Friday 25 July 2014

இலட்சுமி சோகல்

இலட்சுமி சோகல்
பங்களாதேஷ் போரில் சேதமடைந்தவர்களின் நிவாரணப் பணிக்கு நிதிதிரட்டி அளித்தது மட்டுமின்றி, தாமே சென்று போர்ச்சூழலில் மருத்துவப் பணியாற்றிய வரும், இந்திய மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலங்களைவைப் பிரதிநிதியாகவும், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவர்களில் ஒருவராகவும் புரட்சியின் நாட்களில் ஓர் அரசியல் போராளியான கேப்டன் இலட்சுமி சோகல் அவர்களின் வீரச் செயல்களைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு என்று இருந்த காலகட்டத்திலேயே பெண்களின் கையில் ஆயுதம் கொடுத்து இராணுவப் பயிற்சியளித்தார் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். அவர் தலைமையில் இயங்கிய இந்திய தேசிய இராணுவத்தின், பெண்கள் பிரிவான, ஜான்சி ராணி படைப்பிரிவின் தலைமைப் பொறுப்பேற்றவர்தான் கேப்டன் லட்சுமி சேகல்.
பிறப்பு: 1914 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 24 ஆம் தேதி சுவாமிநாதன் - அம்மு தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார்.
இவரின் தந்தை சுவாமிநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். மேலும் அமெரிக்காவில் வானியல் துறையில் பட்டமும், சிறந்த கணிதவியல் நிபுணர் என்ற தகுதியும் பெற்றவர். அத்துடன் குற்றவியல் எழக்கறிஞர் என்ர பெருமதிப்பும் பெற்றவர். இவரின் தாய் அம்மு சுவாமிநாதன் கேரள மாநிலம், பாலக்காட்டில் சமூக சேவகராக இருந்தவர்.
கல்வி: இளம் வயதிலேயே நாட்டு விடுதலை, சமுதாய சமத்துவம் போன்றவற்றில் இலட்சியங்கள் லட்சுமியின் மனதில் இடம் பெற்றுள்ளன. லட்சுமி ஒன்பதாம் வகுப்பு பயிலும்போதே மருத்துவம் பயில வேண்டும் என்று தீர்மானித்தார். ஆங்கில அறிவின் மேன்மை காரணமாக ஆங்கில மிசினரி பள்ளியில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பு பெற்றும் அங்கு மருத்துவக் கல்விக்குத் தேவையான பாடங்கள் செம்மையாகப் போதிக்கப்படவில்லை என்று லேடி லிவிங்க்டன் ஆசிரியர் பயிற்சி கல்லூரியின் பள்ளியில் கல்வியைத் தொடர்ந்தார்.
மருத்துவக் கல்வியும் இளைஞர் காங்கிரஸில் உறுப்பினர்: 1930 ஆம் ஆண்டு இடைநிலைக் கல்வியை இராணி மேரி கல்லூரியில் தொடர்ந்தார். 1938 ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றார்.
இராணி மேரிக் கல்லூரியில் பயிலும் போது கதர் மட்டுமே அணியும் தீவிர காங்கிரஸ் இளைஞர் அணியில் உறுப்பினராக சேர்ந்தார்.
இவ்வணிக்கு பிற்காலத்தில் பொதுவுடைமைக் கட்சியின் தலைவராக விளங்கிய பி.இராமமூர்த்தி தலைவராக இருந்தார். ஒருமுறை லட்சுமி, பகத்சிங் வழக்குக்கு கல்லூரியில் நிதி திரட்டுவதில் தீவிரமாக ஈடுபட்டார். 1930 ஆண்டில் அறப் போராட்டத்தில் மறியலில் ஈடுபட்டதற்காகக் கைது செய்யப்பட்டு ஒருநாள் முழுவதும் சிறையில் இருந்தார்.
அக்காலத்தில் கவிக்குயில் என்றழைக்கப்பட்ட சரோஜினி நாயுடுவின் உடன் பிறந்தவராக சுகாசினி நம்பியார், மீரட் சதிவழக்கில் தொடர்பு கொண்டவராகக் குற்றம் சாட்டப்பட்டு லட்சுமியின் வீட்டில் தலைமறைவாக இருந்தார்.
பொதுவுடைமை வாதியான அவரிடமிருந்து லட்சுமி மார்க்சிய தத்துவம் பற்றியும் உருசியப் புரட்சிப் பற்றியும் பலநூல்களை வாங்கி படித்தார். சமுதாய மாற்றம் புரட்சியினால்தான் சாத்தியமாகும் என்ற கருத்து ஆழமாக அவர் மனதில் இடம் பெற்றது. அத்தகைய ஓர் ஆயுதப் புரட்சியே அரசியல் விடுதலைக்கு உகந்ததாகும் என நம்பலானார். எனவே தனது தாயைப் பின்பற்றிக் காந்தியின் அகிம்சைக் கொள்கையில் ஈடுபட்டிருந்த லட்சுமி மேலும் அதில் ஈடுபடாமல் தனது மருத்துவக் கல்வியை முடித்தார்.
1939-40களில் இரண்டாம் உலகப்போர் மூண்டபோது தீவிரக் கதர் இயக்கங்களில் ஈடுபட்டோர்களும் அகிம்சை வழியில் ஈடுபட்டோர்களின் வாரிசுகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் பிரித்தானியாவின் போர் சேவைக்காக இராணுவத்தில் பணிசெய்ய லட்சுமியின் மனது இசையவில்லை.
சிங்கப்பூர் பயணம்: லட்சுமியின் தாயாரும் தங்கையும் அமெரிக்காவில் இருந்தனர். தனது தங்கையும் 1930ல் இழக்க நேரிட்டது. சென்னையில் எந்தப் பிடிப்பும் இல்லாமல் வாழ்க்கையை கழித்துவந்த லட்சுமி தனது உறவினர் ஒருவருக்கு மருத்துவர் என்ற நிலையில் உதவிசெய்ய, 1940ல் சிங்கப்பூர் சென்றார். எளிய தென்னிந்திய தொழிலாளப் பெண்கள் மருத்துவர் இல்லை என்று கண்டார். அங்கேயே தங்கி தன் மருத்துவச் சேவையில் ஈடுபடலானார். சிங்கப்பூரில் ஏழைகளுக்காக மருத்துவமனை தொடங்கி வெகு விரைவிலேயே நல்ல மருத்துவர் என்ற புகழை பெற்றார்.
இந்திய சுதந்திரக் கழகம்: 1941ல் ஜப்பானியர் சிங்கப்பூரைத் தாக்கினர். பிரித்தானியப்படை பின்வாங்கியது. பிரித்தானிய இந்தியப் படையின் மிகப்பெரிய தளமான பஞ்சாப் தளம் ஜப்பான் படையிடம் சரணடைந்தது. சரணடைந்த இப்படையிலிருந்த படைவீரர்கள், தளபதிகள், கைப்பற்றிய போர்த்தளவாடங்கள் ஆகியவற்றைக் கொண்டு உருவானதே இந்திய தேசிய இராணுவம் ஆகும்.
இதில் பொதுமக்கள் யாரும் இல்லாததால் ராஷ்பிகாரி போஸ் பொதுமக்களுக்கென்று இந்திய சுதந்திர லீக் என்ற ஓர் அமைப்பைத் தோற்றுவித்து செயல்படுத்தி வந்தார். இதன் சிங்கப்பூர் கிளையில் தீவிர உறுப்பினராக இருந்த மாத்ருபூமி என்ற கேரள இதழைத் தோற்றுவித்த கே.பி.கே.மேனன் என்பவரின் நட்பு லட்சுமிக்குக் கிடைத்தது. இந்நட்பின் மூலம் இந்தியச் சுதந்திர லீக்கின் முக்கிய உறுப்பினராக இணைந்தார்.
1942ல் பிரித்தானிய ஜப்பானியப் போரில் காயம் அடைந்தவர்களுக்கு மருத்து உதவிகள் செய்தார். தொலைவிலிருந்து சிங்கப்பூருக்கு வரும் அகதிகளையும் நோயாளிகளையும் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றார். இந்திய சுதந்திர லீக்கின் பிரச்சாரப் பிரிவின் சார்பில் இதழ்களுக்குக் கட்டுரைகள் எழுதினார். இந்தியாவுக்கு வானொலி மூலம் செய்திகளை ஒலிபரப்பும் பணியிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். அத்துடன் மகளிர் பிரிவையும் பராமரித்தார்.
நேதாஜியுடன் சந்திப்பு: இந்திய சுதந்திர லீக்கின் அழைப்பின்பேரில், 1943ல் சுபாஷ் சந்திரபோஸ் சிங்கப்பூர் சென்றார், அப்போது இந்திய சுதந்திர லீகின் சிங்கப்பூர் கிளைக்கு எல்லப்பா என்பவர் தலைவராக இருந்தார். அவரிடம் லட்சுமி இந்திய சுதந்திரப்போராட்டத்தில் தான் ஒரு முக்கிய பொறுப்பேற்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். அதே நேரம் நேதாஜியும், ஜான்சிராணி படை என்ற பெயரில் பெண்களும் ஆயதப் போராட்டத்தில் சமமாகப் பங்கேறக வேண்டும் என அழைப்பு விடுத்தார். இப்படைக்கு தலைமையேற்கும் தனது இசைவைத் தெரிவித்ததும் அடுத்து செய்ய வேண்டிய ஏற்பாடுகளையும் சுபாஷ் சந்திரபோஸ் தெரிவித்தார்.
1943ல் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தின் பெண்கள் பிரிவான ஜான்சிராணி படையைத் தொடங்கினார். ிப்படை ஆசியாவில் தொடங்கப்பட்ட முதல் பெண்கள் படையாகக் கருதப்படுகிறது. பெண்கள் படையை உருவாக்குவதை ஜப்பானியர் விரும்பவில்லை. விலையுயர்ந்த தளவாடங்கள், பெண்கள் இராணுவம் எனச் செலவழிப்பது வீண் எனக் கருதினர். ஆயினும் கிழக்காசியாவில் பல லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உடைமைகளைத் தந்தனர். பெண்கள் ஜான்சிராணி படையில் சேர படைத்தளபதியாக மட்டுமின்றி, பெண்கள் நலனுக்கான ஓர் அமைச்சராகவும் பொறுப்பேற்றார்.
சிங்கப்பூரிலேயே 500 பெண்களைத் தேர்வு செய்து முதலில் ஜான்சிராணி படை துவங்கப்பட்டது. ஆனால் மலேயா-கோலாலம்பூர் போன்ற இடங்களில் இருந்தும் மகளிர் இதில் பங்குகொள்ள வந்தனர். இவர்களுள் ஆர்.லட்சுமிதேவி, தேவயானி, ஜானகி,எம்.எஸ்.தேவர் பாப்பாத்தி போன்ற சிலரும் அடங்குவர். பயிற்சி முடிந்ததும் ஜான்சிராணி படை சிங்கப்பூரிலிருந்து பர்மாவை நோக்கிப் பயணமாயிற்று. அங்கிருந்து படை தில்லியை நோக்கிய போர்முனைக்குச் செல்லும் லட்சுமி இந்தக் கடும்போரில் பங்கேற்றார். ஆனால் ஜான்சி ராணி படை இந்திய பர்மிய எல்லையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. அங்கு கொரில்லாப் படையினர் தாக்குதலைச் சமாளித்தனர். உணவு மற்றும் போர்ச் சாதனங்கள் வந்துசேரும் பாதை முடங்கியது. பசியின் கொடுமையால் காட்டில் கிடக்கும் பழங்களை உண்டதால் அதன் நச்சுத் தன்மை காரணமாக வயிற்றுப் போக்கு, வாந்தி ஏற்பட்டன. இந்நிலையில் போரில் சமாளிக்க முடியாத நேதாஜி பெண்கள் படை எதிரிகள் வசம் அகப்படக்கூடாது என்பதற்காக படையினை மலேயாவுக்குத் திரும்ப ஆணை பிறப்பித்தார். ஆனால் லட்சுமி மறுத்துவிட்டார்.
இராணுவத்தில் மருத்துராக பணி: 1945 ஜூலை முதல் தேதி படையினருடைய வேதனைகளையும் நோயையும் ஆற்ற சிகிச்சை தேவை என உணர்ந்த லட்சும் அங்கு ஷா எஸ்டேட் என்ற இடத்தில் இந்திய தேதிய இராணுவத்தினரும் சேர்ந்து உருவாக்கப்பட்டிருந்த ஓர் மருத்துவ மனையில் அவர்களுக்கு சிகிச்சையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த நேதாஜி லட்சுமியைத் திரும்பி வந்துவிடும்படி அழைத்தார். ஆனால் லட்சுமி பிடிவாதமாக மறுத்து விட்டார். மருத்துவமனை என்பதைக் குறிக்க செஞ்சிலுவை அடையாளம் வைக்கப்பட்டிருந்தும் கூட அன்றிரவே மருத்துவமனை வான் குண்டு வீச்சுக்கு இலக்காகி மருத்துவமனை தரைமட்டமாயிற்று. விமானத்தைப் பார்த்ததும் பதுங்கு குழியில் மறைந்ததால் லட்சுமி உயிர்த் தப்பித்தார்.
தளபதி எல்லாப்பா மிகக் கடுமையாகக் பாதிக்கப்பட்டார். பிரித்தானிய இராணுவத்தினரால் லட்சுமியை எந்தப் பிரிவில் குற்றம் சாட்டுவது என முடிவு செய்ய முடிய வில்லை. ஏனெனில் இந்திய இராணுவத்தில் இருந்து வந்த அதிகாரியாகவோ, பர்மியராகவோ இல்லை. இந்திய சுதந்திர அரசின் ஓர் அங்கமாக அமைச்சராக இருந்தவர். எனவே சிறிது காலம் ரங்கூனில் ஆங்கிலோ-பர்மியர் வசிக்கும். பகுதியில் அவரை விட்டு வைத்தனர். அங்கு தனது நண்பரான கியான்புரி என்ற பெண் மருத்துவருடன் சிகிச்சையகம் சென்று காலம் கழித்தார். எனினும் இவரின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டன.
1945ல் இந்திய தேசிய ராணுவ வீரர்கள் ஓரிடத்தில் கூடினர். அதில் இந்தியாவில் இருந்து வந்த மூன்று இதழியலாளர்களும் இருந்தனர். இக்கூட்டத்தில், "இன்னும் போர் முடிவடைய வில்லை இலட்சியம் நிறைவேறும் வரை போராடுவோம்" என்று இந்தியில் முழங்கினார். இந்த செய்தி பிரித்தானிய இராணுவத் தலைமைக்கு எட்டியது. உடனே லட்சுமியை கைது செய்து "கலாப்" என்ற இடத்தில் வைத்தனர். விசாரணை எதுவும் நடத்தப்படாமல் இவரை இந்தியாவிற்கு அனுப்பி வைத்தனர். கல்கத்தா வந்து சேர்ந்த லட்சுமி அங்குள்ள காவல் நிலையத்தில் தனது வருகையைப் பதிவிடச் சென்றார். அங்கிருந்து அவர்கள் நேதாஜியின் சகோதரி மகள் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
1947 ஆம் ஆண்டில் இந்தியா விடுதலைப் பெற்ற பிறகு ஆங்கிலேயப் படையில் இருந்து பின்னர் இந்திய தேசிய இராணுவத்தில் அருந்தொண்டாற்றிய தன்னுடைய சகபோராளி தளபதி பிரேம் சாகல் என்பவரை லட்சுமி மணந்து கொண்டார். பிறகு கான்பூரில் குடியேறினார். இவருடைய மகள் சுபாஷினி அலி சிபிஎம் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர்.
மாநிலங்களவை பிரதிநிதியாக: சுதந்திர இந்தியாவில் தான் சந்தித்த ஆட்சியாளர்களுள், தனக்கு திருப்தியளிக்குமாறு நாட்டுப் பற்றுடன் ஆட்சி செய்பவர்கள் கம்யூனிஸ்டுகள்தான் என்ற முடிவிற்கு வந்த கேப்டன் லட்சுமி, ஜோதிபாசுவுடன் பங்களாதேஷ் போரின் போது இணைந்து அகதிகளுக்கு சேவையாற்றியதை பெருமிதமாக உணர்ந்தார் லட்சுமி தோழர் லட்சுமியாக.
1971ல் இந்திய மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலங்களைவைப் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவர்களில் ஒருவராகவும் விளங்கினார். 1972ல் பங்களாதேஷ் போர் நடைபெற்றபோது வங்காள கவர்னராக இருந்த பத்மஜா நாயுடு என்பவருடன் கடிதம் மூலம் அனுமதி பெற்று வலிய உதவி செய்யச் சென்றார். போரில் சேதமடைந்தவர்களின் நிவாரணப் பணிக்கு நிதிதிரட்டி அளித்தது மட்டுமின்றி, தாமே சென்று போர்ச்சூழலில் மருத்துவப் பணியாற்றினார்.
நம்முடைய நிலைக்குப் பொருத்தமான ஒரு சோசலிசம் மட்டுமே நம்முடைய பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும் என்பதுதான் அன்றும் இன்றும் என்றும் என் நம்பிக்கை என்கிறார் கேப்டன் லட்சுமி சேகல். கல்லூரி நாட்களில் தொடங்கி இன்று வரை, அரசியல் மூலமாகவோ, மருத்துவம் மூலமாகவோ, போராட்டம் மூலமாகவோ சமூகப்பணியாற்றி மனித குலத்திற்கான சேவைக்காக தன் வாழ்நாளின் ஒவ்வொரு நிமிடங்களையும் செலவழித்துள்ளார் கேப்டன் லட்சுமி என்பது விளங்கும்.
2002 ஆம் ஆண்டு இந்தியக் குடியரசுத் தலைவர் பதவிக்கு இந்தியப் பொதுவுடைமை மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் அப்துல்கலாமை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்விடைந்தார்.
இந்திய அரசு பத்மபூஷண் விருது கொடுத்து இவரைக் கௌரவித்துள்ளது.

No comments:

Post a Comment