மட்டுமே உங்களால் வேலையில் தொடர முடியும். உங்கள் நிறுவனத்தின் லாபமும், உங்கள் செயல்திறனும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என்பதை உணருங்கள். அந்தப் பொறுப்புணர்ச்சி உங்களைத் தலைவனாக்கும்.

நீங்களே தலைவன்!

நீங்கள் வேலை செய்யும் துறையில் உங்கள் உயர் அதிகாரி உங்களிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்று கவலைப்படாமல் நீங்கள் அவர் இடத்தில் இருந்து உங்கள் இடத்தில் இருப்பவர் என்ன வேலை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களோ, அந்த வேலையைச் செய்யுங்கள். அதில் வெற்றியடையும்போது நீங்களே உங்களைத் தலைவனாக உணருவீர்கள்.

அலுவலகத்தில் நீங்கள் தலைவனாக பதவியில் இருக்க வேண்டும் என்பது நிர்வாக முடிவுகள், சீனியாரிட்டி என பல விஷயங்களை தாண்டி தான் நிர்னயிக்கப்படும். ஆனால் தலைமைப்பண்போடு செயல்பட முடியும் என்பதை நீங்கள் முடிவு செய்தாலே போதும் உங்களுக்கு நீங்கள் தான் கேப்டன்.

- ச.ஸ்ரீராம்.