Thursday 22 September 2016

இந்திய அரசியலமைப்பு









அகில இந்திய 16வது மக்களவை தேர்தல் ஏப்ரல் 7ம் திகதி  முதல் மே 12ம் திகதி வரையில் 9 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பெற்றுள்ள நிலையில் அரசியல் சம்பந்தமான விபரங்களை அறிந்திருப்பது முக்கியம் என்பதனால்  நாம் அறிந்தவரையில் விபரங்களை அறியத்தருகின்றோம்.

இந்திய மக்கள் தொகை: 120 கோடி
வாக்காளர்கள் தொகை: 81.4 கோடி
தேர்தல் தொகுதிகள்: 545
அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை: 370
புதிய வாக்காளர்கள்: 10 கோடி
தேர்தல் முடிவுகள்: 16.05.2014 வெளியாகும் என அறிவிக்கப்பெற்றுள்ளது

இந்தியக் குடியரசு (India) என்றழைக்கப்பெறும் பாரத தேசம்; சுமார் 70 வருடங்களிற்கு முன்னர் இந்தியப் துணை கண்டத்தை ஆட்சி செய்த ஆங்கிலேயர் காலத்தில் பாகிஸ்தான், பங்களாதேஸ் ஆகிய நாடுகள் சேர்ந்த ஒரு பெருநிலப்பரப்பாக இருந்துள்ளது.



இந்திய பெருநிலப்பரப்பானது பதினேழாம் நூற்றாண்டில் ஐரோப்பியர்களால் கைப்பற்றப்பட்டு, ஆங்கிலேயர் காலத்தில் 1947, ஓகத்து 15 அன்று (சுதந்திரம்) விடுதலை பெற்றது. அதனைத் தொடர்ந்து 1950, சனவரி 26 அன்று குடியசு நாடாக பிரகடனப் படுத்தப் பெற்று உலகின் மிகப்பெரிய குடியரசு நாடாகத் திகழ்கிறது



ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி தலைமையேற்று நடத்திய வன்முறையற்ற அகிம்சைப் போராட்டம் 1947-இல் கிடைத்த இந்திய விடுதலைக்கு வித்திட்டது.



அப்போது, இந்திய துணைக் கண்டமானது மதச்சார்பற்ற இந்தியாவாகவும் இஸ்லாமிய நாடான பாகிஸ்தானாகவும் பிரிந்தது. தொடர்ச்சியற்ற நிலப் பகுதிகளாக இருந்த மேற்கு மற்றும் கிழக்கு பாகிஸ்தானிடையே 1971-இல் மூண்ட உள்நாட்டுப் போரின்போது இந்தியத் தலையீட்டின் பேரில் கிழக்கு பாகிஸ்தான் வங்காள தேசம் என்ற தன்னாட்சி பெற்ற நாடாகப் பிரிந்தது.



இந்தியாவின் தெற்கே இந்தியப் பெருங்கடலும், (இந்துசமுத்திரம்) மேற்கே அரபிக் கடலும், கிழக்கே வங்காள விரிகுடாவும்  எல்லைகளாக அமைந்துள்ளது. அத்துடன் இதன் எல்லை நாடுகளாக மேற்கே பாக்கித்தான், வடக்கே பூட்டான், மக்கள் சீனக் குடியரசு, நேபாளம், கிழக்கே வங்காளதேசம், மியான்மர் ஆகியனவும் அமைந்துள்ளன. இலங்கை, மாலத்தீவு இலட்சத்தீவு ஆகிய நாடுகள் இந்தியப் பெருநிலத்திற்கு அண்மையில் இந்து சமுத்திரத்தில் அமைந்துள்ள தீவுகளாகும்.



உலகநாடுகளின் பரப்பளவில் ஏழாவது பெரிய நாடாகவும், 7,517 கிமீ (4,700 மைல்) நீளம் வரை கடலை எல்லையாக கொண்ட நாடாகவும் நூற்றி இருபது கோடி மக்கள் தொகையையும் கொண்ட நாடாகவும் இந்தியா விளங்குகின்றது



மூன்றாம் நூற்றாண்டில் தொடங்கிய குப்தர்களின் ஆட்சிக்காலமானது பண்டைய இந்தியாவின் பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. சேர, சோழ, பாண்டிய, பல்லவ, சாளுக்கிய, கடம்பப் பேரரசுகள் தென்னிந்தியாவை பல்வேறு காலகட்டங்களில் ஆண்டன.



அராபியர் வருகை எட்டாம் நூற்றாண்டில் தொடங்கியது. துருக்கியர் 12ஆம் நூற்றாண்டில் வரத்தொடங்கினர். இவர்களை தொடர்ந்து ஐரோப்பிய வர்த்தகர்கள் 15ஆம் நூற்றாண்டின் இறுதியில் வரத்தொடங்கினர்.



முகலாயப் பேரரசை அடிபணிய வைத்ததன் மூலம், 19ஆம் நூற்றாண்டில், கிட்டத்தட்ட முழு இந்தியாவினதும் அரசியல் கட்டுப்பாடு ஆங்கிலேயப் பேரரசிடம் போய்ச் சேர்ந்தது.



இந்திய அரசியல் சாசனம்
இந்தியா 28 மாநிலங்களையும் 7 ஒன்றியங்களையும் கொண்ட ஒரு கூட்டமைப்பு ஆகும். இக்கூட்டமைப்பு அதிகார பூர்வமாக இந்திய சுதந்திர சமூகவுடமை சமய சார்பற்ற மக்களாட்சிக் குடியரசு என அறிவிக்கப்பட்டுள்ளது.




இந்திய அரச நிர்வாகம் சட்டப் பேரவை, செயலாற்றுப் பேரவை, சுதந்திர நீதியமைப்பு ஆகிய மூன்று கூறுகளால் பேணப்படுகின்றது. இவை கூட்டாகவும், அதேவேளை ஒவ்வொரு கூறும் மற்றதன் நடவடிக்கைகளை, தவறான அதிகாரப் பயன்பாடுகளை, ஊழலை கண்காணிக்ககூடிய வகையில் ஆங்கிலேய நிர்வாக அமைப்புகளைப் பின்பற்றி கட்டமைக்கப்பட்டுள்ளன.



இந்திய நாட்டின் தலைவராக குடியரசுத் தலைவர் இருக்கின்றார் எனினும் இவரது கடமைகள் பெரும்பாலும் மரபுவழிச்சடங்குகள் அடிப்படையிலேயே அமைகின்றன. குடியரசுத் தலைவரும் குடியரசுத் துணைத்தலைவரும் பாராளுமன்ற மற்றும் மாநில, பிரதேச சட்டமன்றங்களின் (ஈரவை அமைப்பாயின் கீழவை) உறுப்பினர்களால் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப் படுகின்றனர்.



செயல் அதிகாரம் பிரதமரிடமும் அவரின் தலைமையின் கீழ் இயங்கும் அமைச்சரவையிடமும் இருக்கின்றது.



பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ள கட்சி அல்லது கூட்டணியின் தலைவரை குடியரசுத் தலைவர் பிரதமாராக நியமிப்பார். பிரதமரின் ஆலோசனைக்கேற்ப பிற அமைச்சர்களை குடியரசுத் தலைவர் அங்கீகரிப்பார்.



இந்திய பாராளுமன்றம் இரு சட்ட அவைகளை கொண்டு உள்ளது. அவை ”மாநிலங்களவை” மற்றும் ”மக்களவை” ஆகும். இவை இரண்டும் இந்திய கட்டமைப்பு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டவை. அமைச்சரவை பாராளுமன்றத்திற்கு, அதிலும் குறிப்பாக மக்களவைக்கு, கடமையுற்றது.



இந்திய நாடாளுமன்ற மக்களவை
மக்களவை அல்லது லோக் சபா இந்திய பாராளுமன்றத்தின் கீழ் அவை ஆகும். இந்த அவையின் உறுப்பினர்கள் மக்களால் நேரடித் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.



இந்த அவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 552 ஒன்றியப் பிரதேச தொகுதிகளையும், நியமன உறுப்பினரகளான ஆங்கிலோ இந்தியர் இருவரையும் உள்ளடக்கிய எண்ணிக்கையாகும். இது இந்திய அரசியலமைப்பு சட்ட விதி 81 இல் கூறப்படுள்ளதின்படி வரையறுக்கப்பட்டதாகும்.



ஆங்கிலோ இந்தியரை பொறுத்தவரை இதுவே இந்த அவையின் அதிகபட்ச அமர்வு எண்ணிக்கையாகும். இருப்பினும் குடியரசுத் தலைவர் இந்த எண்ணிக்கை குறித்து மறுதலிக்கும் பட்சத்தில் இந்த எண்ணிக்கையை கூட்டவோ குறைக்கவோ அரசியல் சட்டத்தில் வழி வகை செய்யப்பட்டுள்ளது.



2014 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலின் மூலம் நாட்டின் 16 வது மக்களவை பொதுமக்களால் தெரிவு செய்யப்பெறுவார்கள் இவர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள். அதன்பின்னர் இதன் ஆயுள் மற்றும் பொறுப்புகள் தானாகவே செயலிழந்துவிடும்.



இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை அல்லது ”ராஜ்ய சபா” இந்திய பாராளுமன்றத்தின் 250 உறுப்பினர்கள் உள்ளிட மேலவை ஆகும்.



இவர்களில் 12 பேர் இந்திய குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறர்கள். இவர்கள் கலை, இலக்கியம், அறிவியல் போன்ற அவரவர்களுக்குரிய துறைகளில் சிறந்து விளங்குபவர்களாக இருப்பர். இந்த 12 பேரைத் தவிர்த்த மற்றவர் மாநில சட்டசபை உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்படுவர். இதன் கட்டமைவு இந்திய அரசியலமைப்பு சட்ட விதி 81 இல் கூறப்பட்டுள்ளதின்படி அமைக்கப்பட்டுள்ளது.



இவர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள். மேல்சபையின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் பதவிக்காலம் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூர்த்தியாகும். குடியரசுத் துணைத்தலைவர் இந்த அவையின் தலைவராக இருப்பார்.



மாநிலங்களவை கூட்டங்கள் மக்களவை கூட்டங்களைப் போல் அல்லாமல் தொடர்ச்சியாக நடைபெறுவதாகும் சபை கலைப்பிற்கு இது பொருந்தாது. இதன் அதிகாரங்கள் மக்களவைக்கு ஈடானதாகவும் மக்களவைக்கென வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை குறைக்காதனவாகவும் கருதப்படுகின்றது.



இரு அவைகளினாலும் எதிரொலிக்கும் சர்ச்சைகளை இரு அவைகளின் கூட்டு கூட்ட அமருவின் மூலம் தீர்வு காணப்படுகின்றது. இவ்வாறு நடைபெறும் கூட்டு கூட்டங்களில் மக்களவை மாநிலங்களைவையை விட இரு மடங்கு உறுப்பினர்களை கொண்டதாக இருப்பினும், மாநிலங்களவை உண்மையான நடப்பிலுள்ள (defacto) தடை (வீட்டோ) அதிகாரங்களை கொண்டதாக கூட்டு கூட்டங்களில் கருதப்படுகின்றது.



மாநிலங்களவையின் தற்பொழுதய அலுவல் நிலை (ex-officio) கூட்டத் தலைவராக இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் மேதகு அமீத் அன்சாரி பொறுப்பேற்றுள்ளார். துணைக் கூட்டத் தலைவர் அவ்வப்பொழுது நடைபெறும் கூட்டங்களின் தன்மைக்கேற்ப தற்காலிமாக கூட்டத்லைவர் இல்லாத பொழுது பொறுப்பேற்கின்றனர். மாநிலங்களவையின் முதல் கூட்டம் மே 13, 1952 அன்று துவக்கப்பட்டது.



மாநிலங்களவையின் 233 உறுப்பினர்கள் மாநில- பிரதேச சட்டப்பேரவைகளால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மேலும் 12 உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றார்கள். இவர்கள் ஆறு வருடங்களுக்கு பணிபுரிவார்கள். மூன்றில் ஒரு பகுதி மாநிலங்களவை உறுப்பினர்கள் இரு வருடங்களுக்கு ஒரு முறை தேர்தலுக்கு செல்ல வேண்டியிருக்கும்.



இந்திய மக்களவைக்கு அதிகபட்சமாக 552 உறுப்பினர்கள் வரை இருக்கலாம் என்று இந்திய அரசியல் சாசனம் வழிமுறை காட்டுகிறது. இதில் 530 உறுப்பினர்கள் மாநிலங்களில் இருந்தும் 20 உறுப்பினர்கள் மத்திய ஆட்சிப்பகுதிகளில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்படலாம்.

குடியரசுத்தலைவர் விரும்பினால் இரண்டு ஆங்கிலோ-இந்தியர்களையும் நியமிக்கலாம். இவ்வாறாக இந்தியா மக்களவைக்கு அதிகபட்சமாக 552 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கப்படலாம். ஆனால் தற்போது மதிய ஆளுமைப் பகுதிகளில் இருந்து 13 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதனால் மக்களவையின் தற்போதைய உறுப்பினர்கள் 545 ஆகும். மக்களவைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும்.



இந்திய சட்ட கட்டமைப்பின் மிக உயர் அதிகாரம் உச்ச நீதிமன்றத்திடம் உள்ளது. உச்ச நீதிமன்றம் அரசியலமைப்பின் பாதுகாவலனாகச் செயல் படுகிறது. உச்ச நீதிமன்றம் மாநிலங்களுக்கும் மத்திய அரசிற்கும் இடையான பிரச்சினைகள் தொடர்பாக ஆள் வரை உண்டு. மேலும் மேன் முறையீடு ஆள் வரையும் உயர் நீதிமன்றங்கள் மீது உண்டு. பெரிய மாநிலங்களுக்கு ஒன்றும் சிறிய மாநிலங்களுக்கு பொதுவாகவும் 18 உயர் நீதி மன்றங்கள் இயங்குகின்றன. அதற்கு அடுத்த நிலைகளில் மாவட்ட நீதிமன்றங்கள் உள்ளன. இவை அனைத்திலும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது.



இந்தியாவின் மாநிலங்களும் பிரதேசங்களும்
இந்திய நாடு ஒரு கூட்டாட்சிக் குடியரசு. இதில் 28 மாநிலங்களும் ஆறு ஒன்றியப் பகுதிகளும் ஒரு தேசியத் தலைநகரப் பகுதியும் அடங்கியுள்ளன. எல்லா மாநிலங்களிலும், ஒன்றியப் பகுதிகளான பாண்டிச்சேரி, டெல்லி தலைநகரப் பகுதி ஆகியவற்றிலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள் உள்ளன.



ஏனைய ஒன்றியப் பகுதிகள் நடுவண் அரசினால் நியமிக்கப்படும் ஆளுனர்களைக் கொண்ட, குடியரசுத்தலைவரின் நேரடி ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளாகும்.



1956 ஆம் ஆண்டில், மாநிலங்கள் மீளமைப்புச் சட்டத்தின் கீழ் மொழி வழி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.



அதன் பின்னர், வட இந்தியப் பகுதிகளில் சில புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டது தவிர, அதிகம் மாற்றம் எதுவும் இல்லாமலேயே இம் முறைமை இயங்கிவருகிறது.



மாநிலங்களும், ஒன்றியப் பகுதிகளும், சிறிய நிர்வாக அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை மாவட்டங்கள் எனப்படுகின்றன. இந்தியாவில் ஏறத்தாழ 600 மாவட்டங்கள் உள்ளன.



1.    ஆந்திரப் பிரதேசம்
2.    அருணாச்சல் பிரதேசம்
3.    அஸ்ஸாம்
4.    பிஹார்
5.    சத்தீஸ்கர்
6.    கோவா
7.    குஜராத்
8.    ஹரியானா
9.    இமாசலப் பிரதேசம்
10.    ஜம்மு காஷ்மீர்
11.    ஜார்க்கண்ட்
12.    கர்நாடகம்
13.    கேரளம்
14.    மத்தியப் பிரதேசம்
15.    மகாராஷ்டிரம்
16.    மணிப்பூர்
17.    மேகாலயா
18.    மிசோரம்
19.    நாகாலாந்து
20.    ஒரிஸா
21.    பஞ்சாப்
22.    ராஜஸ்தான்
23.    சிக்கிம்
24.    தமிழ் நாடு
25.    திரிபுரா
26.    உத்தரகண்ட்
27.    உத்தரப் பிரதேசம்
28.    மேற்கு வங்காளம்
29.    தெலுங்கானா((* மாநில பிரிவு/உருவாக்கம் முழுமை அடையவில்லை))

யூனியன் பிரதேசங்கள் என்றழைக்கப்படும் ஒன்றிய பகுதிகள்:
A.    அந்தமான் நிக்கோபார் தீவுகள்
B.    சண்டிகர்
C.    தாத்ரா மற்றும் நகர் ஹவேலி
D.    தாமன், தியு
E.    லட்சத்தீவுகள்
F.    புதுச்சேரி
G.    தில்லி

இந்த ஏழு ஒன்றியப் பகுதிகளில் புதுச்சேரியும், தில்லியும் மட்டும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் சிறப்பு அனுமதியின் பேரில் ஏனைய மாநிலங்களைப் போல தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபைகள் அமைத்துக் கொள்ளும் உரிமை பெற்றுள்ளன.



இந்தியாவில் மாவட்டம் (district, அல்லது Zilā, ஜில்லா) என்பது இந்திய மாநிலத்தின் பகுதியை நிர்வகிக்கும் மண்டலமாகும். இந்தியா இருபத்தியெட்டு மாநிலங்கள் மற்றும் ஏழு ஆட்சிப்பகுதிகள் (ஆ.ப) ஆகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலம் அல்லது ஆட்சிப் பகுதியும் எளிதான நிர்வாகத்திற்காக மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.



2008இல் இந்தியாவில் 585 மாவட்டங்கள் இருந்தன. ஒரு மாவட்டத்தின் எல்லைகளை மாற்றவோ, புதிய மாவட்டங்களை உருவாக்கவோ அல்லது இருக்கும் மாவட்டங்களை இணைக்கவோ அந்தந்த மாநில அரசிற்கு அதிகாரம் உள்ளது.முதன்முதலாக இத்தகைய மண்டல நிர்வாகப் பகுதியை மாவட்டம் எனக் குறிப்பிடப்பட்டது பட்டியலிட்ட மாவட்ட சட்டம்,1874யில் ஆகும்.



மாவட்ட ஆட்சியர் (சில மாநிலங்களில் துணை ஆணையர் அல்லது மாவட்ட நீதிபதி என அழைக்கப்படுகின்றனர்) மாவட்டத்தின் பொதுநிர்வாகத்தையும் வருவாய் வசூலையும் நிர்வகிக்கிறார். இவர் இந்திய ஆட்சி பணிசேவை (இ.ஆ.ப) அதிகாரியாவார். இவரே மாவட்டத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு பராமரிப்பிற்கும் பொறுப்பேற்கிறார்.காவல்துறைக் கண்காணிப்பாளர் அல்லது காவல்துறை துணை ஆணையர் (இந்திய காவல் பணிசேவை (இ.கா.ப) அதிகாரி) இப்பணியில் மாவட்ட ஆட்சியருக்கு உதவுகிறார்.



மாவட்டங்கள் மேலும் வருமான மண்டலங்கள்,தாலுகாக்கள் (தெகிசில்கள்),வட்டாரங்கள் (பஞ்சாயத்து யூனியன்),பஞ்சாயத்துக்கள் மற்றும் கிராமங்களாக பிரிவுபடுத்தப்பட்டிருக்கின்றன.



சில மாநிலங்களில், நிலப்பரப்பு கூடுதலாக இருப்பின்,(மாவட்டங்களின் எண்ணிக்கை நிர்வகிக்க இயலாமற்போவதால்) சில மாவட்டங்களை இணைத்து மண்டலங்கள் (டிவிசன்கள்) உருவாக்கப்படுகின்றன.அதன் நிர்வாக அதிகாரி மண்டல நீதிபதி என அழைக்கப்படுகிறார்.தமிழ்நாடு மாநிலத்தில் இம்முறை இல்லை.

அரசியல் கட்சிகளும் தேர்தல்களும்:
இந்தியாவில் பல கட்சி ஆட்சி முறை பின்பற்றப்படுவதால் எண்ணற்ற கட்சிகள் உள்ளன. இவை இந்தியாவின் தேர்தல் ஆணையத்தால், குறிப்பிட்ட சில அடிப்படைகளுக்கு அமைய, தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள் என இரண்டு பிரிவுகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.



இந்தியாவின் விடுதலைக்குப் பிறகு, மத்தியில் பெரும்பாலும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியே ஆண்டு வந்திருக்கிறது. மாநில அளவில் பல்வேறு மாநிலக் கட்சிகள் செல்வாக்கு உள்ளவையாக விளங்குகின்றன. மற்ற பெரிய தேசிய கட்சிகள் பாரதிய ஜனதா கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), ஜனதா தளம் ஆகியவை ஆகும்.



குறுகிய இரண்டு காலப் பகுதிகளைத் தவிர்த்து 1950 முதல் 1990 வரையான காலம் முழுவதும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைக் கட்சியாக விளங்கியது. 1977 க்கு முன் காங்கிரஸ் அரசு காலத்தில் கொண்டுவரப்பட்ட அவசரநிலைச் சட்டத்தின் மீது மக்களுக்கு ஏற்பட்ட திருப்தியின்மையினால் 1977 ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியுற்றது. பல கட்சிகள் சேர்ந்து உருவாக்கிய ஜனதாக் கட்சியும், இடதுசாரிகள் உட்பட்ட பிற கட்சிகள் சிலவும் சேர்ந்து உருவாக்கிய தேசிய முன்னணி என்னும் அமைப்பு காங்கிரசைத் தோற்கடித்து ஆட்சியமைத்தது.



எனினும் இக் கூட்டணியால் நீண்டகாலம் நீடித்து ஆள முடியவில்லை. இரண்டு ஆண்டுக் காலத்திலேயே அரசு கவிழ்ந்தது.



1996 ஆம் ஆண்டுக்கும் 1998 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலம் நடுவண் அரசைப் பொறுத்தவரை ஒரு குழப்பமான காலமாகும். இக்காலத்தில் முதலில் பாரதீய ஜனதாக் கட்சியும், பின்னர் சில மாதங்கள் ஐக்கிய முன்னணி என்னும் பல கட்சிக் கூட்டணியும் ஆட்சி நடத்தின.



தொடர்ந்து 1998 இல் நடை பெற்ற தேர்தலில் பாரதீய ஜனதாக்கட்சி தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியது. இந்த அரசு, நாடாளுமன்றத்தின் முழு ஐந்தாண்டுக் காலமும் பதவியில் இருந்த முதல் காங்கிரஸ் அல்லாத அரசு என்னும் பெயரையும் பெற்றது.



2004 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் எக்கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனினும், நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களைக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி, இடதுசாரிகள், பிற மாநிலக் கட்சிகள் ஆகியவற்றையும் சேர்த்துக்கொண்டு உருவாக்கிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்ற அமைப்பின் சார்பில் ஆட்சியில் அமர்ந்தது. காங்கிரஸ் கட்சியால் அமைக்கப்பட்ட முதலாவது கூட்டணி அரசு இதுவாகும்.



16வது மக்களவை தேர்தல் ஏப்ரல் 7ம் முதல் மே 12ம் தேதி வரையில் 9 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பெற்றுள்ளது.

நாடு முழுவதும் உள்ள 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 543 மக்களவை தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளன. அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் மட்டும் 80 தொகுதிகள் உள்ளன.



நடப்பு மக்களவையின் (15வது மக்களவையின்) பதவி காலம் ஜூன் 1ம் தேதியுடன் முடிகிறது. புதிய மக்களவை மே 31க்குள் அமைக்கப்படும் மக்களவை தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, சிக்கிம் ஆகிய சட்டப் பேரவைகளுக்கும் தேர்தல் நடைபெறும்



2004 ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது மொத்தம் 67.10 கோடி வாக்காளர்கள் இருந்தனர். அதன் பின்னர் 2009 தேர்தலில் 71.40 கோடி வாக்காளர்கள் இருந்தனர். 2014 தேர்தலில் நாடு முழுவதும் 81.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்களில் 10 கோடி பேர் புதிய வாக்காளர்கள்.



2014ல் நடைபெறும் தேர்தலுக்காக நாடு முழுவதும் 9 லட்சத்து 30,000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுவதுடன், மொத்தம் சுமார் 12 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. இதனுடன் பொதுத்துறை நிறுவனங்களிடம் வாங்கப்பட்ட 2.5 லட்சம் புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் தயாராகி வருகின்றன என தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார்.



ஆந்திர பிரதேச சட்டசபையின் பதவி காலம் ஜூன் 2ம் தேதியும், ஒடிசா சட்டசபையின் பதவி காலம் ஜூன் 7ம் தேதியும்,  சிக்கிம் சட்டசபையின் பதவி காலம் மே 21ம் தேதியும் முடிகிறது.



ஆந்திரா, சிக்கிம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் மக்களவை தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் நடப்பதால், அந்த மாநிலங்களில் இரண்டு வாக்குகள் பதிவு செய்ய இரண்டு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்

மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவு தொகை உச்ச வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 2009ல் ரூ.25 லட்சமாக இருந்த தொகை 2011ல் ரூ.40 லட்சம் ஆக உயர்த்தப்பட்டதுடன் இந்த தேர்தலில் ரூ.70 லட்சம் வரையில் செலவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Save



அத்துடன் இந்த தேர்தலில் முதல் முறையாக, ‘யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை’ என்று குறிப்பிடும் Ôநோட்டாÕ என்ற பட்டன் வாக்குப்பதிவு இயந்திரத்தில் இடம்பெற்றுள்ளது. 



நாடு முழுவதும் தேர்தலை அமைதியாகவும் சுமுகமாகவும் நடத்தி முடிக்க மொத்தம் 1.1 கோடி தேர்தல் பணி ஊழியர்கள், அலுவலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். இதில் பாதிப்பேர் பாதுகாப்பு படையினர். மீதி சுமார் 55 லட்சம் சிவில் அலுவலர்கள், ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

இந்திய திருநாட்டின் கடந்தகால  பிரதமர்கள் விபரம்:

எண்     பெயர்                            தொடக்கம்    முடிவு
1.    ஸ்ரீ ஜவகர்லால் நேரு    15-08-1947     27-05-1964
2.    ஸ்ரீ குல்ஜரிலால் நந்தா    27-05-1964     09-06-1964
3.    ஸ்ரீ லால் பகதூர் சாஸ்திரி    09-06-1964    11-01-1966
4.    ஸ்ரீ குல்ஜரிலால் நந்தா    11-01-1966    24-01-1966
5.    இந்திரா காந்தி    24-01-1966    24-05-1977
6.    ஸ்ரீ மொரார்ஜி தேசாய்    24-03-1977    28-07-1979
7.    ஸ்ரீ சரண் சிங்    28-07-1979    14-01-1980
8.    ஸ்ரீ இந்திரா காந்தி    14-01-1980    31-10-1984
9.    ஸ்ரீ ராஜீவ் காந்தி    31-10-1984    02-12-1989
10.    ஸ்ரீ வி. பி. சிங்    02-12-1989    10-11-1990
11.    ஸ்ரீ சந்திரசேகர்    10-11-1990    21-06-1991
12.    ஸ்ரீ பி. வி. நரசிம்ம ராவ்    21-06-1991    16-05-1996
13.    ஸ்ரீ அடல் பிகாரி வாஜ்பாய்    16-05-1996    01-06-1996
14.    ஸ்ரீ தேவ கௌடா    01-06-1996    21-05-1997
15.    ஸ்ரீ ஐ. கே. குஜரால்    21-05-1997    19-03-1998
16.    ஸ்ரீ அடல் பிகாரி வாஜ்பாய்    19-03-1998    22-05-2004
17.    ஸ்ரீ மன்மோகன் சிங்    22-05-2004    Till Date

இந்திய குடியரசுத் தலைவர்
1. இந்திய அரசியலமைப்பின்படி அரசின் தலைவர் - குடியரசுத் தலவைர்
2. இந்தியாவின் நிர்வாகத் தலைவர் - குடியரசுத் தலைவர்
3. இந்தியைவின் முப்படைத் தளபதி - குடியரசுத் தலைவர்
4. இந்திய அரசியலமைப்பின் அதிகார வரிசைப்பட்டியலில் முதலிடம் பெறுபவர் - குடியரசுத் தலைவர்
5. குடியரசுத் தலைவருக்கான தேர்தல் முறை - ஒற்றை மாற்று விகிதாச்சார பிரதிநிதித்துவ வாக்கெடுப்பு முறை
6. குடியரசு தலைவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பவர் - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
7. குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் - 5 ஆண்டுகள்
8. குடியரசுத் தலைவர் தனது பதவியை இராஜிநாமா செய்வதாக இருப்பின் இராஜிநாமா கடிதத்தை யாரிடம் அளிக்க வேண்டும் - குடியரசுத் துணைத் தலைவரிடம்
9. குடியரசுத் துணை தலைவர் தனது பதவியை இராஜிநாமா செய்வதாக இருப்பின் இராஜிநாமா கடிதத்தை யாரிடம் அளிக்க வேண்டும் - குடியரசுத் தலைவரிடம்
10. குடியரசுத் தலைவர் எந்த சபைக்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்குரிய தகுதிகள் பெற்றிருக்க வேண்டும் - மக்களவை(லோக்சபை)
11. துணை குடியரசுத் தலைவருக்கான பணிகள் குறித்த கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - அமெரிக்கா
12. குடியரசுத் தலைவர் சம்பளம் குறித்த விவரம் குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணை - இரண்டாவது அட்டவணை
13. போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே குடியரசுத் தலைவர் - டாக்டர் சஞ்சீவி ரெட்டி
14. இருமுறை தொடர்ந்து குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் - டாக்டர் இராஜேந்திர பிரசாத்
15. தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த முதல் குடியரசுத் தலைவர் - கே.ஆர்.நாராயணன்
16. குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான குறைந்த பட்ச வயது - 35
17. குற்ற விசாரணை தீர்மானம் நிறைவேற்றப்பட தேவையான ஆதரவு - மூன்றில் இரு பங்கு
18. குடியரசுத் தலைவர் மறு தேர்வுக்கு தகுதியுடையவரா? - ஆம்
19. குடியரசுத் தலைவர் மீதான குற்ற விசாரணை எந்த சபையில் புகுத்தப்படலாம் - மக்களவை அல்லது மாநிலங்களவை
20. குடியரசு தலைவர் மீதான குற்ற விசாரணை தீர்மானம் கொண்டு வர சபையின் எத்தனை பங்கு உறுப்பினர்கள் ஆதரவு தேவை? - நான்கில் ஒரு பங்கு
21. புதிய குடியரசுத் தலைவருக்கான தேர்தல் எத்தனை மாதங்களுக்குள் நடத்தப்பெற வேண்டும் - 6 மாதங்களுக்குள்
22. இதுவரை குற்ற விசாரணை முறை மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்ட குடியரசுத் தலைவர் - யாரும் இல்லை
23. குடியரசுத் தலைவர் மீது குற்ற விசாரணை தீர்மானம் நிறைவேற்றப் பட தேவையான ஆதரவு - மூன்றில் இரு பங்கு
24. குடியரசுத் தலைவர் திடீரென்று இறக்க நேரிட்டால் அப்பதவியைக் கவனித்துக் கொள்பவர் - துணை குடியரசுத் தலைவர்
25. இந்தியாவின் பிரதிநிதி - குடியரசுத் தலைவர்
26. குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் - ஐந்து ஆண்டுகள்
27. துணை குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் - ஐந்து ஆண்டுகள்
28. மாநிலங்களைவியின் தலைவராகப் பணியாற்றுபவர் - துணை குடியரசுத் தலைவர்
29. அரசியலமைப்பின் அதிகார வரிசைப் பட்டியலில் இரண்டாமிடம் வகிப்பவர் - துணை குடியரசுத் தலைவர்
30. குடியரசுத் தலைவர் செயல்பட இயலாத தருணங்களில் குடியரசுத் தலைவராக செயல்படுபவர் - துணை குடியரசுத் தலைவர்
31. குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பது - மக்களவை, மாநிலங்களவை மற்றும் மாநில சட்டப்பேரவை உறுப்பினர்கள்.
32. துணை குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பது - மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள்
33. மத்திய அமைச்சரவையின் ஆலோசனையின்படி செயல்படுபவர் - குடியரசுத் தலைவர்
34. பிரதமரின் ஆலோசனையின்படி மத்திய அமைச்சர்களை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்
35. குடியரசுத் தலைவரால் பிரதமராக நியமிக்கப்பட வேண்டியவர் - மக்களவை உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு பெற்றவர்
36. அமைச்சரவை என்பது குடியரசுத் தலைவருக்கு கூட்டுப்பொறுப்பு வாய்ந்ததாக உள்ளது.
37. குடியரசுத் தலைவர் திடீரென்று பதவி இழக்க நேரிட்டால் அப்பதவியைக் கவனித்துக் கொள்பவர் - துணை குடியரசுத் தலைவர்
38. குடியரசுத் தலைவரும், துணை குடியரசுத் தலைவரும் இல்லாத நேரத்தில் குடியரசுத் தலைவர் பதவியைக் கவனித்துக் கொள்ளும் உரிமை பெற்றவர் - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
39. இந்திய பிரதமரை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்
40. மத்திய அமைச்சரவை உறுப்பினர்களை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்
41. உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்
42. மாநில ஆளுநர்களை நியமிக்கும் அதிகாரம் பெற்றவர் - குடியரசுத் தலைவர்
43. நிதிக்குழுவை நியமிக்கும் அதிகாரம் பெற்றவர் - குடியரசுத் தலைவர்
44. தலைமை தேர்தல் ஆணையரை நியமிக்கும் அதிகாரம் பெற்றவர் - குடியரசுத் தலைவர்
45. மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர்கள் மற்றும் தலைவரை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்
46. குடியரசுத் தலைவர் மக்களவையின் ஒர் உறுப்பினரா? - இல்லை
47. குடியரசுத் தலைவர் மக்களவையின் உள்ளுறுப்பா? ஆம்
48. குடியரசுத் தலைவர் மக்களவைக்கு எத்தனை உறுப்பினர்களை நியமிக்க முடியும்? இரண்டு உறுப்பினர்கள்(ஆங்கிலோ இந்தியர்கள்)
49. குடியரசுத் தலைவர் மாநிலங்களவைக்கு எத்தனை உறுப்பினர்களை நியமிக்க முடியும்? - 12 உறுப்பினர்களை
50. பாராளுமன்றத்தின் முதல் கூட்டத்தில் உரையாற்றுபவர் - குடியரசுத் தலைவர்
51. பாராளுமன்றத்தின் ஆண்டு முதல் கூட்டத்தில் உரையாற்றுபவர் - குடியரசுத் தலைவர்
52. குடியரசுத் தலைவருக்கு அவசர சட்டங்களை இயற்றும் அதிகாரம் வழங்கும் பிரிவு - ஷரச்சு 123
53. குடியரசுத் தலைவர் பிறப்பிக்கும் அவசர காலச் சட்டத்திற்கான கால வரையறை - 6 வாரங்கள்
54. மரண தண்டனையை இரத்தும் செய்யும் அதிகாரம் பெற்றவர் - குடியரசுத் தலைவர்
55. மக்களவைக்கு 2 ஆங்கிலோ இந்தியர்களை நியமிக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் வழங்கும் ஷரத்து - ஷரத்து 331
56. அரசியலமைப்பு திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்படும் முன் யாருடைய முன் அனுமதி தேவை - குடியரசுத் தலைவர்
57. பண மசோதா அறிமுகப்படுத்தப்படும் முன் யாருடைய முன் அனுமதி தேவை - குடியரசுத் தலைவர்
58. ஒரு மசோதா மூன்றாவது நிலையில் செல்லுமிடம் - குடியரசுத் தலைவரிடம்
59. இந்தியாவில் அவசரகால நெருக்கடிநிலையை அறிவிக்கும் அதிகாரம் பெற்றவர் - குடியரசுத் தலைவர்
60. உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்
61. குடியரசுத் தலைவருக்கு ஆலோசனை வழங்குவதற்கு உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கும் ஷரத்து - ஷரத்து 143
62. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்
63. மாநில ஆளுநரை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்
64. இந்திய கணக்கு மற்ரும் தணிக்கை அதிகாரியை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்
65. தேசிய நெருக்கடி நிலையை எந்த ஷரத்தின்படி குடியரசுத் தலைவர் அறிவிக்க இயலும் - ஷரத்து 352
66. குடியரசுத் தலைவர் பொருளாதார நெருக்கடி நிலையை எந்த ஷரத்தின்படி அறிவிக்க இயலும் - ஷரத்து 360
67. ஒரு அமைச்சரை பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம் பெற்றவர் - குடியரசுத் தலைவர்
68. குடியரசுத் தலைவர் ஒரு அமைச்சரை யாருடைய ஆலோசனைக்குப் பிறகே நீக்க இயலும் - பிரதமர்
69. இந்திய அட்டர்னி ஜெனரலை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்
70. குடியரசுத் தலைவரால் இயற்றப்பட்ட அவசரச் சட்டங்கள் யாருடைய ஒப்புதலுக்கு உட்படுத்தப்படுகின்றன - பாராளுமன்றம்
71. இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் பதவி எந்த நாட்டின் அரசியலமைப்பைப் பிரதிபலிக்கிறது - இங்கிலாந்து
72. இந்திய குடியரசுத் தலைவரின் மாதச் சம்பளம் - ரூ.1,50,000
73. இந்திய துணை குடியரசுத் தலைவரின் மாதச் சம்பளம் - ரூ.1,25,000
74. இந்தியா ஏவுகணையின் தந்தை எனப்பட்ட குடியரசுத் தலைவர் - ஏ.பி.ஜே.அப்துல் கலாம்
75. துணை குடியரசுத் தலைவரை நீக்கும் அதிகாரம் புகுத்தப்பட வேண்டிய பாராளுமன்ற சபை - மாநிலங்களவை

இந்திய அரசியல் அமைப்பு - 2
1. இந்திய குடியரசுத்தலைவரின் அதிகாரப்பூர்வ இல்லம் - "ராஷ்டிரபதி பவன்' (குடியரசுத்தலைவர் மாளிகை).
2. உலகின் பெரிய ஜனநாயக நாட்டின் தலைவரின் இல்லம் - "ராஷ்டிரபதி பவன்'
3. புகழ்பெற்ற பிரிட்டீஷ் கட்டிடக் கலைஞர் சர் எட்வின் லாண்ட்சீர் லுட்யன்ஸ் மேற்பார்வையில் குடியரசுத் தலைவர் மாளிகை கட்டுமானப் பணி நடைபெற்றது.
4. ராஷ்டிரபதி பவன் - நான்கு மாடிகள், 340 அறைகள் கொண்டது. மொத்தம் 2 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. 70 கோடி செங்கல், 30 கோடி கற்கள்
பயன்படுத்தப்பட்டுள்ளன.
5. குடியரசுத் தலைவர் மாளிகைக்கான செலவு 8 லட்சத்து 77 ஆயிரத்து 136 பவுண்டுகளாகும். அந்த காலத்திய இந்திய பண மதிப்பு ரூ.2 கோடி.
6. இங்கிலாந்து வைஸ்ராய்கள் தங்குவதற்காக கட்டப்பட்ட மாளிகை - தற்போதைய குடியரசுத் தலைவர் மாளிகை.
7. 1911-ஆம் ஆண்டு இந்தியாவின் தலைநகரம் கொல்கத்தாவிலிருந்து தில்லிக்கு மாற்றப்படுகிறது என்று அறிவித்தவர் - ஜார்ஜ் மன்னன்.
8. குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியேறிய முதல் வைஸ்ராய் - லார்டு இர்வின்(1931.ஜனவரி 23-ல் குடியேறினார்)
9. குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியேறிய முதல் இந்தியர் - இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலான ராஜாஜி.
10. பொதுத்தேர்தல் முடிந்த பின் புதியதாக கூடும் மக்களவையின் முதல் கூட்டத்தொடரில் தற்காலிக சாபாநாயகரை நியமிப்பது - குடியரசுத் தலைவர்
11. யூனியன் பிரதேசங்கள் யார் ஆளுகைக்கு உட்பட்டது - குடியரசுத் தலைவர்
12. இந்திய ஒரு "குடியரசு" (Republic) ஏனெனில் அதனுடைய அரசின் தலைவர் ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மறைமுகமாக மக்களால்(அதாவது மக்களின் பிரதிநிதிகளால்)
தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
13. இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவர் - டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன்
14. குடியரசுத் தலைவர் ஆட்சி ஒவ்வொரு 6 மாதங்கள் காலக்கட்டத்திலும் நீட்டிப்பு செய்யப்பட வேண்டும்.
15. நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகாமல் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடக் கூடாது.
16. இந்திய குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படாதவர் - துணைக் குடியரசுத் தலைவர்
17. குடியரசுத் தலைவர் ஆட்சி ஒரு மாநிலத்தில் சாதாரணமாக 3 வருடங்கள் நீடிக்கலாம்.
18. மக்களவையின் சபாநாயகராகவும், குடியரசுத் தலைவராகவும் இருந்தவர் - சஞ்சீவி ரெட்டி
19. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினரை எக்காரணத்திற்காக குடியரசுத் தலைவர் நீக்கலாம் - 1. திவால் ஆனாவர் என்றால் 2. உறுப்பினராக
இருக்கும் காலகட்டத்தில், ஊதியத்திற்காக வேறு பணி புரிந்தால் 3. குடியரசுத் தலைவர், உறுப்பினரின் உள்ளம் மற்றும் உடலால் நலமில்லாதவர் என்று நினைத்தால் இவை
அனைத்திற்காகவும் நீக்கலாம்.
20. குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியேறிய முதல் இந்திய குடியரசுத் தலைவர் - டாக்டர் இராஜேந்திர பிரசாத்.
21. ராஷ்டிரபதி பவன் - இந்து, புத்த, ஜெயின் சமூக மரபை பிரலிபதிப்பதாக அமைந்துள்ளது.
22. இந்தியா சுதந்திரம் பெற்று ராஜாஜி இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாக பதவியில் இருந்த போது, அவர் பயன்படுத்திய அறைகள் - தற்போது வெளிநாட்டு
தலைவர்கள் சந்திக்கும் இடமாக விளங்குகிறது.
23. ராஷ்டிரபதி வளாகத்தில் - முகுல் கார்டன், ஹெர்பல் கார்டன் தோட்டங்கள் அமைந்துள்ளன. 7. தில்லியைத் தவிர, சிம்லா (வடக்கு) மற்றும் ஐதராபாத் (தெற்கு) ஆகிய
இடங்களில் குடியரசுத் தலைவருக்கான "ராஷ்டிரபதி நிலையம்' அமைந்துள்ளது.
24. இந்திய பாராளுமன்றத்தின் மேலவையின் தலைவர் - சமநிலை முரண்படும்போது மட்டும் வாக்களிப்பதில் உரிமை பெறுகிறார்.
25. அடிப்படை உரிமைகள் - குடியரசுத் தலைவரால் நிறுத்தி வைக்கப்படலாம்
26. இந்திய அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் அடிப்படை உரிமைகள் என்ற கருத்தை - அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசியலமைப்பில் இருந்து பெற்றனர்
27. அரசுக் கொள்கையினை நெறிப்படுத்தும் கோட்பாடுகள் சேர்க்கப்பட்டுள்ள பகுதி - அரசியலமைப்பின் பகுதி IV
28. இந்திய அரசியலமைப்பின் பொதுப் பட்டியலில் இடம் பெற்றுள்ள வகைகள் - 47 வகைகள்
29. இந்திய அரசியலமைப்பில் இருந்து வேறுபட்டது - குடியரசுத் தலைவர் முறை அரசாங்கம்
30. இந்திய உச்சநீதிமன்றம் - அரசியலமைப்பால் அமைக்கப்பட்டது
31. அடிப்படை உரிமைகளின் பாதுகாவலன் - நீதித்துறை
32. எந்த அரசியலமைப்பு திருத்ததின் மூலம் அடிப்படை கடமைகள் வரையறுக்கப்பட்டன - 42வது அரசியலமைப்பு திருத்தம்
33. 44வது அரசியலமைப்பு திருத்தம் அமல்படுத்துப்பட்டபின், சொத்துரிமையானது - அடிப்படை உரிமையிலிருந்து நீக்கப்பட்டு சட்ட உரிமையாக மட்டும் ஏற்கப்பட்டுள்ளது
34. இந்திய அரசியலமைப்பில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசக் கட்டாயக் கல்வி வழங்க வழி வகை செய்யப்பட்டுள்ள பகுதி -  அரசு வழிகாட்டு நெறிமுறை கோட்பாடுகள். 

இந்திய அரசியல் நிர்ணய சபை
1. இந்திய அரசியல் நிர்ணய சபை தோற்றுவிக்கப்பட்ட நாள் - டிசம்பர் 6, 1946
2. இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் கூடிய நாள் - டிசம்பர் 9, 1946
3. இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடைபெற்ற இடம் - தில்லி
4. அரசியல் நிர்ணய சபை எந்தத் திட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டது - காபினெட் தூதுக்குழுத் திட்டம்
5. அரசியலமைப்பு எழுது வரைவுக்குழுவின் தலைவராக செயல்பட்டவர் - டாக்டர் அம்பேத்கார்
6. அரசியல் நிர்ணய சபையின் தலைவராகப் பணியாற்றியவர் - டாக்டர் ராஜேந்திர பிரசாத்
7. இந்திய அரயல் நிர்ணய சபையின் தற்காலிகத் தலைவராகப் பணியாற்றியவர் - டாக்டர் சச்சிதானந்த சின்கா
8. இந்திய அரசியல் நிர்ணய சபையின் நிரந்தரத் தலைவராகப் பணியாற்றியவர் - டாக்டர் இராஜேந்திர பிரசாத்
9. இந்திய அரசியல் நிர்ணய சபையின் ஆரம்ப கால மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை - 385 + 4
10. சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை - 299
11. இந்திய அரசியலமைப்பு பொதுவாக எந்த நாட்டு அரசியமைப்பை ஒத்துள்ளது - இங்கிலாந்து
12. இந்திய அரசியலமைப்பு எந்தச் சட்டத்தின் மறுவடிவமாக திகழ்கிறது - 1935ம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம்
13. அரசியமைப்பு உருவாக்கப்படும்போது அதில் இருந்த பகுதிகளின் எண்ணிக்கை - 22
14. அரசியலமைப்பு உருவாக்கப்படும்போது அதில் இருந்த அட்டவணைகளின் எண்ணிக்கை - எட்டு
15. தற்போதைய அரசியலமைப்பில் உள்ள பகுதிகளின் எண்ணிக்கை - 24
16. இந்திய அரசியல் நிர்ணய சபை முழு இறைமை பெற்ற அமைப்பாக மாறிய நாள் - ஆகஸ்ட் 15, 1947
17. அரசியலமைப்புக்கான முகவுரையை நிர்ணய சபையில் அறிமுகப்படுத்தியவர் - ஜவகர்லால் நேரு
18. இந்தியா சுதந்திரம் பெறும்போது அரசியல் நிர்ணய சபையின் தலைவராக இருந்தவர் - டாக்டர் இராஜேந்திர பிரசாத்
19. இந்திய அரசியலமைப்பின் திறவுகோல் என்று கருதப்படும் அம்சம் - முகவுரை
20. இந்திய அரசிலமைப்பு எழுதி முடிக்கப்பட்ட எடுத்துக் கொள்ளப்பட்ட காலம் - 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்கள்
21. முகவுரையில் சேர்க்கப்பட்ட வார்த்தைகள் - சோஷலிச, சமயசார்பற்ற, ஒருமைப்பாடு
22. அரசியலமைப்பு உருவாக்கப்பட்டபோது அரசியலமைப்பில் இருந்த ஷரத்துக்களின் எண்ணிக்கை - 395
23. தற்போதைய அரசியலமைப்பில் உள்ள ஷரத்துக்களின் எண்ணிக்கை - 450
24. தற்போதைய அரசியலமைப்பில் இருந்த அட்டவணைகளின் எண்ணிக்கை - 12
25. அரசியமைப்பின் இதயமாகவும், ஆன்மைகவும் உள்ள பகுதி என்று டாகடர் அம்பேத்கரால் வர்ணிக்கப்பட்ட பகுதி - அரசியலமைப்பு தீர்வு உரிமைகள் (ஷரத்து 32)
26. உலகில் மிக நீண்ட எழுதப்பட்ட அரசியலமைப்பு - இந்திய அரசியலமைப்பு
27. இந்திய அரசிலமைப்புக்கான எண்ணத்தை அளித்தவர் - எம்.என்.ராய்
28. இந்திய அரசிலமைப்பு நடைமுறைக்கு வந்த நாள் - ஜனவரி 26, 1950
29. இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் - நவம்பர் 26, 1949
30. இந்திய அரசியலமைப்பின்படி இந்தியாவின் பெயர் - பாரத்
31. தற்போது நமது அரசியமைப்பில் உள்ள இணைக்கப்பட்ட பட்டியல்களின் எண்ணிக்கை - 10
32. அடிப்படை கடமைகள் என்னும் பகுதி எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - ரஷ்யா
33. அடிப்படை உரிமைகள் என்னும் பகுதி எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - அமெரிக்கா
34. திருத்தங்கள் என்னும் பகுதி எந்த நாட்டு அரசியமைப்பிலிருந்து பெறப்பட்டது - தென் அமெரிக்கா
35. சட்டத்தின்படி ஆட்சி என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - இங்கிலாந்து
36. கூட்டாட்சி என்னும் கருத்துப் படிவத்தை எந்த நாட்டிலிருந்து இந்திய அரசியலமைப்பு பெற்றுள்ளது - கனடா
37. பொருளாதார நீதி என்னும் சொல் காணப்படும் இடம் - முகவுரை மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள்
38. அரசியல் நிர்ணய சபையின் ஆலோசகராகப் பணியாற்றியவர் - பி.என்.ராவ்
39. கொள்கைகள் தீர்மானம் அரசியல் நிர்ணய சபையில் நிர்ணயிக்கப்பட்ட நாள் - ஜனவரி 22, 1947
40. கொள்கைகள் தீர்மானத்தை உருவாக்கியவர் - ஜவகர்லால் நேரு
41. ஐந்தாண்டுத் திட்டங்கள் என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - ரஷ்யா
42. முகவுரை பகுதி திருத்தப்பட்ட ஆண்டு - 1976 (42வது திருத்தம்)
43. உச்சநீதிமன்ற நீதிபதிகளை நீக்கும் முறை எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - அமெரிக்கா
44. முகவுரை என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - அமெரிக்கா
45. ஒற்றைக் குடியுரிமை என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - இங்கிலாந்து
46. அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பு என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - இங்கிலாந்து
47. பாராளுமன்ற ஆட்சி முறை என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - இங்கிலாந்து
48. நீதிப்புனராய்வு என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - அமெரிக்கா
49. நமது தேசியக் கொடி அரசியல் நிர்ணய சபையால் அங்கீகரிக்கப்பட்ட நாள் - ஜூலை 22, 1947
50. ஒன்றிய நிர்வாகம் பற்றிய பகுதி - பகுதி 5
51. மாநில நிர்வாகம் பற்ரிய பகுதி - பகுதி 6
52. இந்திய அரசியல் நிர்ணய சபையின் தற்காலிகத் தலைவராக பணியாற்றிய டாக்டர் சச்சிதானந்த சின்கா பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்.
53. நீதித்துறை மற்றும் நிர்வாகத்துறையின் தனித்தன்மைக்கு உறுதியளிப்பது - அரசு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள்
54. ஒன்றியம் மற்றும் அதன் பகுதிகள் பற்றி குறிப்பிடுவது - பகுதி -1
55. குடியுரிமை பற்றிக் குறிப்பிடுவது - பகுதி -2
56. அடிப்படை உரிமைகள் பற்றிக் குறிப்பிடுவது - பகுதி -3
57. அரசு வழிகாட்டு நெறிமுறைகள் கோட்பாடுகள் பற்றிக் குறிப்பிடுவது - பகுதி -4
58. ஒன்றியம் (யூனியன்) பற்றிக் குறிப்பிடுவது - பகுதி -5
59. மாநிலங்கள் பற்றிக் குறிப்பிடுவது - பகுதி -6
60. யூனியன் பிரதேசங்கள் பற்றிக் குறிப்பிடுவது - பகுதி-8
61. பஞ்சாயத்து ராஜ்ய அமைப்புகள் பற்றிக் குறிப்பிடுவது - பகுதி -9
62. நகராட்சிகள் பற்றிக் குறிப்பிடுவது - பகுதி -9 A
63. அவசரகால நெருக்கடிநிலை பற்றிக் குறிப்பிடுவது - பகுதி -18
64. திருத்தங்கள் பற்றிக் குறிப்பிடுவது - பகுதி -20
65. இந்தியாவை பாரதம் என்று குறிப்பிடும் ஷரத்து - ஷரத்து 1
66. நில ஆக்கிரமிப்பு குறித்த விதிகள் அடங்கிய அட்டவணை - 9வது அட்டவணை
67. 52வது திருத்தத்தின்போது இணைக்கப்பட்ட அட்டவணை - 10வது அட்டவணை
68. 10வது அட்டவணை இணைக்கப்பட்ட ஆண்டு - 1985
69. முதல் திருத்தின்போது இணைக்கப்பட்ட அட்டவணை - 9வது அட்டவணை
70. 1951-ல் புதியதாக இணைக்கப்பட்ட அட்டவணை - 9வது அட்டவணை
71. பஞ்சாயத்து அமைப்புகளின் அதிகாரத் தலைப்புக்கள் குறித்து குறிப்பிடும் அட்டவணை - 11வது அட்டவணை
72. நகராட்சி அமைப்புகளின் அதிகாரங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணை - 12வது அட்டவணை
73. 1993ல் 74வது திருத்தத்தின்போது இணைக்கப்பட்ட அட்டவணை - 12வது அட்டவணை
74. 1992ல் 73வது திருத்தத்தின்போது இணைக்கப்பட்ட அட்டவணை -11வது அட்டவணை
75. கட்சித்தாவல் தகுதியிழப்பு குறித்த விதிகள் அடங்கிய அட்டவணை - 10வது அட்டவணை
76. நகராட்சி அமைப்புக்களின் அதிகாரப் பட்டியலில் உள்ள தலைப்புக்களின் எண்ணிக்கை - 18
77. பஞ்சாயத்து அமைப்புகளின் அதிகாரப் பட்டியலில் உள்ள தலைப்புகளின் எண்ணிக்கை - 29
78. மக்கள் உரிமைப் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு - 1955
79. தீண்டாமை ஒழிப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு - 1955
80. 1955ம் ஆண்டு சட்டத்தின்படி குடியுரிமை நீக்கப்பெறுவதற்கான வழிமுறைகள் - மூன்று
81. சட்டத்தின்படி ஆட்சி என்பது பற்றிக் குறிப்பிடுவது - ஷரத்து 14
82. குடியுரிமை பெற 1955ம் ஆண்டு சட்டத்தில் உள்ள வழிகளின் எண்ணிக்கை - ஐந்து
83. இந்தியக் குடியுரிமைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு - 1955
84. சாதி, சமயம், இநம், பால், பிறப்பிடம் காரணமாக வேறுபாடு காட்டப்படக்கூடாது என்று குறிப்பிடுவது - ஷரத்து 15
85. பதிவு முறை மூலம் குடியுரிமை பெற இந்தியாவில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்திருக்க வேண்டும் - 5 ஆண்டுகள்
86. குடியுரிமை குறித்த சட்டங்களை இயற்ற அதிகாரம் பெற்றுள்ள அமைப்பு பாராளுமன்றம்
87. தீண்டாமை ஒழிப்பு குறித்து குறிப்பிடும் ஷரத்து - ஷரத்து 17
88. வேலைவாய்ப்பில் அனைவருக்கும் சம வாய்ப்புரிமை என்று குறிப்பிடுவது - ஷரத்து 16
89. சிறப்புப் பட்டங்களை தடை செய்யும் ஷரத்து - ஷரத்து 18
90. அடிப்படை சுதந்திரங்கள் பற்றிக் குறிப்பிடப்படும் ஷரத்து - ஷரத்து 19
91. தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் உயிர் வாழும் உரிமை பற்றிக் குறிப்பிடுவது - ஷரத்து 21
92. கொத்தடிமை முறை ஒழிப்பு பற்றிக் குறிப்பிடுவது - ஷரத்து 23
93. 14 வயதுக்குக் குறைவான நபர்கள் பணியில் அமர்த்தப்படக் கூடாது என்று குறிப்பிடுவது - ஷரத்து 24
94. சுரண்டலுக்கு எதிரான உரிமை என்பது - ஷரத்து 23 மற்றும் 24
95. சமத்துவ உரிமை என்பது ஷரத்து - 14 முதல் 18 வரை
96. சுதந்திர உரிமை என்பது - ஷரத்து 19 முதல் 22 வரை
97. சமய உரிமை என்பது - ஷரத்து 25 முதல் 28 வரை
98. கல்வி மற்றும் கலாசார உரிமை என்பது - ஷரத்து 29 மற்றும் 30
100. ஷரத்து 32ன் கீழ் வழங்கப்படும் ஆணைகளின் எண்ணிக்கை - ஐந்து

No comments:

Post a Comment