Tuesday 27 December 2016

மணிமேகலை



சோழ நாட்டுப் புகார் நகர வணிகனான மாசாத்துவானின் மகன் கோவலன். அவன் மனைவி கண்ணகி.  கண்ணகியோடு வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த கோவலன் அந்நகரில் வாழ்ந்து வந்த நடன மாதான மாதவியின் ஆடற்கலையில் ஈடுபட்டுக் கண்ணகியைப் பிரிந்து சிலகாலம் மாதவியுடன் வாழ்கிறான்.  அப்போது அவர்கள் இருவருக்கும் பிறந்த பெண் மணிமேகலை.  மணிமேகலை பிறந்த சிறிது காலத்திற்குப் பிறகு கோவலன் மாதவியிடம் மனவேறுபாடு கொண்டு பிரிந்து மீண்டும் கண்ணகியிடம் சென்றுவிடுகிறான்.
பொருள் ஈட்டுவதற்காக மதுரை சென்ற கோவலன்,  பாண்டிய அரசியின் சிலம்பு ஒன்றினைத் திருடிய கள்வன் என்று அரண்மனைப் பொற்கொல்லனால் பழி சுமத்தப்பட்டுக் கொல்லப்படுகிறான். அதனை அறிந்த மாதவி தன் பொருட்களை எல்லாம் போதி மரத்தின் கீழ் அறவண அடிகள் முன்னர்த் தானம் செய்து துறவறம் ஏற்கிறாள்.   தன் பெண்ணான மணிமேகலையையும் துறவறத்தில் ஈடுபடுத்துகிறாள்.
மாதவி,  மணிமேகலை இருவரும் துறவு மேற்கொண்டு வாழ்ந்து வரும் வேளையில் பூம்புகாரில் இந்திரவிழா நடைபெறுகிறது.   அவ்விழாவில் நாடக மடந்தையரின் ஆடலும் பாடலும் முதன்மையானவை.  மாதவியும் மணிமேகலையும் அவ்விழாவில் கலந்துகொள்ளவில்லை.  இதனால் ஊர் மக்கள் அவர்களைப் பற்றிப் பழி பேசுகின்றனர்.  ஊர் பழிக்கவே,  மாதவியின் தாயான சித்ராபதி மாதவியின் தோழி வயந்தமாலையை அழைத்து ஊர்ப் பழியைக் கூறி மாதவியை அழைத்து வருமாறு கூறுகிறாள்.
 
வயந்தமாலை மாதவியிடம் சென்று உரைக்கிறாள்.   ஆனால் மாதவி தான் கொண்ட ஒழுக்கத்தையும் மணிமேகலையின் உறுதியையும் விளக்கிக் கூறுகிறாள்.
காவலன் பேரூர் கனையெரி ஊட்டிய
மாபெரும் பத்தினி மகள் மணிமேகலை
அருந்தவப் படுத்தல் அல்லது யாவதும்
திருந்தாச் செய்கைத் தீத்தொழிற் படாஅள் . . .
(ஊர் அலர் உரைத்த காதை, 54-57)
என்றும் உரைக்கிறாள். மணிமேகலையை மாபெரும் பத்தினி கண்ணகியின் மகள்என்று சொல்வதன் மூலம் மணிமேகலையின் வாழ்வுப் போக்கின் திசையைத் தெளிவாக உணர்த்திவிடுகிறாள்.
 
கோவலன்,  கண்ணகி,  மாதவி ஆகிய மூவருக்கும் ஏற்பட்ட துன்பங்களை மாதவி கூறியதைக் கேட்டு அங்கு மாலை தொடுத்துக் கொண்டிருந்த மணிமேகலை கண்ணீர் சிந்துகிறாள். கண்ணீர் படிந்து பூசைக்குரிய மாலை தூய்மை இழந்தது.
தூநீர் மாலை தூத்தகை இழந்தது
நிகர்மலர் நீயே கொணர்வாய்!
(மலர்வனம் புக்க காதை, 14-15)
என்று, புதிய மலர்களைக் கொய்து வருமாறு மணிமேகலையிடம் மாதவி கூறுகிறாள். மணிமேகலையும் அவள் தோழி சுதமதியும் உவவனம் என்னும் சோலைக்குச் செல்கின்றனர்.
 
மணிமேகலையின் மீது காதல் கொண்டிருந்த அந்நாட்டு இளவரசன் உதயகுமரன் அவளைத்தேடி உவவனத்திற்கு வருகிறான். அவனிடமிருந்து தப்பித்துக் கொள்ள எண்ணிய மணிமேகலை அங்கிருந்த பளிங்கினால் அமைக்கப்பட்ட பளிக்கறை மண்டபத்தில் புகுந்துவிடுகிறாள்.   உதயகுமரன் பளிக்கறைக்குள்ளே செல்ல வழி தெரியாமையால் மணிமேகலையைப் பலவாறு இழித்துக் கூறிவிட்டுத் திரும்பிச் சென்றுவிடுகிறான்.   உதயகுமரன் சென்றபின் மணிமேகலை வெளியே வருகிறாள். சுதமதியிடம் தன் நெஞ்சமும் உதயகுமரனை நாடுவதை எடுத்து உரைக்கிறாள்.
புதுவோன் பின்றைப் போனது என் நெஞ்சம்
இதுவோ அன்னாய் காமத்து இயற்கை
இதுவே ஆயின் கெடுகதன் திறம் . . .
(மணிமேகலா தெய்வம் வந்து
தோன்றிய காதை, 89-91)  
 
என்று அதை மாற்ற வேண்டும் என்ற உறுதியும் கொள்கிறாள். அப்போது இந்திர விழாவினைக் காண வந்த மணிமேகலா தெய்வம் மணிமேகலையின் நிலையை அறிந்துகொள்கிறது.    எனவே மணிமேகலையையும் சுதமதியையும் உதயகுமரனிடமிருந்து தப்புவிக்க அவர்களைச் சக்கரவாளக் கோட்டத்திற்குச் செல்லுமாறு கூறுகிறது. மேலும் சக்கரவாளக் கோட்டத்தின் வரலாற்றையும் கூறுகிறது. இதற்குள் இரவுப் பொழுதாகிறது. சுதமதி அங்கேயே உறங்கிவிடுகிறாள்.    உறங்க ஆரம்பித்த மணிமேகலையை மணிமேகலா தெய்வம் உவவனத்திலிருந்து முப்பது யோசனைத் தூரம் வான் வழியாக எடுத்துச் சென்று மணிபல்லவம் என்னும் தீவில் சேர்ப்பித்துவிட்டுச் செல்கிறது.
 
மணிபல்லவத் தீவிலே தனியாக விடப்பட்ட மணிமேகலை விழித்தெழுந்து தனிமையால் துன்புற்று அழத் தொடங்குகிறாள். அப்போது அவள்முன் ஒரு புத்த தரும பீடிகை தோன்றுகிறது. தரும பீடிகை என்பது புத்தர் அமர்ந்து அறம் உரைத்த ஆசனம் ஆகும்.  அதைக் காண்போருக்கு அவர்களுடைய பழம்பிறப்புகள் விளங்கும். மணிமேகலை அதனை வணங்குகிறாள்.  அதன் மூலம் தன் பழம்பிறப்பை உணர்கிறாள். முற்பிறப்பில் அசோதர நாட்டு மன்னன் இரவிவன்மன் என்பவனுக்கும் அரசி அமுதபதி என்பவளுக்கும் இலக்குமி என்னும் மகளாகப் பிறந்தமை; இராகுலன் என்பவனை மணந்தமை; அவன் பாம்பு தீண்டி இறந்தமை;  அவனுடன் தீயில் புகுந்து உயிர் துறந்தமை போன்ற விவரங்களை அறிந்து கொள்கிறாள் மணிமேகலை. பழம்பிறப்பில் தன் கணவனான இராகுலன் என்பவனே இப்போது உதயகுமரனாகப் பிறவி எடுத்துள்ளான்.  எனவேதான் தன் நெஞ்சம் அவனை நாடுகிறது என்பதை மணிமேகலா தெய்வத்தின் மூலம் பின்னர் அறிந்துகொள்கிறாள்.
 
மணிமேகலா தெய்வம் மணிமேகலைக்கு அவள் விரும்பும் வேற்று உருவத்தை அடைவதற்குரிய மந்திரத்தையும்,  வான்வழியாகச் சென்று வர உதவும் மந்திரத்தையும்,  பசியைப் போக்கும் மற்றொரு பெரிய மந்திரத்தையும் உரைத்துவிட்டுச் செல்கிறது.  அப்போது,  இந்திரன் ஏவலால் அத்தீவைக் காத்துவரும் தீவதிலகை என்னும் காவல் தெய்வம் அவள்முன் தோன்றுகிறாள்.  அவள் அத்தீவில் உள்ள கோமுகி என்னும் பொய்கையில், புத்தர் பிறந்த தினமான வைகாசித் திங்கள் விசாக நட்சத்திர முழுநிலவு நாளில் தோன்றும் அமுதசுரபி என்னும் பாத்திரத்தைப் பற்றிக் கூறுகிறாள்.  அப்பாத்திரம் ஆபுத்திரன் கையில் இருந்தது என்றும் அப்பாத்திரத்தில் இடும் உணவானது எடுக்க எடுக்கப் பெருகிக் கொண்டே இருக்கும் சிறப்புடையது என்றும் கூறுகிறாள். இன்று அப்பாத்திரம் உன்னை வந்து சேரும் என்றும் கூறுகிறாள்.  அதனைக் கேட்ட மணிமேகலை கோமுகிப் பொய்கையை வலம் வருகிறாள். அப்போது பொய்கையில் தோன்றிய அமுதசுரபி மணிமேகலையின் கையில் வந்து சேர்கிறது. அமுதசுரபியைப் பெற்ற மணிமேகலை வான்வழியே புகார் நகரை அடைகிறாள். அறவண அடிகளையும் மாதவியையும் சந்தித்து நடந்தவற்றைக் கூறுகிறாள்.
 
மணிமேகலைக்கு அறவண அடிகள்,  சிந்தாதேவி ஆபுத்திரனுக்கு அமுதசுரபியைக் கொடுத்த வரலாற்றைக் கூறுகிறார்.  ஆபுத்திரன் தருமம் செய்தது,  இந்திரன் செயலால் அவன் தன் உயிரை நீத்தது,  தற்போது அவன் சாவக நாட்டில் பிறந்திருப்பது போன்ற விவரங்களைக் கூறுகிறார்.  மேலும் ஆபுத்திரன் மூலமாக உலக மக்களின் பசியைப் போக்கிய அமுதசுரபி பயன்படுத்தப்படாமல் இருப்பது தவறு.  எனவே நீ அப்பணியை மேற்கொள்’  எனவும் உரைக்கிறார்.  அதனைக் கேட்ட மணிமேகலை அறவண அடிகளை வணங்கி, அமுதசுரபியை ஏந்தியவாறு புகார் நகர வீதிக்கு வருகிறாள். அவளைப் புகார் நகர மக்கள் சூழ்ந்துகொள்கின்றனர்.  அவர்களில் வித்தியாதர மங்கையாகிய காயசண்டிகை என்பவள் கற்பில் சிறந்தவளான ஆதிரையிடம் முதல் பிச்சை பெறுமாறு கூறுகிறாள்.  ஆதிரையின் வரலாற்றையும் கூறுகிறாள்.
ஆதிரையின் கணவன் சாதுவன். அவன் தீய ஒழுக்கம் கொண்டு கணிகை ஒருத்தியுடன் வாழ்ந்து வந்தான். அவனுடைய பொருட்கள் தீர்ந்தபின் கணிகை அவனை வீட்டை விட்டு வெளியேற்றினாள். சாதுவன் பொருள் ஈட்டுவதற்காக வணிகர்களுடன் கப்பலில் சென்றான். கடும் காற்றால் கப்பல் கவிழ்ந்தது.  சாதுவன் தப்பி நாகர்கள் வாழும் மலைப்பக்கம் சேர்ந்தான். கப்பலில் தப்பிய சிலர் காவிரிப்பூம்பட்டினம் வந்தனர்.  சாதுவன் உயிரோடு இருப்பதை அறியாத அவர்கள் அவன் இறந்து விட்டதாகக் கூறினர்.  அதனைக் கேட்ட ஆதிரை தீயில் பாய்ந்து உயிர்விடத் துணிந்தாள்.  தீயில் குதித்தாள்.  ஆனால் தீ அவளைச் சுடவில்லை.  ஆதிரை தீயும் சுடாத பாவியானேன்’  என்று வருந்தினாள். அப்போதுஉன் கணவன் இறக்கவில்லை. விரைவில் திரும்புவான்என அசரீரி கேட்டது. ஆதிரை மகிழ்ச்சியோடு வீடு திரும்பி நல்ல அறங்களைச் செய்து வந்தாள்.
கடல் கொந்தளிப்பிலிருந்து உயிர்தப்பி நாகர்மலையைச் சென்றடைந்த சாதுவனை நாகர்கள் பிடித்து அவனை உண்ண முயன்றனர்.  சாதுவன் நாகர்மொழியை அறிந்திருந்ததால் நாகர்களின் தலைவனோடு பேசி அவர்களுக்குக் கொல்லாமை அறத்தை அறிவுறுத்தினான். நல்வினை, தீவினை ஆகியன பற்றி விளக்கமாக எடுத்துரைத்தான்.  நல்லறிவு பெற்ற நாகர் தலைவன்,  சாதுவனுக்குப் பொன்னும் பொருளும் அள்ளித் தந்தான்.  அவற்றைப் பெற்று அங்கு வந்த சந்திரதத்தன் கப்பலில் சாதுவன் மீண்டான்.  ஆதிரை கணவனோடு மகிழ்ச்சியாக வாழ்ந்தாள்.  இவ்வாறு ஆதிரையின் வரலாற்றைக் கூறினாள் காயசண்டிகை.  மணிமேகலை ஆதிரை வீட்டினுள் நுழைகிறாள்.  ஆதிரை பிச்சையிட்டதும் அமுதசுரபியில் உணவு எடுக்க எடுக்கக் குறையாது வந்து கொண்டே இருந்தது. காயசண்டிகை மணிமேகலையிடம் ‘‘தாயே!  என் தீராப்பசியைத் தீர்த்தருள வேண்டும்’’ என வேண்டுகிறாள். மணிமேகலை ஒரு பிடி உணவு அள்ளியிட அவள் பசி தீர்ந்தது. பின் காயசண்டிகை தன் வரலாற்றை மணிமேகலைக்குக் கூறுகிறாள்.
வடதிசையில் காஞ்சனபுரம் என்பது என் ஊர். காவிரிப் பூம்பட்டினத்தில் நடைபெறும் இந்திர விழாவைக் காண நானும் என் கணவனும் வான் வழியே பறந்து வந்தோம். இடையே ஓர் ஆற்றங்கரையில் தங்கினோம். அங்கு விருச்சிகன் என்ற முனிவன் நீராடிவிட்டு வந்து உண்பதற்காக ஒரு பெரிய நாவல் கனியைத் தேக்கு இலையில் வைத்துவிட்டுச் சென்றிருந்தான். நான் என் தீவினையால் அக்கனியை என் காலால் சிதைத்துவிட்டேன். நீராடிவிட்டுத் திரும்பிய முனிவன் சினந்து, ‘இக்கனி பன்னிரண்டாண்டுக்கு ஒருமுறை ஒரு கனியைத் தரும் நாவல் மரத்தில் உண்டானது. இதை உண்பவர்கள் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பசியில்லாமல் இருப்பர்.   நான் பன்னிரண்டாண்டு நோன்பிருந்து இதை உண்ணும் வழக்கமுடையவன்.  இதை நீ சிதைத்தாய்.  ஆகவே இனி நீ வான் வழியே செல்லும் சக்தியை இழப்பாய். யானைத் தீ என்னும் தீராப்பசி நோயால் துன்பப்படுவாய். பன்னிரண்டு ஆண்டுக்குப்பின் கிடைக்கும் நாவல் கனியை நான் உண்ணும் நாளில் உன் பசி தீர்வதாகஎனச் சபித்தான்.  முனிவன் சொன்ன பன்னிரண்டு ஆண்டுகள் முடியும் நாள் இதுபோலும், உன்கையால் உணவு பெற்றுப் பசிதீர்ந்தேன்’  என்று கூறிய காயசண்டிகை தன் நாட்டிற்குத் திரும்பிச் செல்கிறாள்.
மணிமேகலை,   உதயகுமரன் தன்னை அடையாளம் கண்டு கொள்ளாத வகையில் காயசண்டிகையின் வடிவம் கொண்டு பசிப்பிணி தீர்க்கும் நல்லறத்தைப் புரிந்து வருகிறாள். காயசண்டிகையின் வடிவில் இருப்பவள் மணிமேகலையே என்று அறிந்த உதயகுமரன் அவளை அடைய முற்படுகிறான். அப்போது காயசண்டிகையைத் தேடி வந்த அவள் கணவன் காஞ்சனன் என்பவன் உதயகுமரன் காயசண்டிகையை அடைய விரும்புகிறான் எனத் தவறாக எண்ணி அவனை வாளால் வெட்டிக் கொன்று விடுகிறான்.  அங்கே இருந்த கந்திற்பாவை காஞ்சனனுக்கு உண்மையை உணர்த்துகிறது. காயசண்டிகை ஊர் திரும்பும்போது யாரும் மேலே பறக்கக் கூடாத விந்திய மலை மீது பறந்து சென்றதையும் அதனால் மலையைக் காக்கும் விந்தாகடிகை அவளை இழுத்துத் தன் வயிற்றுக்குள் அடக்கிக் கொண்டதையும் கூறுகிறது. காஞ்சனன் வருந்தி ஊர் திரும்புகிறான்.
உதயகுமரன் இறப்பிற்கு மணிமேகலையே காரணம் என எண்ணிய அரசன் அவளைச் சிறையில் இடுகிறான். அரசமாதேவி தன் மகன் மேல் கொண்ட பாசத்தினால் மணிமேகலையை வஞ்சித்து வருத்திட முயல்கிறாள். மணிமேகலையைச் சிறையிலிருந்து விடுவித்து அரண்மனைக்கு அழைத்துச் செல்கிறாள்.  அங்கு அவளுக்கு மயக்க மருந்து ஊட்டுகிறாள்.  அவளுக்குத் தீங்கு இழைக்குமாறு கல்லாத இளைஞன் ஒருவனை ஏவுகிறாள்;  புழுக்கறையில் அடைக்கிறாள்;  ஆனால் மணிமேகலை இக்கொடுஞ் செயல்களால் எவ்விதத்திலும் பாதிக்கப்படாமல் இருப்பதைக் கண்டு அஞ்சித் தன் பிழையினை உணர்கிறாள்.  மணிமேகலை அவளுக்கு நல்லறங்களைப் போதிக்கிறாள்.  காமத்தின் கொடுமை, கொலையின் கொடுமை, கள்ளின் கொடுமை, பொய்யின் தீமை, களவின் துன்பம் எனத் தீய குற்றங்களின் தன்மையை உணர்த்துகிறாள்.  பசிபோக்குவதும் உயிர்களிடத்து அன்பு செலுத்துவதுமே அறம் என்கிறாள்.  அப்போது அங்கு வந்த அறவண அடிகள் அரசிக்கு மேலும் பல அறநெறிகளை அருளுகின்றார். மணிமேகலை அனைவரையும் வணங்கிச் சாவக நாட்டிற்குச் செல்கிறாள்.
சாவக நாட்டில் புண்ணியராசனாகப் பிறந்திருந்த ஆபுத்திரனைச் சந்திக்கிறாள்.  அவன் தன் பழம் பிறப்பை உணர்ந்து கொள்ள மணிபல்லவத் தீவிற்குச் செல்லுமாறு தூண்டுகிறாள். தானும் மணிபல்லவத் தீவை அடைகிறாள்.  அங்குப் புண்ணியராசன் தன் பிறப்பை உணர்ந்து கொள்கிறான்.  அப்போது காவல்தெய்வமான தீவதிலகை மணிமேகலையிடம்,  கோவலனின் முன்னோன் ஒருவன் கடலில் விழுந்து தவித்தபோது,  மணிமேகலா தெய்வம் அவனைக் காப்பாற்றிக் கரை சேர்த்தது.  உயிர்தப்பிய அவன் தான தருமங்கள் பல செய்தான். அவன் செய்த நற்செயல்களை அறிந்து கொள்ள வஞ்சி நகருக்குச் செல்லுமாறு கூறுகிறது.  மணிமேகலை புண்ணியராசனுக்கு அறம் உரைத்துப் பின் வஞ்சி நகருக்குப் புறப்படுகிறாள்.
மணிமேகலை வஞ்சி மாநகரை அடைந்து,   அங்கிருந்த சமயக் கணக்கராகிய அளவைவாதி, சைவவாதி, பிரமவாதி, வைணவவாதி, வேதவாதி, ஆசீவகவாதி, நிகண்டவாதி, சாங்கியவாதி, வைசேடிகவாதி,  பூதவாதி ஆகிய பலரும் தம்தம் சமயத்தின் நுண் பொருட்களை உரைக்கக் கேட்டு அறிகிறாள்.  அவள் மனம் அமைதி பெறவில்லை.  அங்கிருந்து காஞ்சி மாநகரம் செல்கிறாள்.  அங்கு அறவண அடிகளைச் சந்தித்து மெய்ப்பொருள் உரைத்தருளுமாறு வேண்டுகிறாள்.  அறவண அடிகள் மணிமேகலைக்குப் பிறர்மதமும் தம்மதமும் எடுத்துரைத்து மெய்ப்பொருளாகிய தரும நெறியின் நுண்மையான பொருட்களை விளக்குகிறார். மணிமேகலை அவர் உணர்த்திய ஞான விளக்கின் துணையால் தெளிவு பெறுகிறாள் முடிவில் என் பிறப்புக்குக் காரணமாகிய குற்றங்கள் நீங்குக’  என வேண்டி நோன்பு நோற்கத் தொடங்குகிறாள். இந்நிகழ்ச்சியுடன் மணிமேகலைக் காப்பியக் கதை நிறைவு பெறுகிறது.