Friday, 24 January 2014

தமிழக அரசு அடையாளங்கள்

தமிழக அரசு சின்னம் : ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம். (Emblem of the State)
தமிழக அரசு வாசகம் : வாய்மையே வெல்லும்
தமிழ்த்தாய் வாழ்த்து : நீராருங் கடலுடுத்த...
மாநில விலங்கு : நீலகிரி வரையாடு (Nilgiri Tahr)
மாநிலப் பறவை : மரகதப்புறா (Emerald Dove)
மாநில மரம் : பனை
மாநில மலர் : செங்காந்தள் (கார்த்திகைப் பூ)
மாநில விளையாட்டு : கபடி
மாநில ஆடல் : பரதநாட்டியம்
 தமிழக அரசு சின்னம்
தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ சின்னமாக விளங்குவது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலின் கோபுரம் ஆகும்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலின் கோபுரம் தமிழகக் கட்டிடகலைக்குச் சான்றாக விளங்குகிறது. அகலம் குறுகிய பதினொரு நிலைகள் கொண்ட கோபுரத்தின் நீளம் ஒரு பிரம்மாண்ட தோற்றத்தை அளிக்கிறது. அக்கோபுரத்தின் மடிப்புகளும், அதில் உள்ள சிற்பங்களும்  தனித்தன்மை கொண்டவை.
11 நிலைகளைக் கொண்ட 192 அடி உயரமான இக்கோபுரம் பெரி யாழ்வாரால் தம் மகள் ஆண்டாளின் கணவராகிய பெருமாளுக்காகக் கட்டப்பட்டது என நம்பப்படுகிறது.
மதரீதியான சின்னங்களை அரசு  முத்திரையில் வைக்கக் கூடாது என்று கோரி 2013 ல் தொடுக்கப்பட்ட பொதுநல மனுவை சென்னை உயர்நீதிமன்றம் (தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ்குமார் அகர்வால், நீதிபதி எம்.சத்தியநாராயணன்) 'கோயில் கோபுரம் என்பது தமிழகத்தின் கலாசாரம், பண்பாடு ஆகியவற்றின் சின்னமாகும். எனவே, அதனைக் கொண்டு ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு ஆதரவாக அரசு செயல்படுவதாகக் கருத முடியாது' என்று கூறித் தள்ளுபடி செய்தது.
தமிழக அரசு வாசகம் வாய்மையே வெல்லும்
தமிழக அரசின் சின்னத்திலுள்ள 'வாய்மையே வெல்லும்'  என்ற வாசகம், 'சத்யமேவ ஜயதே' என்ற  சமஸ்கிருத வாக்கியம் தேவநாகரி லிபியிலிருந்து வந்தது.
இந்தியாவின் தேசிய சின்னத்தில் இடம் பெற்றுள்ள இவ்வாக்கியம் தமிழக அரசின் சின்னத்திலும் இடம் பெற்றுள்ளது. இது முண்டக உபநிடதத்தின் புகழ் பெற்ற மந்திரங்களில் ஒன்றாகும்.
 தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்
தமிழ் மொழியை வாழ்த்தி வணக்கம் செலுத்துவதாக அமைந்துள்ள தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை எழுதியவர் மனோன்மணீயம் பெ. சுந்தரனார்.
ஜூன் 1970ஆம் ஆண்டு தமிழக அரசால் இப்பாடல் தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மனோன்மணீயம் சுந்தரனார் எழுதிய புகழ்பெற்ற நாடகமான மனோன்மணீயம் நூலில் இடம்பெற்ற தமிழ்த் தாய் வணக்கப் பாடலான  'நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்' என்ற பாடல் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலாக அமைந்துள்ளது.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடல்
'நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!
உன் சீரிளமைத் திறம்வியந்து
செயல்மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!! வாழ்த்துதுமே!!!'
 பாடலின் பொருள்
ஒலி எழுப்பும் நீர் நிறைந்த கடலெனும் ஆடையுடுத்திய நிலமெனும் பெண்ணுக்கு, அழகு மிளிரும் சிறப்பு நிறைந்த முகமாகத் திகழ்கிறது  பரதக்கண்டம். அக்கண்டத்தில், தென்னாடும் அதில் சிறந்த திராவிடர்களின் நல்ல திருநாடும், பொருத்தமான பிறைபோன்ற நெற்றியாகவும், அதிலிட்ட மணம் வீசும் திலகமாகவும் இருக்கின்றன.
அந்த திலகத்தில் இருந்து வரும் வாசனைபோல, அனைத்துலகமும் இன்பம்பெறும் வகையில் எல்லாத்திசையிலும் புகழ் மணக்கும்படி (புகழ் பெற்று) இருக்கின்ற பெருமை மிக்க தமிழ்ப்பெண்ணே! தமிழ்ப்பெண்ணே! என்றும் இளமையாக இருக்கின்ற உன் சிறப்பானத் திறமையை வியந்து உன் வயப்பட்டு எங்கள் செயல்களை மறந்து உன்னை வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே!
பாடலின் ஆங்கிலப் பொருள்
“Bharatha is like the face beauteous of Earth clad in wavy seas;
Deccan is her brow crescent-like on which the fragrant ‘Tilak’
is the blessed Dravidian land.
Like the fragrance of that ‘Tilak’ plunging the world in joy
supreme reigns Goddess Tamil with renown spread far and wide.
Praise unto You, Goddess Tamil, whose majestic
youthfulness, inspires awe and ecstasy.”

இப்பாடலில் ஆரியம் போல தமிழ் உலகவழக்கழிந்து சிதையவில்லை என்று கூறும்
'பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்'
என்ற வரிகள்  நீக்கப்பட்டு தமிழ்த்தாயைப் புகழும் வகையில் அமைந்த முதல் பத்தி மட்டும் ஏற்கப்பட்டுள்ளன.
இந்திய திருநாட்டின் இரு பெரும் பண்பாட்டு மொழிகளான வடமொழி (சமஸ்கிருதம்), தென்மொழி (தமிழ்) ஆகியவற்றில் தென்மொழியான தமிழ், வடமொழியான ஆரியத்தைப் போல் பேச்சு வழக்கழிந்து சிதையவில்லை எனப்பாராட்டும் இரண்டாம் பத்தி தமிழக அரசால் ஏற்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தில் இடம்பெறவில்லை.
மாநில விலங்கு-வரையாடு
வரையாடு (Nilgiri Tahr) தமிழ் நாட்டின் மாநில விலங்கு ஆகும்.
ஹெமிடிராகஸ் ஹய்லோசிரியஸ் (Nilgiritragus hylocrius) என்பது இதன் விலங்கியல் பெயராகும்.
கடல்மட்டத்திலிருந்து 1,200 முதல் 2,600மீ உயர்ந்த மலைமுகடுகளின் உச்சியில் உள்ள சமவெளி பகுதிகளில் வாழும் பண்புடைய வரையாடு மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கே உரிய சிறப்பினங்களில் ஒன்றாகும்.
நீலகிரி டார் எனப்படும் வரையாடு உயரமான மலைகளில் செங்குத்தான பாறைகளில் ஏறிச்செல்லக்கூடியது.
மாநிலப் பறவை-மரகதப்புறா
தமிழ்நாட்டின் மாநிலப் பறவையான மரகதப்புறா (Emerald Dove) பச்சை நிற இறகுகளும் சிவப்பு நிற அலகும் கொண்டது.
மரகதப்புறாவின் அறிவியல் பெயர் ‘Chalcophaps indica’.
மரகதப்புறா தெற்காசியாவின் வெப்ப மண்டல மழைக்காடுகளிலும் அதைச் சார்ந்த அடர்ந்த ஈரமான காடுகள், தோட்டங்கள், பூங்காக்கள், சதுப்பு நிலக்காடுகள், கடலோரக் குற்றுயரத் தாவரக் காடுகளிலும் காணப்படுகின்றன.
வீடுகளில் வாழும் தன்மையுடைய புறாவான இது  பச்சைப் புறா,  பச்சை இறகுப் புறா எனவும் அழைக்கப்படுகிறது.
மரகதப் புறா  23 முதல் 28 செ.மீ. நீளமுள்ள,  நடுத்தர அளவுள்ள புறாவாகும்.
மாநில மரம்-பனை
பனை தமிழகத்தின் மாநில மரம் ஆகும். இதன் தாவரவியற் பெயர் பொராசஸ் பிலபெலிபேரா Borassus flabellifera) என்பதாகும்.
பொதுவாக தமிழில் பனை ஒரு மரம் என்று வழங்கப்படினும் தொல்காப்பியம் காட்டும் தாவர மரபு படியும், தாவரவியல் அடிப்படையிலும் பனை புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரமாகும்.
பனைகள் இயற்கையில் தானாகவே வளர்ந்து பெருகுகின்றன.  இளம் பனை வடலி எனப்படும்.
பனை வளர்ந்து முதிர்ச்சியடை வதற்கு ஆகும் காலம் 15 ஆண்டுகள். 30 மீட்டர் உயரம் வரை வளரும்.
நுங்கு, பனம் பழம், பனங்கிழங்கு, கள்ளு, பதநீர், பனைவெல்லம், பனங்கற்கண்டு போன்ற உணவுப் பொருட்களும், கட்டடப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள், வீட்டு உப யோகப் பொருட்கள் எனப் பனையின் பயன்கள் ஏராளம்.
மாநில மலர்-செங்காந்தள்
தமிழகத்தின் மாநில மலர் செங்காந்தள் (Gloriosa, குளோரியோசா) ஆகும். இது கொடிவகையைச் சார்ந்தது.  இதன் தாவரவியல் பெயர் Gloria Superba.p>
கார்த்திகை மாதத்தில் மலர்வதால் கார்த்திகைப் பூ என்றும் அழைக்கப்படுகின்றது.
பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான குறிஞ்சிப்பாட்டில் அதன் ஆசிரியர் கபிலர் 99 மலர்களை பட்டியலிடுகிறார். அதில் முதலாவதாக இடம் பெறும் மலர் செங்காந்தள் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் விடுதலைப்புலிகள் அமைத்திருந்த தமிழ் அரசும் கார்த்திகைப்பூ என்ற பெயரில் செங்காந்தள் மலரையே தங்கள் தேசிய மலராக கொண்டிருந்தது.
தமிழ் நாட்டின் மாநில மலரான செங்காந்தள் ஜிம்பாவே நாட்டின் தேசிய மலராகும்.
மாநில விளையாட்டு-சடுகுடு (கபடி)
தமிழர்களால் பல காலமாக விளையாடப்படும் கபடி தமிழகத்தின் மாநில விளையாட்டாகும்.
கபடியில் அணிக்கு ஏழு பேர்.  மொத்த விளையாட்டு நேரம் 40 நிமிடங்கள். கபடி ஆடுகளத்தின் பரப்பு 12.5 மீ X 10 மீ.
இதுவரை நடந்துள்ள மூன்று கபடி (2004, 2007, 2010) உலகக் கோப்பை போட்டிகளிலும் இந்தியாவே வென்றுள்ளது.
மாநில பாரம்பரிய நடனம் பரதநாட்டியம்
தமிழகத்தின் பாரம்பரிய நடனம் பரத நாட்டியம். பாவம், ரசம், தாளம் என்ற மூன்று சொற்களில் இருந்து உருவானது பரதம் என்ற சொல் என்பார்கள். பரத முனிவர் நாட்டிய சாஸ்திரத்தில் பரத நாட்டியத்தின் இலக்கணக் கூறுகளை எடுத்துக் கூறியுள்ளார். இடைக்காலத்தில் இந்நாட்டியத்தை கோவில்களில் ஆடியவர்கள் தளிச்சேரி பெண்டுகள் என்று அழைக்கப்பட்டனர். கோவில்களில் தேவர் அடியார்களால் ஆடப்பட்டு இந்நடனம் இடைக்காலத்தில் சமூக மதிப்பை இழந்தது.
இந்நடனத்தின் சமூக மதிப்பை மீட்டெடுத்து மேட்டுக்குடி மக்களிடமும், சமூகத்தின் அனைத்து தளங்களிலும் பரதநாட்டியத்தை உயர்வடையச் செய்த பெருமை சென்னையைச் சேர்ந்த பண்பாட்டு நிறுவனமான கலாச்ஷேத்திராவை உருவாக்கிய ருக்மணி தேவி அருண்டேல் அவர்களையே சாரும். தற்போது ஆடப்படும் பரத நாட்டி யத்தின் வடிவம் தஞ்சை பொன்னையாப் பிள்ளை சகோதரர் களால் செம்மைப்படுத்தப்பட்டது.

No comments:

Post a Comment