Friday, 24 January 2014

தமிழக மாவட்டங்கள்

தமிழக மாவட்டங்கள்
எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி, டாக்டர் க. பிரபு
 தமிழகத்தில் தற்போது 32 மாவட்டங்கள் உள்ளன. தமிழக மாவட்டங்களின் எண்ணிக்கை காலம் தோறும் மாறி வந்துள்ளது. 1872ல் பிரிட்டிஷ் ஆட்சியின்போது, மெட்ராஸ் ராஜதானியில் 21 மாவட்டங்களும், 5 மன்னர் ஆட்சிப் பகுதிகளும் இருந்தன. 1941ல் இந்த எண்ணிக்கை 25 மாவட்டங்கள், 5 மன்னர் ஆட்சி பகுதிகள் என உயர்ந்தது. 1951ஆம் ஆண்டு நிலவரப்படி மெட்ராஸ் மாநிலத்தில் இருந்த மாவட்டங்களின் எண்ணிக்கை 26. மெட்ராஸ் மாகாணம், 1956ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மாநில மறுசீரமைப்பு சட்டத்தின்படி 1956, நவம்பர் 1 ஆம் தேதியன்று தமிழ் மொழி பேசும் மெட்ராஸ் மாநிலமாக உருவானது.
1961ஆம் ஆண்டு மெட்ராஸ் மாநிலத்தில் இருந்த மாவட்டங்களின் எண்ணிக்கை 13 ஆகும். 1967ல் ஜூலை 18ஆம் நாள் மெட்ராஸ் மாநிலத்தை தமிழ்நாடு என்னும் பெயர் மாற்றம் செய்யும் மசோதா மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இது மெட்ராஸ் மாநில பெயர் மாற்ற சட்டம்-1968 என்று அழைக்கப்படுகிறது.
தமிழக முதல்வராக அறிஞர் அண்ணா இருந்த போது, 1969, ஜனவரி 14ஆம் நாள் தமிழ்நாடு என்ற பெயர் நடைமுறைக்கு வந்தது. 1971, 81, 91, 2001ல் தமிழ்நாட்டில் இருந்த மாவட்டங்களின் எண்ணிக்கை முறையே, 14, 16, 21, 30 ஆகும். 2008ல் இந்த எண்ணிக்கை 32ஆக உயர்ந்தது. தமிழ்நாட்டின் 32வது மாவட்டமாக உருவானது திருப்பூர் ஆகும்.
இங்கு தமிழ் நாட்டிலுள்ள மாவட்டங்களின் விவரங்கள் தமிழக வரைபடத்தில் தெற்கிலிருந்து வடக்காக அவை இடம் பெற்றுள்ள வரிசையை அடிப்படையாகக் கொண்டு தரப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் தெற்கு மாவட்டங்கள் என்றும், புதுக்கோட்டை, கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்கள் மத்திய மாவட்டங்கள் என்றும், தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகியவை மேற்கு மாவட்டங்கள் என்றும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம் போன்றவை கிழக்கு மாவட்டங்கள் என்றும், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர், சென்னை, திருவள்ளூர் ஆகியவை வடக்கு மாவட்டங்கள் என்றும் கருதப்படுகின்றன.
இந்த அடிப்படையில் இங்கு மாவட்ட விவரங்கள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்தின் முக்கியத்துவமும், முதல் நிலை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலைத்துறைகளின் அடிப்படையில் விளக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் உள்ள நிர்வாக பிரிவுகள், சுற்றுலாத் தலங்கள் ஆகியவற்றோடு அம்மாவட்டத்தோடு தொடர்புடையவர்களில் ஒருவரின் புகைப்படம், அந்த மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க நபராக (மிநீஷீஸீ) அந்த மாவட்டத்தின் விவரத்தில் இடம் பெற்றுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு குறிப்பிட்ட நபரை தெரிவு செய்து இடம் பெறச் செய்யும்போது, ஒட்டு மொத்த தேசிய அளவில் பல துறைகளில் தமிழகத்தை முன்னிறுத்தியவர்களின் பங்களிப்பையும், சீர்தூக்கிப் பார்த்து மாவட்டத்துக்கு உரிய நபராக அவரை தேர்வு செய்து தந்துள்ளோம்.
உங்கள் மாவட்டத்திற்கான அந்த குறிப்பிடத்தக்க நபர் யார்? என்பதைத் தெரிந்து கொள்ள பக்கங்களைப் புரட்டுங்கள்.
 கன்னியாகுமரி மாவட்டம்
அரபிக்கடல், வங்கக்கடல், இந்திய பெருங்கடல் என முக்கடலும் சங்கமிக்கும் இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரி, ஆரம்ப காலத்தில் சேர, சோழ, பாண்டிய மற்றும் நாயக்க மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது.
'வேணாடு’ என அழைக்கப்பட்ட இந்தப் பகுதி, பத்மநாபபுரத்தை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டது.  திருவிதாங்கூர் ஆதிக்கத்தின் கீழும் இடம்பெற்றிருந்தது. மார்த்தாண்ட வர்மா காலத்துக்குப் பிறகு, ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் இருந்தது.  இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, திருவிதாங்கூர் இந்திய யூனியனுடன் இணைந்தது.
1956, நவம்பர் 1-ம் தேதி முதல் மாவட்டமாக அங்கீகாரம் பெற்றது.
முதனிலைத் துறை நெல், தேங்காய், ரப்பர், தேயிலை உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
ரப்பர் மரங்கள் மிகுந்த மாவட்டம்.
டைட்டானியம், தோரியம், மோனோசைட் இம்மாவட்ட கடற்கரை மணலில் காணப்படும் கனிமங்கள்.
மரவள்ளிக் கிழங்கு உற்பத்தியில் சேலம் மாவட்டத்திற்கு அடுத்து இரண்டாம் இடம் வகிக்கும் மாவட்டம் கன்னியாகுமரி.
தமிழகத்தில் தர்மபுரி மாவட்டத் துக்கு அடுத்து அடர்ந்த வனப்பகுதி கொண்ட கன்னியாகுமரி 32% வனப்பரப்பு கொண்டது.
நெல் கன்னிப்பூ (ஏப்ரல் முதல் ஜூன் வரை) மற்றும் கும்பப் பூ (செப்டம்பர் முதல் நவம்பர் வரை) என இரு பருவங்களில் பயிரிடப்படுகிறது.
இரண்டாம் நிலைத் துறை
ரப்பர் தொழிற்சாலைகள், உப்பு பதனிடுதல், விசைப்படகு (ம) எந்திரப்படகு கட்டுதல், காற்றாலைகள் (ஆரல்வாய்மொழி), சர்க்கரைவள்ளிக் கிழங்கிலிருந்து மைதா தயாரித்தல், இந்திய அருமண் தொழிற்சாலை (மணவாளக்குறிச்சி), பிளாஸ்டர் தொழிற்சாலை இம்மாவட்டத்திலுள்ள முக்கிய தொழற்சாலைகள்.
மூன்றாம் நிலைத் துறை
உலகப் பொதுமறை இயற்றிய திருவள்ளுவருக்கு 132 அடி உயரச் சிலை 01.01.2000 அன்று குமரிமுனையில் கட்டப்பட்டது.
விவேகானந்தர் பாறை மற்றும் நினைவிடம் இம்மாவட்டத்தின் மற்றொரு சிறப்பு.
தமிழகத்தின் அதிக மக்கள் அடர்த்தி கொண்ட மாவட்டம்.
வழிபாட்டிடங்கள்:  பகவதியம்மன், சுசீந்திரம் தாணுமாலையன் கோயில், நாகர்கோவில் நாகராஜா கோயில், முந்திரிதோப்பு வைகுண்டசாமி அய்யா, கோட்டாறு சவேரியார் கோயில். தக்கலை ஞானி பீர்முகமது மசூதி பாரம்பரிய மருத்துவங்களான சித்த வைத்தியம், ஆயுர்வேதம், வர்மக்கலைக்கு பெயர் பெற்றது.
சூரியோதயம், சூரிய அஸ்தமனம் ஆகியவற்றை இந்தியாவில் நேரடியாகப் பார்க்கக்கூடிய ஒரே இடம் கன்னியாகுமரி மட்டும்தான்.
தமிழகத்திலேயே இயற்கை ரப்பர் உற்பத்திச் செய்யும் மாவட்டம் இது.
வர்ம வைத்திய முறைகள் கன்னியாகுமரிப் பகுதிகளில் குரு-சிஷ்ய முறையில் கற்பிக்கப்படுகிறது.
குறிப்பிடத்தக்கவர்கள்: கம்யூ னிஸ்ட் தலைவர் ப.ஜீவானந்தம், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், எழுத்தாளர் சுந்தர ராமசாமி.

 திருநெல்வேலி மாவட்டம்
வளம் மிக்க வண்டல் மண் பகுதியான இந்தப் பகுதி, பாண்டியர்கள் ஆட்சிக்குப் பிறகு சோழப் பேரரசின் முக்கிய நகரமாக மாறியது. பிறகு, விஜயநகரப் பேரரசு, நாயக்கர்கள், நவாப்கள், மாறி இறுதியில் ஆங்கிலேயர்கள் வசம் வந்தது.
தென்பாண்டி நாடு, முடிகொண்ட சோழ மண்டலம், டின்னவேலி, நெல்லை கட்டபொம்மன் மாவட்டம் என அடுத்தடுத்து பெயர் மாறி, தற்போது 'திருநெல்வேலி’ என அழைக்கப்படுகிறது.
தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களின் சில பகுதிகளை கொண்டு 1790-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ம் தேதி 'திரு நெல்வேலி மாவட்டம்’  உருவானது.
முதனிலைத் துறை
நெல், கரும்பு, பருத்தி, மிளகாய், மிளகு, தேயிலை, காப்பி, ரப்பர் போன்றவை முக்கிய வேளாண் பயிர்கள்.
நெல்லையிலிருந்து சுமார் 60 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்டம் புகழ் பெற்றது.
தமிழக மாநில மரமான பனை மரங்கள் இம்மாவட்டத்தில் மிகுதி.
இரண்டாம் நிலைத் துறை
சிமென்ட் ஆலை (தாழையூத்து), சர்க்கரை ஆலை (வாசுதேவ நல்லூர்), காகித ஆலை (அம்பை மதுரா கோட்ஸ்) போன்றவை புகழ்பெற்ற தொழிற்சாலைகள்.
பத்தமடைப் பாய்கள் உலகப் புகழ் பெற்றவை.
நாங்குநேரி சிறப்புப் பொருளாதார மண்டலம் 2001ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
மூன்றாம் நிலைத் துறை
மிஷனரிகளால் ஏற்படுத்தப்பட்ட பள்ளிகளுக்குப் புகழ் பெற்ற ஊரான பாளையங்கோட்டை 'தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்ட்’ எனப்படுகிறது.
சுற்றுலா தலங்கள் :  பாபநாசம் நீர்வீழ்ச்சி (பாண தீர்த்தம்), மணிமுத்தாறு நீர்வீழ்ச்சி, குற்றாலம் (தென்னாட்டு ஸ்பா, சிவபெருமானின் சித்திர சபை), நெல்லையப்பர் கோயில் (சிவபெருமானின் தாமிர சபை), கிருஷ்ணாபுரம் (நாயக்கர் காலச் சிற்பங்கள்),   திருக்குறுங்குடி (நம்பியாண்டவர் கோயில்), முண்டந்துறை - களக்காடு புலிகள் பாதுகாப்பகம்,  கூந்தன்குளம் பறவைகள் புகலிடம், அரியகுளம் பறவைகள் புகலிடம்.
ஜூலை மாதம் குற்றாலத்தில் நடை பெறும் 'சாரல் விழா’ பிரபலம்.
பணக்குடியில் ஆரம்பிக்கும் மேற்கு தொடர்ச்சி மலை, மும்பை வரை நீள்கிறது.
குறிப்பிடத்தக்கவர்கள்:
இம்மாவட்டத்தில் வந்து தங்கிய ராபர்ட் கால்டுவெல் ('டின்னவேலி சரித்திரம்’ எழுதியவர்), டி.கே.சிதம்பரநாத முதலியார், பூலித்தேவன், வாஞ்சிநாதன், புதுமைப் பித்தன், நீதிபதி ரத்தினவேல் பாண்டியன்.

 தூத்துக்குடி மாவட்டம்
இந்த மாவட்டம், கடல் வழி வாணிபத்துக்கும், முத்துக்குளிப்புக்கும் பல நூற்றாண்டுகளாக பேர் போனது.
பாண்டியர் ஆட்சியில் இருந்த போதுதான் இங்கு துறைமுகம் உருவாக்கப்பட்டது. அதன்பிறகு சோழ மன்னர்கள், போர்ச்சுக்கீசியர்கள், டச்சு நாட்டவர்களின் பிடியிலும் இந்தப் பகுதி இருந்தது.
கி.பி.1782-ல் டச்சு நாட்டவரிடம் இருந்து தூத்துக்குடியைக் கைப்பற்றி, கிழக்கு இந்திய கம்பெனியை ஆங்கிலேயர் நிறுவினர்.
1986ம் ஆண்டு அக்டோபர் 20ம் நாள் திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து சிதம்பரனார் மாவட்டமாக உருவாக்கப்பட்டு, பின்னர் 1997ல் தூத்துக்குடி மாவட்டம் எனப் பெயர் மாற்றப்பட்டது.
2008, ஆகஸ்ட் 5-ம் தேதி, தமிழகத்தின் 10-வது மாநகராட்சியாக தூத்துக்குடி அறிவிக்கப்பட்டது.
முதனிலைத் துறை
நெல், சோளம், கம்பு, நிலக் கடலை, பருத்தி, வாழை போன்றவை முக்கிய வேளாண் பயிர்கள்.
தமிழக மொத்த கம்பு உற்பத்தியில் சுமார் 35%க்கும் மேல் இம்மாவட்டத்தில் இருந்து உற்பத்தியாகிறது.
வாழை ஏற்றுமதியில் இம்மாவட்டம் தமிழகத்தில் முன்னிலை வகிக்கிறது.
இந்திய உப்பு உற்பத்தியில் 30%ஐயும், தமிழக உப்பு உற்பத்தியில் 70% ஐயும் தருபவை தூத்துக்குடி உப்பளங்களாகும். குஜராத்துக்கு அடுத்து தூத்துக்குடி இந்தியாவின் 2வது பெரிய உப்பு உற்பத்தி மையமாகும்.
முத்துக் குளிப்புக்குப் பெயர் பெற்ற இடமான இது, 'முத்து நகரம்’ என அழைக்கப்படுகிறது.
தூத்துக்குடி கடற்கரை மணலில் அணு கனிமத் தாதுக்கள் கிடைக்கின்றன.
இரண்டாம் நிலைத் துறை
ஸ்பிக் உரத் தொழிற்சாலை 1987ம் ஆண்டு மத்திய அரசால் அமைக்கப் பட்ட கனநீர் உற்பத்தி சாலை, ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை, அனல் மின் நிலையம், குலசேகரப் பட்டினம் கடலலை மின் நிலையம் போன்றவை இம்மாவட்டத்தில் அமைந்துள்ளன.
இந்தியாவின் முதல் செயற்கை முத்து தூத்துக்குடியிலுள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தில் 1973ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
மூன்றாம் நிலைத் துறை
சுற்றுலா தலங்கள் : திருச்செந்தூர் முருகன் கோயில், மணப்பாடு (தென்னிந்தியாவின் மியாமி எனப்படும் அழகிய கடற்கரை), கழுகுமலை, ஓட்டப்பிடாரம் (வ.உ.சி. பிறந்த ஊர்), எட்டயபுரம் (பாரதியார் மற்றும் உமறுப் புலவர் பிறந்த ஊர்), பாஞ்சாலங்குறிச்சி (வீரபாண்டியக் கட்டபொம்மன் கோட்டை) கயத்தாறு (கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடம்), நவதிருப்பதிகள் (திருவைகுண்டம், திருவரகுண மங்கை, திருப்புளியங்குடி, திருக்குளந்தை, திருத்தொலைவில்லி மங்கலம், தென் திருப்பேரை, திருக்கோளூர், திருக்குருகூர் எனும் ஆழ்வார் திருநகரி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாங்குனேரி (எ) வானமாமலை).
வாஞ்சிநாதன் நினைவாக மணியாச்சி ரயில் நிலையம் 'வாஞ்சி மணியாச்சி சந்திப்பு’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

 விருதுநகர் மாவட்டம்
பண்டைய காலத்தில் நாயக்கர்கள் மற்றும் பாண்டியர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.
1985-ம் ஆண்டு, மார்ச் 15-ம் தேதி, ராமநாதபுரம் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு, பசும்பொன் தேவர் திருமகன் மாவட்டம் (சிவகங்கை), காமராஜர் மாவட்டம் (விருதுநகர்), ராமநாதபுரம் மாவட்டம் ஆகிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.  காமராஜர் மாவட்டம் பின்னர் 1997ம் ஆண்டு 'விருதுநகர் மாவட்டம்’ எனப் பெயர் மாற்றம் பெற்றது.
முதனிலைத் துறை
நெல், கரும்பு, பருத்தி, பருப்பு வகைகள் போன்றவை முக்கிய வேளாண் பயிர்கள்.
ராஜபாளையம் நாய்கள் தேசிய அளவில் புகழ் பெற்றவை.
இரண்டாம் நிலைத் துறை
தீப்பெட்டி, பட்டாசு, அச்சுத் தொழில்களுக்குப்  புகழ்பெற்ற, 'குட்டி ஜப்பான்’ என்று அழைக்கப் படும் சிவகாசி இம்மாவட்டத்தில் அமைந்துள்ளது.
சிவகாசி நகரத்தில் இந்தியாவின் மொத்த பட்டாசுத் தேவையில் 90% உற்பத்தி ஆகிறது.
இந்தியாவின் மொத்தத் தீப்பெட்டி உற்பத்தியில் 70% சிவகாசி மற்றும் சாத்தூர் பகுதிகளில் உற்பத்தி யாகிறது.
ஜெர்மனியிலுள்ள குட்டன்பர்க் நகரத்தை அடுத்து உலகிலேயே அதிக ஆஃப்செட் அச்சகங்கள் கொண்ட நகரமாக சிவகாசி திகழ்கிறது.
ஆலங்குளம் மற்றும் துலுக்கப் பட்டி சிமென்ட் ஆலைகள், டிட்கோ, சிப்காட் தொழிற்பேட்டைகள் இம்மாவட்டத்தில் உள்ளன.
பருத்தி ஆலைகள் நிறைந்த ராஜபாளையம் 'பருத்தி நகரம்’ என்று அழைக்கப்படுகிறது.
மூன்றாம் நிலைத் துறை
'வியாபார நகரம்’ என்று அழைக்கப்படும் விருதுநகரிலிருந்து நல்லெண்ணெய், பருப்பு, மல்லி போன்ற பொருட்கள் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகின்றன.
விருதுநுகர், சாத்தூர், ராஜபாளையம், சிவகாசி போன்றவை முக்கிய வர்த்தக மையங்கள்.
சுற்றுலா தலங்கள்: ஸ்ரீவில்லி புத்தூர் ஆண்டாள் கோயில் (தமிழக அரசு சின்னமான கோபுரத்தைக் கொண்டது), ரமண மகரிஷி பிறந்த 'திருச்சுழி’, சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் (ஸ்ரீவில்லிபுத்தூர்), தமிழகத்தில், பாண்டியர்கள் கட்டிய 14 கோயில்களில் 10-வது கோயில் அய்யனார் கோயில், பிளவக்கல் அணை,  ஐயனார் நீர்வீழ்ச்சி, சவேரியார் ஆலயம், சித்தர் வாழ்வதாக நம்பப்படும் சதுரகிரி மலை போன்றவையும் இம்மாவட்டத்திலுள்ள முக்கிய சுற்றுலா தலங்கள்.
எளிமையின் இலக்கணம், 'கிங் மேக்கர்’, பெருந்தலைவர், தமிழகத்தின் கல்விக் கண் திறந்தவர், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்து, சிறப்பாகப் பணியாற்றியவர், இறப்புக்குப் பின் பாரதரத்னா விருது பெற்ற முதல் இந்தியர் எனப் பல சிறப்புகளைப் பெற்ற காமராஜர் பிறந்த மாவட்டம். விருதுநகரிலுள்ள அவரது வீடு 'காமராஜர் நினைவு இல்லம்’ ஆக அரசாங்கத்தால் பராமரிக்கப்படுகிறது.

 ராமநாதபுரம் மாவட்டம்
 தென் தமிழகத்தில் அமைந்துள்ள ஒரு கடற்கரை மாவட்டம். பாண்டியர்களின் ஆட்சியின் கீழ் இருந்து, பிறகு சோழர்களும் மீண்டும் பாண்டியர்களும் ஆண்டனர். விஜயநகர பேரரசு நாயக்கர்களின் கட்டுப்பாட்டுக்குள்ளும் வந்தது. பிறகு, நாயக்கர்களின் ஆதிக்கம் குறைந்ததும், மராட்டியர்களும் நிஜாம்களும் ஆட்சி புரிந்தனர்.
இந்தப் பகுதி ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகு, 1910-ம் ஆண்டு மதுரை, திருநெல்வேலியின் சில பகுதிகளைக் கொண்டு இந்த மாவட்டம் உருவானது.
முதனிலைத் துறை
நெல், கம்பு, சோளம் முக்கியப் பயிர்களாகும். மிளகாய் சந்தை  (தமிழ்நாட்டில் மிகப்பெரிய சந்தை), தேங்காய் மொத்த வணிகத்திற்கும்  புகழ் பெற்றது.
தமிழக அரசின் தென்னை ஆராய்ச்சிப் பண்ணையும், பழத்தோட்டப் பண்ணைகளும் தேவிப்பட்டினத்தில் அமைந்துள்ளது.
மீன்பிடித்தல், முத்துக்குளித்தல் இம்மாவட்டத்தின் முக்கிய தொழில்கள். அரசின் வேளாண்மைப் பள்ளியும், வேளாண்மைப் பண்ணையும் பரமக்குடியில் அமைந்துள்ளது.
'மன்னார் வளைகுடா கடலுயிரி காப்பகம்’ இந்தியாவின் முதல் கடலுயிரி காப்பகம்.
இரண்டாம் நிலைத் துறை
நெசவுத் தொழில் (பரமக்குடி), பருத்தி (கமுதி), பனையோலை பொருட்கள் (சித்தார்கோட்டை) போன்றவை சிறுதொழில்கள்.
சங்குகளை அறுத்து அணிகலன்கள் செய்தல், மீன்பிடித்தல், மண்பாண்டங்கள் செய்தல் போன்ற தொழில்களுக்கு கீழக்கரை துறைமுகம் பெயர்போனது.
மண்டபத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு முத்து நிறுவனம் செயற்கை முத்து தயாரிக்கிறது.
இராமேஸ்வரம் தீர்த்தம், தேங்காய், புளி, சரளைக்கல், சோழி, சங்கு, கடல் மீன், கடல் ஆமை, நண்டு, மீன் முதலியன இங்கிருந்து ஏற்றுமதி  ஆகும் முக்கிய பொருட்களாகும்.
மூன்றாம் நிலைத் துறை
1913இல் கட்டப்பட்ட பாம்பன் ரயில் தூக்கு பாலம் இந்தியாவின் முதல் கடல் பாலமும் இரண்டாவது பெரிய கடல் பாலமுமாகும். இந்திய அரசின் வானிலை ஆய்வு மையம் பாம்பனில் அமைந்துள்ளது.
இராமேஸ்வரம் (தென் இந்தியாவின் காசி) தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று. இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங் கங்களுள் ஒன்று இக்கோவிலில் உள்ளது.
ரோமானியர்களின் நாணயங்களும், மௌரியர் கால ஓவியங்களும், பானை ஓடுகளும் 1983 இல் அழகன்குளத்தில் நடந்த தொல்பொருள் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அலைவாய்க் கரை என்று அழைக்கப்படும்  தொண்டி பாண்டியர்களின்  துறைமுகமாக விளங்கியது. யானைகளும் முத்துக்களும் அரபு நாடுகளுக்கு இத்துறைமுகம் வழியே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
குறிப்பிடத்தக்க இடங்கள்
இராமேஸ்வரம், திருபுல்லாணி பெருமாள் கோயில், உத்திரகோச மங்கை, திருவாடானை, ஏர்வாடி தர்ஹா, ஓரியூர் கிறித்துவ தேவாலயம், நயினார் கோயில், ராமநாதபுரத்தில் உள்ள சேதுபதி ராஜா அரண்மனை
குறிப்பிடத்தக்கவர்கள்: முத்துராம லிங்க சேதுபதி,   பாஸ்கர சேதுபதி, முத்துராமலிங்கத் தேவர், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், கமல்ஹாசன்.

 சிவகங்கை மாவட்டம்
 இது, பல நூற்றாண்டுகளாக ராமநாதபுரம் மாவட்டத்துடன் இணைந்திருந்தது. கலை நேர்த்தியோடு கட்டப்பட்டு கம்பீரமாக எழுந்து நிற்கும் செட்டிநாட்டு மாளிகைகளை உள்ளடக்கியது சிவகங்கை சீமை.
மருதுபாண்டியர் வாழ்ந்த பூமியான இது, ராமநாதபுரத்தின் 7-வது அரசனாகிய ரகுநாத சேதுபதி ஆட்சியின் கீழ் இருந்தது. வேலுநாச்சியருக்குப் பிறகு மருது சகோதரர்கள் ஆட்சி புரிந்தனர். இவர்களின் வீழ்ச்சிக்குப்பின் ஆங்கிலேயர் ஆட்சி செய்தனர்.
1985-ம் ஆண்டு மார்ச் 15-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பிரிக்கப் பட்டபோது, 'பசும்பொன் தேவர் திருமகன் மாவட்டம்’ உருவானது. பிறகு இதுவே 'சிவகங்கை மாவட்டம்’ என மாறியது.
முதனிலைத் துறை
நெல், வாழை, கரும்பு, (திருப்புவனம்) வேர்க்கடலை (சிங்கம்புணரி), வெற்றிலைக் கொடிக் கால்கள்(இளையான்குடி) முதலிய பயிர்களும் மானாவாரி நிலங்களில் மிளகாய், பருத்தி, வரகு, கொள்ளு போன்ற பயிர்களும் விளைவிக்கப்படுகின்றன.
பிரான்மலையில்  மாம்பழம், பலாப்பழம், சீத்தாப்பழம், காய் கறிகள் அதிகம்  விளைகின்றன.
சிமென்ட் தயாரிக்கப் பயன்படும் சுண்ணாம்புக் கல், இரும்புக் கனிகள்(கானாடு காத்தான்), பழுப்பு நிலக்கரி(காரைக்குடி), வெள்ளைக் களிமண், கிராபைட் கனிமம், எஃகு களிமண் (நாட்டரசன் கோட்டை) போன்ற கனிமங்கள் இம்மாவட்டத்தில் கிடைக்கிறது. வள்ளல் பாரி வாழ்ந்த பறம்பு மலை பிரான்மலை யேயாகும்.
இரண்டாம் நிலைத் துறை
குடிசைத் தொழில்கள், செங்கற்கள் சூளை (மானாமதுரை), கைத்தறி நெசவு ஆலைகள், பாய்,கூடை முடைதல், பனை பொருட்கள் தயாரிப்பு, தச்சுத் தொழிற்சாலை, பனை ஓலையை கொண்டு பல்பொருள் செய்யும் நிலையங்கள், கடலை அரைக்கும் ஆலைகள் (சிங்கம்புணரி), கயிறு பின்னும் தொழில் போன்ற கைவினைத் தொழில்களும் மிகுதி. திருப்பாச்சி, அரிவாள் உற்பத்திக்கு பெயர் பெற்றது.
மூன்றாம் நிலைத் துறை
காரைக்குடி வியாபாரத் துறையிலும் முன்னணியில் திகழ்கிறது. பங்கு மார்க்கெட்டும் தங்கம், வெள்ளி, வைர வியாபாரமும் மிகுந்துள்ளது. காரைக்குடி பழம்பெரும் வீடுகளும், நாகரிக வசதி வாய்ந்த அரண்மனை போன்ற கட்டடங்களும் புகழ் பெற்றது. பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ள கற்பக விநாயகர் கோயில் புகழ் பெற்றது.
குறிப்பிடத்தக்கவர்கள்: மருது சகோதரர்கள், வேலுநாச்சியார், கணியன் பூங்குன்றனார், மாசாத்தியார், மாசாத்தனார் (சங்ககாலம்), பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், கவியரசு கண்ணதாசன், வள்ளல் அழகப்ப செட்டியார், அண்ணாமலை செட்டியார், முத்தையா செட்டியார், திரைப்படத் தயாரிப்பாளர் ஏவி.மெய்யப்ப செட்டியார், எழுத்தாளர் தமிழ்வாணன், சுத்தானந்த பாரதி, வயலின் இசை வல்லுநர் குன்னக்குடி வைத்தியநாதன், சைவத் தமிழ் அறிஞர் குன்றக்குடி அடிகளார், எழுத்தாளரும் இயக்குனருமான கொத்தமங்கலம் சுப்பு, கவிஞர் முத்துலிங்கம்.

 மதுரை மாவட்டம்
 சங்க காலத்தில் மிகவும் பெருமை வாய்ந்த பழமையான நகரம். புராண காலத்தில் 'கடம்ப வனம்’ என்று அழைக்கப்பட்டது.  'கூடல்’ என்பது இதன் பழைய பெயர். இதற்கு 2500 ஆண்டு கால வரலாறு உண்டு.  மருத மரங்கள் நிறைந்த ஊர் ஆதலால் மருதை என்ற பெயர் பெற்றது. 'கோயில் நகரம்’ எனவும் 'தமிழ்நாட்டின் ஏதென்ஸ்’ எனவும் 'தூங்கா நகரம்’ எனவும் அழைக்கப்படுகிறது. தமிழ்ச் சங்கங்களின் இருப்பிடமான மதுரை, பண்டைய காலத்தில் பாண்டிய நாட்டின் தலைநகரமாக விளங்கியது. புற நானூற்றில் மதுரை 'தமிழ்கெழு கூடல்’ என்றும், பரிபாடலில் 'தமிழ் வேலி’ என்றும் குறிப்பிடப்படுகிறது.
பிறகு, சோழர்கள் வசம் இருந்த மதுரையை மீண்டும் கைப்பற்றினார்கள் பாண்டியர்கள். விஜயநகர பேரரசின் கீழ்  இருந்த மதுரையை, பிறகு நாயக்கர்கள் ஆண்டார்கள். ஆங்கிலேயர் ஆட்சியில் 1786ம் ஆண்டு மதுரை மாவட்டம் உருவாக்கப்பட்டது. 1996ல் மதுரை மாவட்டத்திலிருந்து தேனி மாவட்டம் பிரிக்கப்பட்டது.
முதனிலைத் துறை
நெல், நிலக்கடலை, சூரியகாந்தி, எள் மற்றும் மல்லிகை போன்றவை இம்மாவட்டத்தின் முக்கிய விவசாயப் பயிர்களாகும்.
நவரத்தினங்கள், கிரானைட், சுண்ணாம்புக் கற்கள் போன்றவை இம்மாவட்டத்தின் முக்கியக் கனிமங்களாகும்.
இரண்டாம் நிலைத் துறை
பஞ்சாலைகள், இரசாயன தொழிற்சாலைகள், கதர் நெசவு உற்பத்தி, பனைபொருட்கள் தயாரிப்பு போன்றவை இம்மாவட்டத்தின் முக்கியத் தொழில்கள்.

மூன்றாம் நிலைத் துறை சுற்றுலா தலங்கள்
திருப்பரங்குன்றம், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் (65,000 சதுர மைல் பரப்பு கொண்டது), ஆயிரங்கால் மண்டபம் (ஒரே நேர்கோட்டில் அமைந்த ஆயிரம் தூண்களைக் கொண்டது),  பழமுதிர்ச் சோலை, திருமலை நாயக்கர் மஹால் (1636ல் திருமலை நாயக்கரால் கட்டப்பட்டது. தங்கவிலாசம், சொர்க்க விலாசம் என இரு பகுதிகளைக் கொண்டது. மெட்ராஸ் கவர்னர் நேப்பியர் பிரபுவால் 1866-72ல் சீரமைக்கப்பட்டது), காந்தி மியூசியம் (காந்தி மேலாடையை துறந்த இடம்) ஆகியவை மதுரை மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலங்களாகும்.
ஜில் ஜில் ஜிகர்தண்டா, பருத்திப் பால் மதுரையின் ஃபேவரைட்.
மணக்கும் மல்லிகைக்கும்,  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கும் மதுரை பெயர் பெற்றது.
சித்திரைத் திருவிழா, இந்த மாவட்டத்தின் சிறந்த அடையாளங் களில் ஒன்று.
மதுரை அவனியாபுரத்தில் ஏர்போர்ட் அமைந்துள்ளது.
சென்னை ஐகோர்ட்டின் கிளை மதுரையில் செயல்படுகிறது.
குறிப்பிடத்தக்கவர்கள்
பிரபல கர்நாடக இசைப்பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி (மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி), 'மதுரை காந்தி’ என்.எம்.ஆர்.சுப்பராயன், வைத்தியநாத அய்யர் (ஆலய நுழைவுப் போராட்டம்)

No comments:

Post a Comment