Friday, 24 January 2014

தமிழக தொழில் வளம்

தமிழக தொழில் வளம்
Posted Date : 15:12 (15/12/2013)Last updated : 15:12 (15/12/2013)
உற்பத்தித் தொழிற்சாலைகள்
இரண்டாம் நிலைத் தொழிலான உற்பத்தித் தொழில் தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் தொழிலாகும்.
மஹாராஷ்டிரா, குஜராத்தை அடுத்து தமிழகம் தொழில் வளர்ச்சியில் மூன்றாம் இடத்தை வகிக்கின்றது.
மூலப்பொருட்களை ஒரு முழுமையான பயன்பாடு பொருளாக மாற்றும் செயலினை உற்பத்தி என்கிறோம். தனித்த உற்பத்தி  தொழிற்சாலை தொழிற்கூடம் என அழைக்கப்படுகிறது.
ஒரே விதமான பொருட்களை உற்பத்தி செய்யும் பல தொழிற்கூடங்கள் ஒரு பரந்த நிலப்பரப்பில் அமையுமானால் அவை தொழிற்சாலைகள் என அழைக்கப்படுகின்றன.
மாநிலத்தின் மொத்தம் வருமானத்தில் 24 விழுக்காடு தொழில்துறையின் மூலம் கிடைக்கிறது.
தமிழ்நாட்டின் முக்கியத் தொழிற்சாலைகளின் பரவல்
நெசவாலைகள், சர்க்கரை ஆலைகள், காகித உற்பத்தி, தோல் பொருட்கள் உற்பத்தி, சிமென்ட், மின் உபகரணங்கள், மோட்டார் வாகனம், தகவல் தொழில் நுட்பம் மற்றும் சுற்றுலா ஆகியவை தமிழ் நாட்டின் முக்கிய தொழில் துறைகளாகும்.
நெசவுத் தொழிற்சாலை
இந்திய நெசவுத் தொழில் துறையில் பருத்தி இழை உற்பத்தி, நெசவுத் துணி, உள்ளாடை மற்றும் ஆயத்த ஆடை உற்பத்தியில் தமிழ் நாடு பெரும் பங்கு வகிக்கின்றது.
பருத்தி நூல், இழை மற்றும் துணி உற்பத்தியில் இந்தியாவின் மொத்த உற்பத்தியில்  25 விழுக்காடு தமிழகத்தின் பங்களிப்பாகும்.
அயன மண்டல காலநிலை, எளிதாகக் கிடைக்கும் மூலப்பொருள், சந்தையில் பருத்திக்கான தேவை, கணக்கற்ற மின்திட்டங்களின் மூலம் கிடைக்கும் தடங்கலற்ற மின் விநியோகம், அதிக எண்ணிக்கையில் குறைந்த ஊதியத்தில் கிடைக்கும் தொழிலாளர்கள் ஆகியவை தமிழ் நாட்டில் பரவிக் காணப்படும் நெசவாலைகள் அமைவதற்கான காரணங்களாகும்.
கோயம்புத்தூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, திருப்பூர், காரமடை, ஈரோடு, பவானி, திண்டுக்கல், திருமங்கலம், மதுரை, பாளையங்கோட்டை, பாபநாசம் மற்றும் தேனி ஆகியவை நெசவுத் தொழிலின் மையப்பகுதிகளாகும்.
கோயம்புத்தூர் மண்டலம் மிகப்பெரிய அளவில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ளதால் இதனை 'தென் இந்தியாவின் மான்செஸ்டர்' என்று அழைக்கின்றனர்.
திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய மூன்று மாவட்டங்கள் நெசவுத் தொழிலின் மூலம் மாநிலத்தின் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிப்பதால், இப்பகுதி தமிழ் நாட்டின் 'நெசவு பள்ளத்தாக்கு' என்று அழைக்கப்படுகிறது. இவற்றுள் திருப்பூர் தமிழ்நாட்டின் 70 விடுக்காடு பின்னலாடை ஏற்றுமதி செய்கிறது.
ஆடை மற்றும் படுக்கை விரிப்புகளின் உற்பத்தியில் ஈரோடு மாவட்டம் முன்னிலை வகிக்கிறது.
தமிழ்நாட்டின் நெசவுத் தலைநகரம் என்ற சிறப்பு பெயரை கரூர் நகரம் பெற்றுள்ளது.
பட்டு நெசவுத் தொழில்
நாட்டின் பட்டு நெசவுத் தொழில் உற்பத்தியில் தமிழ்நாடு நான்காம் இடத்தைப் பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், பாரம்பரிய மிக்க, தனித்த நெசவுத் தரத்திற்காக உலகெங்கிலும் புகழ் பெற்றுள்ளது.
ஆரணி, இராசிபுரம் மற்றும் திருபுவனம் ஆகியவையும் குறிப்பிடத் தக்க பட்டு நெசவு மையங்களாகும்.
ஒசூரில் உள்ள பட்டுப் புழு வளர்ப்பு பயிற்சி மையம் விவசாயிகளுக்கு, விவசாயத்துடன் பட்டுப்புழு வளர்ப்பு குறித்து பயிற்சி அளித்து ஊரக பட்டு உற்பத்தி திறனை உயர்த்த வழிவகை  செய்கின்றது.
செயற்கை இழை ஆடை உற்பத்தியில் மேட்டூர், மதுரை மற்றும் இராமநாதபுரம் ஆகிய பகுதிகள் சிறப்புடன் விளங்குகிறது.
சர்க்கரை ஆலைகள்
இந்தியாவின் 10 சதவீத சர்க்கரை உற்பத்தி தமிழ்நாட்டில் உற்பத்தியாகிறது.
பெரும்பாலான சர்க்கரை ஆலைகள் கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படுகின்றன.
தமிழ்நாட்டில் மொத்தம் 42 சர்க்கரை ஆலைகள் உள்ளன. அவற்றில் 16 கூட்டுறவு சங்கங் களாலும், 3 அரசாலும், 23 தனியாராலும் நிர்வகிக்கப்படு கின்றன.
விழுப்புரம் , கடலூர், வேலூர், திருவண்ணாமலை, திருச்சி, தஞ்சாவூர் மற்றும் மதுரை மாவட்டங்கள் சர்க்கரை ஆலைகள் அதிகமுள்ள மாவட்டங்களாகும்.
வெல்லம், கல்கண்டு, சர்க்கரை ஆகியவை கரும்பிலிருந்து கிடைக்கும் உற்பத்தி பொருட்களாகும். சாறு பிழிந்தவுடன் கிடைக்கும் கரும்புச் சக்கை (molasses)  காகித தொழிற்சாலைக்கு மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
தமிழக அரசின் முயற்சியால் ஒருங்கிணைந்த சர்க்கரை வளாகங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் எரிசக்தி உற்பத்தி, எத்தனால் மற்றும் திசு வளர் ஆய்வகம், எரிசாராயம் உற்பத்தி, மண் பரிசோதனைக் கூடம், கூட்டு உரம் தயாரித்தல் போன்ற பணிகளை ஒருங் கிணைந்த மையங்கள் மேற்கொண் டிருக்கின்றன.
உணவு பதப்படுத்தும் தொழில்
உணவு பதப்படுத்தும் தொழில் தமிழ்நாட்டில் மிகச் சிறப்பாக வளர்ந்திருக்கிறது. மாம்பழ ரசம் பதப்படுத்தப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
விரைவில் சமைத்து உண்ணும் வகையில் பலவிதமான திடீர் உணவுப் பொட்டலங்கள் மற்றும் உணவிற்கு தேவையான மசாலா பொடிகள் தயாரிக்கப்பட்டு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் விநியோகிக்கப்படுகிறது.
நொறுக்கு வகை பலகாரங்களும், பிஸ்கட்களும் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.
கடல்சார் பொருட்களும் மிக அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழ் நாட்டின் நீண்ட கடற்கரை இதற்கு ஏதுவாக அமைந்துள்ளது.
காகித தொழிற்சாலை
இந்தியாவின் காகித உற்பத்தியில் ஆந்திராவிற்கு அடுத்தபடியாக தமிழகம் இரண்டாம் நிலையில் உள்ளது.
நாட்டின் 12 சதவீத காகித உற்பத்தி தமிழ்நாட்டிற்குரியது. மூங்கில், புற்கள், கரும்புச்சக்கை ஆகியவற்றை மூலப்பொருளாகக் கொண்டு காகிதம் தயாரிக்கப்படுகிறது.
காகித உற்பத்திக்கு, சோடா, சோடா உப்பு, குளோரின், கந்தகம், மரக்கூழ் அதிக அளவில் தண்ணீர் ஆகியவை இதர தேவைகளாகும்.
தமிழ்நாட்டின் புக்காத்துரை (காஞ்சிபுரம்) பவானிசாகர், பள்ளிப்பாளையம், புகளூர், பரமத்தி வேலூர், கோயம்புத்தூர், உடுமலைப்பேட்டை, தொப்பம்பட்டி, நிலக்கோட்டை மற்றும் சேரன்மாதேவி ஆகிய இடங்களில் காகித தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.
தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம்(TNPL) ஆண்டுக்கு ஒரு மில்லியன் டன் கரும்புச் சக்கையை மூலப்பொருளாகக் கொண்ட காகிதமாகத் தயாரிப்பதில், உலகிலேயே மிகப்பெரிய ஆலையாக  (TNPL) திகழ்கிறது.
செய்தித்தாள் தவிர காகிதம், தொலைபேசி கையேடு, கணிணி அச்சுத்தாள், சுவரொட்டி தாள்கள் மற்றும் நகல் அச்சுத்தாள் உற்பத்தியிலும் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
தோல் பதனிடுதல் தொழில்
இந்தியாவின் 70 சதவீதம் தோல் பதனிடும் ஆலைகள் தமிழ்நாட்டில் உள்ளன.
இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 60 விழுக்காடு தமிழ்நாட்டில் இருந்து ஏற்றுமதியாகிறது.
தோல் பதனிடும் தொழிற்சாலைகள் தமிழகம் எங்கும் பரவியிருக்கிறது. மேலும் வேலை வாய்ப்பும், ஏற்றுமதிக்கான வாய்ப்பும் உள்ளதால் தமிழ் நாட்டின் முக்கிய தொழிலாக உள்ளது.
இத்தொழில் கால்நடை வளர்ப்பு மூலப்பொருளாகக் கொண்டு செயல்படுகிறது. உரித்தெடுக்கப்பட்ட விலங்குகளின் தோலினை பதப்படுத்தி, பின்பு அதிலிருந்து பலவிதமான பொருட்கள் செய்யப்படுகின்றன.
பெரிய விலங்குகள் மற்றும் மாடுகளின் தோலினை ‘Hide’ ‘என்று ஆங்கிலத்தில் கூறுவர். சிறிய விலங்குகளின் தோலினை skin’’ என்று கூறுவர்.
விலங்குகளின் தோலை 'டானின்' என்ற அமிலப் பொருள் கொண்டு பதப்படுத்துதலை 'டானிங்' என்று குறிப்பிடுவர். தோலைப் பதனிடுவதால், தோல் இலகுதன்மையுடனும், நீரில் கரையாத நிலையில், பூஞ்சான் தாக்குதலுக்கு ஆட்படாமல் தரம் நிலைத்து நிற்கும்.
தோலைப் பதனிட தாவரப் பொருளான மரப்பட்டைகளை பயன்படுத்தும்போது தோல் அதிக இலகு தன்மையுடன் இருக்கும். இம்முறைக்கு தாவர பதனிடுதல் முறை என்று பெயர். இவை மர இருக்கையில் அமர்வு இடத்தில் பொறுத்தப்படுகிறது.
அமில பொருட்கள், குரோமியம் மற்றும் மிருக கொழுப்பு கொண்ட பதனிடும் முறையை ஈரநிலை முறை அல்லது இரசாயன பதனிடுதல் முறை என்பர். இம்முறையில் பதனிடப்படும் தோல் அதிக இழுவைத்தன்மை உடையதால் இவை கைப்பைகள் மற்றும் தோல் ஆடைகள் செய்யப் பயன்படுத்தப்படுகிறது.
சென்னை, வேலூர், காஞ்சிபுரம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் பரவிக் காணப்படுகிறது. சென்னை, வேலூர், ஆம்பூர், இராணிப்பேட்டை, வாணியம்பாடி, திண்டுக்கல் மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் குறிப்பிடத்தக்க அளவில் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.
சிமென்ட் தொழிற்சாலை
தேசிய அளவில் சிமென்ட் உற்பத்தியில் நான்காம் இடத்தினைப் பெற்று, தமிழ்நாடு சுமார் 10 விழுக்காடு சிமென்ட் உற்பத்தி செய்கிறது.
தமிழ்நாடு சிமென்ட் கூட்டுறவு நிறுவனம் (Tancem)  தமிழக அரசால் நிர்வகிக்கப்படும் பொதுத்துறையைச் சாந்ததாகும்.
இங்கு, இந்திய தர நிர்ணயத்தைக் காட்டிலும் மிக உயர்ந்த தரத்தில் இரு வகையான சிமென்ட் தயாரிக்கப்படுகிறது. அவை சாதாரண போர்ட்லேண்ட் சிமென்ட் மற்றும் சூப்பர் சிமென்ட்டாகும்.
சுண்ணாம்புக்கல் டாலமைட், ஜிப்சம், களிமண், நிலக்கரி ஆகியவை இத்தொழிற்சாலை யின்  மூலப்பொருட்களாகும். அத்தனைப் பொருட்களும் தமிழ் நாட்டில் அகழ்ந்து எடுக்கப்படுகிறது.
சங்ககிரி, மதுக்கரை, புலியூர், குன்னம், செந்துறை, அரியலூர், டால்மியாபுரம், மானாமதுரை, துலுக்கம்பட்டி, ஆலங்குளம், சங்கர் நகர், தாழையூத்து போன்றவை தமிழ் நாட்டின் சிமென்ட் உற்பத்தி செய்யும் மையங்களாகும்.
மோட்டார் வாகன தொழிற்சாலைகள்
தமிழ்நாட்டின் பொது வளர்ச்சி குறியீட்டில் (GDP)  8 சதவீதம் மோட்டார் வாகனத் தொழிலின் மூலம் கிடைக்கிறது.
இந்தியாவின் 21 சதவீத பயணிகள் கார் மற்றும் 33 சதவீத வணிக வாகனங்கள் தமிழ்நாட்டில் தயாரிக்கப்படுகிறது.
இந்தியாவின் 30 சதவீத தொழில்களுக்கும் 35 சதவீத ஆட்டோ உபரி பாகங்கள் உற்பத்திக்கும் சென்னையில் தொழிற்கூடங்கள் அமைந்துள்ளன. இதன் காரணமாக சென்னை 'தெற்காசியாவின் டெட்ராய்ட்' என்று அழைக்கப்படுகிறது.
இராசயன தொழிற்சாலைகள்
இரசாயனம், மருந்து, உரம், பெட்ரோலியம் பொருட்கள், சோப்பு, அழகுப்பொருட்கள், செயற்கை ரப்பர், பிளாஸ்டிக் உற்பத்தி ஆகியவை இரசாயன தொழில்களில் உள்ளடங்கியதாகும்.
சென்னை அருகில் மணலி, கடலூர், பனங்குடி (நாகப்பட்டினம்) மற்றும் தூத்துக்குடியில் ரசாயன தொழிற்சாலை பரவலாக அமைந்துள்ளது.
ஸ்பிக் (SPIC)  தமிழ்நாட்டில் மட்டுமல்லாது இந்தியாவிலேயே மிக அதிக அளவில் உரம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஆகும்.
இந்நிறுவனம் பன்னிரெண்டு மாநிலங்களுக்கு, தன் 4,000 மையங்கள் மூலம் உரம் விநியோகம் செய்கின்றது. ஒரு  வருடத்திற்கு இரண்டு மில்லியன் டன் உரத்தை இந்நிறுவனம் உற்பத்தி செய்கிறது.
பிசர் பார்மாகியூடிக்கல்ஸ் கம்பெனியும், டவ் கெமிக்கல் கம்பெனியும் சென்னையில் ஆராய்ச்சி மையங்களை நிறுவியுள்ளது.
மின்சார மற்றும் மின்னணு உபகரணத் தொழிற்சாலைகள்
மின்னணு தொழில் தமிழ்நாட்டின் வளர்ந்து வரும் தொழிலாகும்.
உலகளாவிய தொலை தொடர்பு சாதன நிறுவனங்களான நோக்கியா, பிளக்ஸ்ட்ரானிக்ஸ், மோட்டோரலா, சோனி எரிக்ஸன், பாக்ஸ்கான், சாம்சங், சிஸ்கோ, மோஸர் பேயர் மற்றும் டெல் ஆகிய நிறுவனங்கள் சென்னையை தனது உற்பத்தித் தலமாக கொண்டுள்ளன.
மின்சுற்று பலகை தயாரிப்பும், கைப்பேசி தயாரிப்பும் இந்நிறுவனங்களின் உற்பத்தியில் முக்கிய அங்கம் வகிக்கின்றது.
பாரத உயர்மின் உற்பத்தி கழகம் (BHEL) தனது ஆறு பெரிய உற்பத்தி தலங்களுள் ஒன்றை திருச்சியில் நிறுவியுள்ளது. நீர்மின்சக்தி நிலையங்களுக்கு தேவையான கொதிகலன்கள், ஜெனரேட்டர்கள், விசைசுற்று கலன்கள் (Turbines) ஆகியவற்றை இந்நிறுவனம் உற்பத்தி செய்கிறது.இந்தியாவின் இரண்டாவது மென்பொருள் ஏற்றுமதியாளராக தமிழ் நாடு அமைந்துள்ளது.
 மென்பொருள்  தொழிலகம்
கர்நாடகத்தை தொடர்ந்து தமிழ் நாட்டில்தான் அதிக அளவிலான வெளி வர்த்தக செயல்பாடுகளை (BPO)கையாளுதல் நடைபெறுகிறது.
சென்னையிலுள்ள முக்கிய தேசிய மற்றும் உலகளாவிய நிறுவனங்கள் பின்வருமாறு:
வெரிசோன், ஹூவிலட் பாக்கர்ட், ஐ.பி.எம்., ராம்கோ சிஸ்டம், கம்ப்யூட்டர் சயின்ஸ் கார்பரேஷன், காக்னிசன்ட், டாடா கன்ஸல்டன்ஸி, இன்போசிஸ், விப்ரோ, ஹெச்.சி.எல், டெக்மஹேந்திரா, போலாரீஸ், அரிசெண்ட் மோப்சிஸ் அக்மி டெக்னாலஜி லிட், கோவன்சிஸ், ஃபோர்டு இன்பர்மேஷன் டெக்னாலஜி, ஜஎன்ஸா, ஐசாப்ட், ஐநௌட்ரிஸ், எலெக்ட்ரானிக்ஸ் டேட்டா சிஸ்டம் மற்றும் பாலி.
சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்ட அஸன்டாஸ் நிறுவனமும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகமும் இணைந்து இந்தியாவின் மிகப் பெரிய தகவல் தொழில் நுட்ப வளாகத்தை சென்னை தரமணியில் அமைத்துள்ளன.
தமிழ்நாட்டின் குறிப்பிடத்தக்க பிற தொழிற்சாலைகள்
பெரம்பூர், இணைப்பு பெட்டி தொழிற்சாலை (ICF) ஆசியாவின் மிகப்பெரிய தொழிற்சாலைகளுள் ஒன்றாகும்.
 இராணுவ வாகனங்கள் மற்றும் இராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் நிறுவனம் சென்னை யிலிருந்து 25 கி.மீ. வடக்கே ஆவடியில் அமைந்துள்ளது. இங்குஇராணுவ பீரங்கிகள் உற்பத்தி செய்யப் படுகிறது.
அடுத்தபடியாக சேலம் எஃகு நிறுவனம், இந்திய அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படுகிறது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி மிகப்பெரிய தொழில் பிரதேசமாக விளங்குகிறது. பட்டாசு மற்றும் வெடி வகைகள், தீப்பெட்டி தயாரிப்பில் இந்நகரம் உலகப்புகழ் பெற்றதாகும்.
ஆஃப்செட் எனப்படும் வண்ண விளம்பர அச்சு தயாரிப்பிலும் இந்நகரம் முதன்மையாக விளங்குகிறது. இதன் காரணமாகவே இந்த நகரத்தை 'குட்டி ஜப்பான்' (லிவீttறீமீ யிணீஜீணீஸீ) என அழைக்கின்றனர்.
நெய்வேலி, அனல்மின் உற்பத்தி மட்டும் அல்லாது, உரம் மற்றும் பீங்கான் பொருட்கள் உற்பத்தியையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
வெண்கலச் சிலை மற்றும் இசைக்கருவிகள் தயாரிப்பில் தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் சிறந்துவிளங்குகிறது.
சிறந்த வரையறை செய்யப்பட்ட உயிர் தொழில்நுட்ப கோட்பாட்டை நிலைநிறுத்த அனைத்த மகளிர் உயிர் தொழில்நுட்ப பூங்காவை அமைத்த முதல் மாநிலம் தமிழ்நாடேயாகும்.
வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை தயாரிப்பிலும் சென்னை, மும்பைக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது.
சுற்றுலாத்துறை
16 சதவீத வளர்ச்சி விகிதத்தைக் கொண்ட தமிழக சுற்றுலாத்துறை நாட்டின் இரண்டாவது இடத்தை வகிக்கின்றது.
சுற்றுலா தொழிலின் ஓர் அங்கமான மருத்துவ சுற்றுலா தமிழ்¢நாட்டின் முக்கிய மருத்துவ சேவை மையங்களால் பெரிதும் வளர்ச்சியுற்றுள்ளது.
தமிழகத்தின் சிறப்பு பொருளாதார மண்டலங்கள்
1) ஸ்ரீபெரும்புதூர் தொழிற்பூங்கா
2) இருங்காட்டுக்கோட்டை காலணி பூங்கா
3) ஒரகடம் தொழில் வளர்ச்சி மையம் (காஞ்சிபுரம்)
4) இராணிப்பேட்டை தோல்துறை சிறப்பு மண்டலம்
5) பெருந்துறை பொறியியல் பொருட்கள் உற்பத்தி சிறப்பு மண்டலம்
6) செய்யார் மோட்டார் வாகனம்/ தானியங்கி உபகரணங்கள் உற்பத்தி சிறப்பு மண்டலம்
7) கங்கைகொண்டான் போக்குவரத்து பொறியியல் உபகரணங்கள் சிறப்பு மண்டலம்
பொதுத்துறை நிறுவனமான மாநில தொழில் மேம்பாட்டுக் கழகம் (SIPCOT) 1972  இல் தொடங்கப்பட்டது. இது பல சிறிய, நடுத்தர மற்றும் பெரிய தொழிற்சாலைகளின் வளர்ச்சிக்கு ஊக்குவிக்கும் காரணியாக அமைந்துள்ளது.

No comments:

Post a Comment