Friday, 24 January 2014

தமிழக மாவட்டங்கள் - 2

திருச்சி மாவட்டம்
 தமிழகத்தின் மத்தியில் அமைந்திருக்கும் இதன் ஒரு பகுதி, ஆரம்பத்தில் சோழர்களின் தலைநகரமாக இருந்தது. தென்னகத்தின் மீது படையெடுத்து வெற்றி கண்ட பல அரசுகளின் பிடியில் திருச்சி இருந்தது. பிறகு பல்லவர்கள் மற்றும் பாண்டியர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
முகலாயர்கள், விஜயநகர பேரரசர்கள், நாயக்கர்கள் என அரசுகளின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தபோது, எந்த முன்னேற்றமும் அங்கே ஏற்படவில்லை. ஆங்கிலேயரின் பிடிக்குள் வந்த பிறகுதான் திருச்சியின் வளர்ச்சி ஆரம்பமானது. 1948-ம் ஆண்டு வரையில் புதுக்கோட்டை சமஸ்தானம், இங்குதான் உள்ளடங்கி இருந்தது.
நில அடிப்படையில் தமிழகத்தின் மையமாகத் திகழ்வது திருச்சி மாவட்டம். 1995ம் ஆண்டு திருச்சி மாவட்டம்... திருச்சி, கரூர், பெரம்பலூர் என  மூன்று மாவட் டங்களாகப் பிரிக்கப்பட்டது.
முதனிலைத் துறை
தென்னிந்தியாவிலேயே வாழை அதிகம் உற்பத்தியாகும் மாவட்டம். தேசிய வாழை ஆராய்ச்சி நிலையம் திருச்சியில் உள்ளது.
சுண்ணாம்புக் கல் (லால்குடி, திருச்சி, மணப்பாறை, மணச்ச நல்லூர்), குவார்ட்ஸ் மற்றும் பெல்ஸ் பார் (மணச்ச நல்லூர், மணப் பாறை), ஜிப்சம் (லால்குடி), வெள்ளைக் களிமண் (லால்குடி) ஆகியவை முக்கியக கனிமங்கள்.
இரண்டாம் நிலைத் துறை
மின்சார உற்பத்திக்கான பாய்லர்களை உற்பத்தி செய்யும் மத்திய பொதுத்துறை நிறுவனமான BHEL (Bharath Heavy Elecrical Limited) திருச்சிக்கு அருகிலுள்ள திருவெறும்பூரில் அமைந்துள்ளது.
'பேப்ரிகேஷன்’ எனப்படும்  கட்டுமானத் தொழிலில் புகழ் பெற்றது.
மத்திய அரசின் படைக்கலத் தொழிற்சாலை திருச்சியில் அமைந்துள்ளது.
மூன்றாம் நிலைத் துறை
சுற்றுலா தலங்கள் :  தமிழகத்தின் நான்காவது பெரிய நகரமான இங்கு அமைந்துள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று.
காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட கல்லணை, 329 மீட்டர் நீளமும், 20  மீட்டர் அகலமும் கொண்டது.
இங்கு உள்ள மலைக்கோட்டைப் பாறை, 'உலகிலேயே 3,800 மில்லியன் ஆண்டுகள் பழமையான பாறை’ என்ற பெருமை உடையது. இது, 83 மீட்டர் உயரம் கொண்டது.
குறிப்பிடத் தக்கவர்கள்
சர்.சி.வி.ராமன் (திருவானைக் காவில் பிறந்தவர்), தமிழக முதல்வர் செல்வி. ஜெ.ஜெயலலிதாவின் பூர்வீக ஊர் ஸ்ரீரங்கம், எழுத்தாளர் சுஜாதா (பன்முக எழுத்தாளர்), கவிஞர் வாலி.

புதுக்கோட்டை மாவட்டம்
 மன்னராட்சியின் சுவடுகளைத் தாங்கிய வரலாற்று மாவட்டம் இது. பாண்டியர்கள், சோழர்கள், பல்லவர்கள், விஜய நகர ஆட்சியாளர்கள், மதுரை நாயக்கர்கள் ஆகியோர் பல்வேறு காலகட்டங்களில் இதை ஆண்டனர். 17-ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தொண்டைமான்களின் ஆட்சி ஏற்பட்டது. இது, இந்தியா சுதந்திரம் பெற்றதற்கு பிறகு 1948-ம் ஆண்டு வரை நீடித்தது.
1948-ம் ஆண்டு மார்ச் 4-ம் தேதி, புதுக்கோட்டை சாம்ராஜ்யம் இந்திய யூனியனில் இணைந்தது. இந்திய யூனியனோடு இணைந்த 565 சமஸ்தானங்களில் முதல் சமஸ்தானம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது 'புதுக்கோட்டை’ திருச்சியின் ஒரு பகுதியாகவே இருந்தது.
1974-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி,  திருச்சி, தஞ்சையிலிருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது.
முதனிலைத் துறை
நெல், கரும்பு, பழங்கள், இங்கு அதிகம் விளைகின்றன. 
அரசின் விவசாயப் பண்ணையான அண்ணா பண்ணை குடுமியான் மலையில் அமைந்துள்ளது.
இரண்டாம் நிலைத் துறை
பனைபொருட்கள் தயாரிப்பு (பேரையூர்), புதுக்கோட்டை தொழில் வளாகம், கெமிக்கல் தொழில் சாலைகள் (அறந்தாங்கி, மாத்தூர்) போன்றவை முக்கியத் தொழில் வளங்கள்.
மூன்றாம் நிலைத் துறை
கி.பி 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் காலச் சிற்பக்கலையைப் பின்பற்றி வரையப்பட்ட சித்தன்னவாசல் குகை ஓவியங்கள் புகழ் பெற்றவை.
9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நார்த்தாமலை குடைவரைக் கோயில்கள், வேள்விக்குடி செப்பேடுகள், கொடும்பாளூர் மூவர் கோயில்கள், குடுமியான் மலை இசைக் கல்வெட்டுகள் எனப் புதுக்கோட்டை பல வரலாற்றுச் சான்றுகளின் இருப்பிடமாகத் திகழ்கிறது.
குடுமியான் மலை சிவன் கோயில் இசைக் கல்வெட்டுகள் புகழ் பெற்றவை. மகேந்திரவர்ம பல்லவன் இசை பற்றி ஆய்வு மேற்கொண்டிருந்ததைக் குறித்து இக்கல்வெட்டுக்கள் கூறுகிறது.
திருக்கோகர்ணத்தில் மகேந்திரவர்ம பல்லவன் கட்டிய குடைவரைக் கோயில் உள்ளது. இங்குள்ள அரசு அருங்காட்சியகத்தில் மானுடவியல், கல்வெட்டியல், வரலாறு தொடர்பான பல பிரிவுகளில் ஏராளமான வரலாற்று ஆவணங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
விஜயாலய சோழீஸ்வரம் குகைக்கோயில், விஜயாலய சோழனால் கட்டப்பட்டது.
தீரர் சத்தியமூர்த்தி இங்கு பிறந்தார்.
குடுமியான் மலைக் கல்வெட்டுகள் இசைக் கலையைப் போற்றுகின்றன.
கட்டுமானப் பணிகளுக்குத் தேவைப்படும் 'லேட்டரைட்’ கனிமம் இங்கு மிகுதியாகக் கிடைக்கிறது.

பெரம்பலூர் மாவட்டம்
 பெரம்பலூர் மாவட்டம், 1995-ம் ஆண்டு நவம்பர் மாதம் 1-ம் தேதி திருச்சி மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டது. அதனால், இதன் வரலாறு திருச்சியோடு தொடர்புடையதுதான். 2001-ம் ஆண்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
2002-ல் அரியலூர் மாவட்டம் பெரம்பலூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. பிறகு 2007-ல் மீண்டும் அரியலூர் மாவட்டம் உதயமானது.
முதனிலைத் துறை
நெல், கடலை, கரும்பு, கம்பு, முந்திரி ஆகியவை முக்கிய வேளாண் பயிர்கள்.
கனிமம் அதிகம் கிடைக்கும் மாவட்டம் இது. சுண்ணாம்புக்கல், பாஸ்பேட், ஜிப்சம், நிலக்கரி, அரளைக் கற்கள் இங்கே அதிகம் கிடைக்கின்றன.
இரண்டாம் நிலைத் துறை
டால்மியாபுரம் சிமென்ட் தொழிற் சாலை இங்குள்ளது.
துறையூர் சுருட்டு புகழ்பெற்றது.
மரச்சிற்பங்கள் தழுதழை கிராமத்தில் உருவாக்கப்படுகின்றன.
மூன்றாம் நிலைத் துறை
முக்கிய இடங்கள் : சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயில், செட்டிக்குளம் ஏகாம்பரேஸ்வரர் கோயில், செட்டிக்குளம் பால தண்டாயுதபாணி கோயில்,  லப்பைக்குடிக்காடு பெரிய தர்கா ஆகியவை இங்கிருக்கும் முக்கிய வழிபாட்டுத் தலங்கள்.
தொல்லுயிர்ப் படிவு கொண்ட சாத்தனூர் மரப்படிவங்கள் இம்மாவட்டத்தில் அமைந்துள்ளது. 18 மீட்டர் நீளம் கொண்ட தொல்லூர் சாத்தனூர் மரப்படிவங்கள் இந்திய தொல்லியல் துறையைச் சார்ந்த டாக்டர் எம்.எஸ்.கிருஷ்ணன் என்பவரால் 1940ம் ஆண்டு முதல் முதலாக விவரிக்கப்பட்டன. இந்த தொல் படிவங்கள் 'கோனிபர்’ (சிஷீஸீவீயீமீக்ஷீ) வகையைச் சார்ந்தவை.
ஆங்கிலேயர்களுக்கும் பிரெஞ்சுக் காரர்களுக்கும் இடையே 1751ல் வலிகொண்டா போர் நிகழ்ந்த ரஞ்சக் குடிக் கோட்டை இம்மாவட்டத்தில் அமைந்துள்ளது.
மூன்றடுக்கு கொண்ட கோட்டைச் சுவர், நிலவறை, மசூதி, கொடிக் கம்பம் போன்ற பலவற்றைக் கொண்டுள்ள ரஞ்சக்குடி கோட்¬ ட தற்போது இந்திய அகழ்வாய்வுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
பெரம்பலூரில் இருந்து சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லாடபுரம் என்னும் கிராமத்தின் அருகில் பச்சை மலையில் அமைந்துள்ள மயில் ஊற்று அருவி புகழ் பெற்றது.
வெள்ளாறு,  கொள்ளிடம் ஆகிய ஆறுகள் பாயும் இந்த மாவட்டத்தில் சித்தமல்லி நீர்த்தேக்கம் அமைந்துள்ளது.
மாவட்டத்தில் அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தி மாணவர்கள் பலரை தனியார் பள்ளிகளை தவிர்த்து அரசு பள்ளிகளை நோக்கிப் படையெடுக்க வைத்தவரும், சிறந்த மாவட்ட ஆட்சியருக்கான விருதை முதலமைச்சரிடமிருந்து பெற்றவருமான பெரம்பலூர் மாவட்ட தற்போதைய  ஆட்சியருமான தாரேஸ் அஹமது ஐ.ஏ.எஸ். இம்மாவட்டச் செய்தியில் தவிர்க்க முடியாதவர்.

அரியலூர் மாவட்டம்
 ஹைதர் அலி, திப்பு சுல்தான், ஆங்கிலேயர் மோதலின் களமாக இருந்தது அரியலூர் மாவட்டம். திப்பு சுல்தான் மறைவுக்குப் பிறகு, 1801-ல் ஆங்கிலேயர் பிடியில் 'திருச்சி’ தனி மாவட்டமாக ஆனது. 1995-ம் ஆண்டு திருச்சி பிரிக்கப்பட்டு, பெரம்பலூர், கரூர் மாவட்டங்கள் உருவாக்கப் பட்டன.
2001-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து சில பகுதிகள் பிரிக்கப்பட்டு அரியலூர் மாவட்டத்தை உருவாக்கியது, அப்போது இருந்த தி.மு.க. அரசு. ஆனால், அடுத்து வந்த அ.தி.மு.க. அரசு, 2002, மார்ச் 31-ம் தேதி பொருளாதாரத்தைக் காரணம் காட்டி அரியலூர் மாவட்டத்தை மீண்டும் பெரம்பலூர் மாவட்டத்துடன் இணைத்தது.
2006-ல் ஆட்சியில் அமர்ந்த தி.மு.க. அரசு, 2007, நவம்பர் 23-ம் தேதி பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து மீண்டும் புதிய அரியலூர் மாவட்டத்தை உருவாக்கியது. இங்கு சிமென்ட் ஆலைகள் அதிகம் உள்ளதால் சிமென்ட் சிட்டி என்றும் அழைக்கப்படுவதுண்டு.
அரிய தகவல்கள்
அரியலூர் சுமார் இலட்சம் ஆண்டுகள் முன்பு கடலாக இருந்தது என்பது புவியியல் வல்லுனர்களின் கருத்து.
கல்லமேடு என்ற இடத்தில்  60 அடி நீளம், 18 அடி உயரம் கொண்ட ராட்சதப் பிராணியின் எலும்புக் கூடு கி.பி.1860 இல் கண்டுபிடிக்கப் பட்டது.
அரியலூருக்கு அருகில் சாத்த னூரில் காணப்படும் தொல்லுயிர் எச்சப் படிமமான  16 அடி நீளமும், 4 அடி சுற்றளவும் கொண்ட கல்மரம் இருக்கிறது. இது 12 கோடி ஆண்டுகள் பழமையானது.
1923 இல் பெங்களூர் மத்திய கல்லூரிப் புவியியல் பேராசிரியர் ராட்சதப் பிராணியின் முதுகெலும்பைக் கண்டுபிடித்தார்.
முதனிலைத் துறை
கரும்பு, முந்திரி இம்மாவட்டத்தின் முக்கிய பயிர்கள்.
பச்சைமலையில் வாழும் மலைவாழ் மக்கள் உளுந்து, மொச்சை, கொட்டைமுத்து ஆகியவற்றைப் பயிரிடுகின்றனர். இவர்கள் வேட்டை நாய்களையும், செந்நாய்களையும் வளர்க்கிறார்கள்.
இரண்டாம் நிலைத் துறை
சிமென்ட் உற்பத்திக்கு பெயர் பெற்ற மாவட்டம்.
டால்மியாபுரம் சிமென்ட் தொழிற்சாலை, மணலேரி அரசு  சிமென்ட் தொழிற்சாலை உட்பட 5  சிமென்ட் தொழிற்சாலைகள் இம்மாவட்டத்தில் அமைந்துள்ளன.
ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி உற்பத்திக்குப் புகழ் பெற்றது.
மூன்றாம் நிலைத் துறை
கடற்கரை இல்லாத மாவட்டம்.
தஞ்சைப் பெரிய கோயிலை நிர்மாணித்த ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திர சோழன், பெரிய கோயிலை போன்றே கட்டிய கங்கைகொண்ட சோழபுரம் இங்கு உள்ளது.
'தேம்பாவணி’ எழுதிய வீரமாமுனிவரால் கட்டப்பட்ட தேவாலயம் உள்ளது.

கரூர் மாவட்டம்
கரூர், கொங்கு நாட்டின் ஒரு பகுதி. 'கருவூர்’ என பண்டைய காலத்தில் அழைக்கப்பட்ட கரூருக்கு, 'வஞ்சி மாநகரம்’ என்ற பெயரும் உண்டு. கிரேக்க அறிஞர் தாலமி கரூரை தமிழகத்தின் முக்கிய உள்நாட்டு வாணிப மையமாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆரம்பத்தில் சேரர்களின் தலை நகராக விளங்கியது. பிறகு பாண்டியர்களால் கைப்பற்றப்பட்டது. பல்லவ அரசர்களின் ஆட்சியின் கீழ் இருந்த கரூர், ரோமாபுரியோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தது. நாயக்கர்கள், திப்பு சுல்தான் பிடியிலும் கரூர் இருந்தது.
காவிரி, அமராவதி, நொய்யல், குடகனாறு, நங்கன்ஜி ஆறு, கீழ் பவானி போன்றவை இம்மாவட்டத்தில் பாயும் முக்கிய நதிகள்.
1995, செப்டம்பர் 30-ம் தேதி, திருச்சி மாவட்டம் பிரிக்கப்பட்டு கரூர், பெரம்பலூர்  மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. கரூர், குளித்தலை மற்றும் மணப்பாறை தாலுக்காக்களை கொண்டு, கரூர் மாவட்டம் உதயமானது.
முதனிலைத் துறை
தமிழக அரசின் கல் குவாரி தொழிற்சாலை இங்குள்ளது.
இரண்டாம் நிலைத் துறை
கரூர் கைத்தறி நெசவு ஆடைகளுக்குப் பெயர் பெற்ற மாவட்டம்.
கைத்தறி நெசவு (அரவக்குறிச்சி), தோல் பதனிடுதல் (பள்ளப்பட்டி), சாயமேற்றுதல் (கரூர், அரவக்குறிச்சி), கல்சிற்ப வேலைகள் (சின்னத்தாராபுரம்) போன்ற தொழில்களில் கரூர் சிறந்து விளங்குகிறது.
புகளூரில் அமைந்துள்ள  தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும், காகித நிறுவனத்தில் (ஜிழிறிலி)  கரும்பு சக்கையைக் கொண்டு காகிதம் தயாரிக்கப்படுகிறது. இந்த ஆலை 785 ஏக்கர் நிலப்பரப்பில்  அமைந்துள்ளது.
பேருந்து கட்டுமானத் தொழிலின் சிகரமாக கரூர் விளங்குகிறது.
ஏற்றுமதி தரத்தில் கொசுவலை உற்பத்தி ஆகின்றன.
பாரம்பரியத் தொழிலான ரத்தினக் கல் வியாபாரத்துக்குப் பெயர் பெற்ற மாவட்டம்.
அனைத்து வாகனங்களுக்குத் தேவையான செயின் தொழிற்சாலை இங்கு உள்ளது.
செட்டி நாடு சிமென்ட் ஆலை 1962ல் புலியூர் பகுதியில் தொடங்கப் பட்டது.
நவீன அரிசி ஆலைகள், பித்தளைப் பாத்திரத் தயாரிப்பு போன்றவையும் இம்மாவட்டத்தின் முக்கியத் தொழில்கள்.
மூன்றாம் நிலைத் துறை
குறிப்பிடத்தக்க இடங்கள்: திருகடம்பந்துறை கடம்பவனநாதர் கோயில், சுந்தரர் பதிகம் பாடிய திருவெஞ்சமாக்கூடல் விகிர்த நாதேசுவரர் தலம், மரகதாசலர் கோயில், கல்யாண வெங்கட ராமசாமி ஆலயம், தாந்தோணி (தென் திருப்பதி என அழைக்கப் படுகிறது), பசுபதேஸ்வரர் ஆலயம் (சிற்ப வேலைப்பாடுகள் மிகுந்தது).
குறிப்பிடத்தக்கவர்கள்: திருவி சைப்பா பாடிய ஒன்பதின்மர்களில் ஒருவரான கருவூர்த் தேவர் பிறந்த மாவட்டம்.

நாமக்கல் மாவட்டம்
 நாமக்கல், கொங்கு நாட்டின் ஒரு பகுதியாக இருந்ததற்கு வரலாறுகள் உண்டு. தகடூர் அதியமான் ஆட்சியைத் தொடர்ந்து கொங்கு சோழர், கங்கர், நாயக்கர், திப்பு சுல்தான் ஆகியோரின் ஆளுகையின் கீழ் இருந்தது.
சேந்தமங்கலத்தை தலைமை யிடமாக கொண்டு ராமச்சந்திர நாயக்கர் ஆட்சி செய்தபோதுதான், நாமக்கல் கோட்டை கட்டப்பட்டது.
1997-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி, சேலம் மாவட்டத்திலிருந்து 'நாமக்கல்’ மாவட்டம் உருவாக்கப் பட்டது.
முதனிலைத் துறை
நாமக்கல் மாவட்டத்தில் பரவியுள்ள மலைகள் 'தால்காட் மலைகள்’ எனப்படும். இம்மாவட்டத்தில்  பச்சைமலை, கொல்லிமலை, கபிலமலை,  சேர்வராயன் மலையின் ஒரு பகுதி ஆகியவை காணப்படுகிறது.
முட்டைக் கோழி வளர்ப்பு மற்றும் முட்டை உற்பத்தியில் நாமக்கல் மாவட்டம் தென்னிந்தியாவிலேயே முக்கிய இடம் வகிக்கிறது.
சுண்ணாம்புக்கல், கல்நார்  போன்றவை இம்மாவட்டத்தின் முக்கிய கனிம வளங்களாகும்.
நெல், கரும்பு, சோளம், கம்பு, கேழ்வரகு, நிலக்கடலை, பருத்தி ஆகியவை இம்மாவட்டத்தில் அதிகம் பயிரிடப்படுகின்றன.
இரண்டாம் நிலைத் துறை
கைத்தறி மற்றும் விசைத்தறி, வாகனங்களுக்கு பாடி கட்டும் தொழில் (திருச்செங்கோடு), பொறியியல் தொழில்கள், சர்க்கரைத் தொழிற்சாலை (மோகனுர்), சேஷாயி காகிதத் ஆலை (பள்ளிபாளையம) நூற்பு ஆலைகள் (திருச்செங்கோடு, குமாரபாளையம்) ஆகியவை முக்கிய தொழில்களாகும்.
மூன்றாம் நிலைத் துறை
திருச்செங்கோட்டுப்பதி என்று புகழப்படும் திருச்செங்கோடு கொங்கு நாட்டிலுள்ள ஏழு சிவத்தலங்களுள் ஒன்று. தேவாரத்திலும், பெரிய புராணத்திலும் திருச்செங்கோடு 'கொடிமாடச் செங்குன்றுர்’ என்று குறிப்பிடப்படுகிறது.
சுற்றுலா இடங்கள்:
கொல்லிமலை, ஆகாய கங்கை அருவி (உயரம் 130 அடி); நாமக்கல் கோட்டை கோயில்கள், நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில், திருச்செங் கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில், காளிப்பட்டி ஸ்ரீகந்தசாமி கோயில், கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோயில்.
குறிப்பிடத்தக்கவர்கள்:
நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை, தீரன் சின்னமலை,  சிலம்பொலி செல்லப்பன்.
இந்தப் பகுதி கோழி வளர்ப்புக்குப் பெயர் பெற்றதால், தமிழகத்தின் 'கோழிப் பண்ணை மாவட்டம்’ எனப் பெயர் பெற்றது.
சித்தர்கள் வாழ்ந்த குகைகள் கொண்ட கொல்லிமலை இங்கு உள்ளது.  இது, 1,190 மீட்டர் உயரமும், 70  கொண்டை ஊசி வளைவுகளையும் கொண்டுள்ளது.
மினி பேருந்துகளும் லாரிகளும் அதிக அளவில் இயங்கும் மாவட்டம் இது.
நாமக்கல் நகராட்சி, ஆசியாவின் முதல் மிஷிளி - 14001-2004 தரச் சான்றிதழ் பெற்றுள்ளது.
200 அடி உயரத்தில் ஒரே கல்லிலான ஆஞ்சநேயர் சிலை, இங்கு அமைந்துள்ளது.

சேலம் மாவட்டம்
 நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் பிரிக்கப்படுவதற்கு முன்பு, இதுதான் தமிழ்நாட்டின் பெரிய மாவட்டம். இது, கொங்குநாட்டின் ஒரு பகுதி.
பண்டைய காலத்தில் அதியமான் ஆட்சிப் பகுதியில் இருந்தது. பிறகு சோழர்கள், கன்னடர்கள், நாயக்கர்கள், திப்பு சுல்தான், ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தது. ஆங்கிலேயரின் ஆட்சியில்தான் இது உருவாக்கப்பட்டது.  இ.ஆர்.ஹார் கிரேவ் கலெக்டராக இருந்தபோதுதான் இதற்கு 'சேலம் மாவட்டம்’ எனப் பெயர் சூட்டப்பட்டது.
முதனிலைத் துறை
நெல், பருப்புவகைகள், பருத்தி, மரவள்ளிக் கிழங்கு, கரும்பு, மாம்பழம், ரோஜா, மல்லிகை,  காப்பி, பாக்கு, நிலக்கடலை, வெற்றிலை, பழவகைகள் ஆகியவை முக்கிய வேளாண் பயிர்கள்.
தமிழகத்தின் ஐந்தாவது பெரிய நகரமான இதற்கு, 'மாங்கனி நகரம்’ என்ற சிறப்புப் பெயர் உண்டு.இந்தியாவிலேயே அதிகமான ஜவ்வரிசி இம்மாவட்த்தில்தான் உற்பத்தியாகின்றது.
இரும்புத் தாது (கஞ்சமலை, தீர்த்தமலை), அலுமினியம் (சேர்வராயன் மலை), மாக்னசைட் , பாக்சைட் போன்ற தாதுக்கள் இம்மாவட்டத்தில் அதிக அளவில் கிடைக்கின்றது.
இரண்டாம் நிலைத் துறை
நெசவுத்தொழில் தமிழ்நாட்டிலேயே அதிகமான கைத்தறிகள் உள்ள மாவட்டம் சேலம் மாவட்டமாகும்.  அம்மாப்பேட்டை கூட்டுறவு சங்கம் புகழ்பெற்றது.
'தமிழ்நாடு பால்பண்ணைத் தொழில் வளர்ச்சிக் கழகம்' சேலத்தில் பெரிய அளவில் பாலைப் பாதுகாக்க குளிர்ப்பதன வசதி செய்து பல்வேறு இடங்களுக்கும் அனுப்புகிறது.
உடையாபட்டி, ஆத்தூர், குமாரபாளையம், மேட்டூர் ஆகிய இடங்களில் நுற்பு ஆலைகள் உள்ளன.
சங்ககிரியில் இந்தியா சிமென்ட் தொழிற்சாலை அமைந்துள்ளது.
மேட்டூரில் தொழிற்பேட்டைகளும் இரசாயனப் பொருள் தொழிற்சாலை, அலுமினியத் தொழிற்சாலை, முலாம் பூசும் தொழிற்சாலை, சந்தன எண்ணெய்த் தொழிற்சாலை, வனஸ்பதி தொழிற்சாலை ஆகிய தொழிற்சாலைகள் மிகுதி.
மூன்றாம் நிலைத் துறை
'ஏழைகளின் ஊட்டி’ என்று அழைக்கப்படும் ஏற்காடு சேர்வராயன் மலையில் கடல் மட்டத்திலிருந்து 1515 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. ஏரி, அண்ணா பூங்கா, லேடிசீட் தொலைநோக்கி, பகோடா மலை முகடு, கிள்ளியூர் அருவி, கரடிக்குகை ஏற்காட்டில் காண வேண்டிய இடங்களாகும். சித்திரை மாதத்தில் நடைபெறும்  கோடை விழாவில் மலர்க்காட்சி சிறப்பானது. மாவட்டத்தின் பழங்குடி மக்கள் சேர்வராயன் மலைத் தொடரில் வாழ்ந்து வருகின்றனர்.
குறிப்பிடத்தக்கவர்கள்:
மோகன் குமாரமங்கலம் (முன்னாள் அமைச்சர், சுதந்திரப் போராட்ட வீரர் ),  நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன், க.இராசாராம், சேலம் வழக்கறிஞர் விஜயராகவாச்சாரியார், 'கலைமகள்’ கி.வா.ஜகன்னாதன்.

No comments:

Post a Comment