2013 - 2014
நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் 21.03.2013 அன்று நிதியமைச்சர் ஓ.
பன்னீர்செல்வம் அவர்களால் 'புதிய வரி விதிக்கப்படவில்லை, இருக்கும் வரியை
உயர்த்தவுமில்லை' என்ற வரிகளுடன் வரியில்லா பட்ஜெட் சட்டசபையில் தாக்கல்
செய்யப்பட்டது.
பட்ஜெட் ஒரு பார்வை
தமிழக அரசின் 2013 - 2014 பட்ஜெட்டின்படி அரசின் மொத்த வருமானம் (மத்திய
அரசிடமிருந்து கிடைக்கும் தொகையையும் சேர்த்து) ரூபாய் 1,18,579 கோடி.
வருவாய் கணக்கு செலவுகள் ரூ.1,17,915.81 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது
திருத்த மதிப்பீடு 2012 - 2013 ஐக் காட்டிலும் 15 சதவீதம் கூடுதலாகும்.
வருமானத்தில் உபரி 663 கோடி ஆக இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.தமிழகத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் நிதிப் பற்றாக்குறை விகிதம் நடப்பாண்டில் 2.84% ஆக இருக்கும் என்றும் அடுத்தடுத்த ஆண்டுகளில் இது 2.78% ஆகவும், 2.71% ஆகவும் குறையும் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலையில்லா அரிசி, மிக்சி, கிரைண்டர், மின் விசிறி, பசுமை வீடுகள், முதல்வரின் காப்பீட்டுத் திட்டம், மாணவர்களுக்கு மடி கணினி உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், வரும் நிதியாண்டிலும் தொடர்கின்றன. இத்திட்டங்களுக்காக, 43 ஆயிரத்து 449 கோடி ரூபாய், பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டு உள்ளது.
பட்ஜெட் துளிகள் சட்டம் மற்றும் நீதி
2013-2014 ஆம் நிதி ஆண்டில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம்
மூலம் 17,138 காவலர்களை நியமனம் செய்யவும், 1091 துணை ஆய்வாளர்கள், 1,005
தீயணைப்பு பணியாளர்கள் மற்றும் 292 சிறை காவலர்களையும் தேர்வு செய்யவும்
திட்டமிடப்பட்டுள்ளது.தீயணைப்பு துறைக்கு ரூ.208 கோடியும் சிறைத்துறைக்கு ரூ.179 கோடியும் காவல்துறைக்கு ரூ.4,706 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வீட்டு மனைப்பட்டா
2012-13 ஆம் ஆண்டில் பிப்ரவரி மாதம் வரை சுமார் 1.2 லட்சம் வீட்டு மனை
பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. 2013-14 ஆம் ஆண்டில் மேலும் 2 லட்சம்
வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்படும்.பசுமை வீடுகள் திட்டத்தில், 60 ஆயிரம் வீடுகளும், இந்திரா வீட்டு வசதி திட்டத்தின் கீழ், ஒரு லட்சம் வீடுகளும் கட்டப்பட இருக்கிறது.
தமிழ்நாடு கிராம குடியிருப்பு மேம்பாட்டு திட்டத்தில், 750 கோடி ரூபாயில், 15 ஆயிரத்து 115 குடியிருப்புகள் கட்டப்பட இருக்கிறது.
நகர்ப்புற வீட்டுவசதித் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு.
நில வழிகாட்டி மதிப்பீடு (Guide line value) உயர்வை அடுத்த ஆண்டிற்கு (2014) ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு
வறுமையை ஒழிக்கும் விதமாக மேலும் 110 வட்டாரங்களில் புதுவாழ்வு மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்திற்கு ரூ.99.73 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆதார் அடையாள அட்டை வழங்கும் திட்டம் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
வேளாண்மை
வேளாண் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2012-13
நிதி ஆண்டில் 4,829.93 கோடி ரூபாயாக இருந்த, வேளாண் துறைக்கான ஒதுக்கீடு,
2013 - 2014 ஆம் ஆண்டில் 5,189.15 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.இரண்டாவது பசுமை புரட்சிக்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட உள்ளது.
உழவர் பெருவிழா 2013 - 2014 ஆம் ஆண்டிலும் ரூ.46 கோடி செலவில் நடத்தப்படும் .
பயிர் உற்பத்தித்திறனை உயர்த்திட, மேலும் ஐந்து லட்சம் ஏக்கர் பரப்பு திருந்திய நெல் சாகுபடி முறையின் கீழ் கொண்டுவரப்படும்.
தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தில் ரூ.24 கோடி செலவில் மானாவாரி நிலங்களின் உற்பத்தி நிலைப்படுத்தப்படும்.
2013-2014 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் தேசியத் தோட்டக் கலை இயக்கத்திற்காக மாநிலத்தின் பங்காக ரூ.21 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது 7.25 லட்சம் ஏக்கராக உள்ள காய்கறி சாகுபடிப் பரப்பை, வரும் ஆண்டில் 8.2 லட்சம் ஏக்கராக உயர்த்திட சிறப்பு கவனம் அளிக்கப்பட உள்ளது.
திரவ உரங்களை வாங்கி சேமித்து, விநியோகிக்க, ரூ.50 கோடி ரூபாயை சுழல்நிதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
காய்கறி கழிவு சுத்திகரிப்புத் திட்டத்திற்கு ரூ.34 கோடி ஒதுக்கீடு.
2013-2014ம் ஆண்டில் பல்வேறு திட்டங்களின் நிதியை ஒருங்கிணைத்து, ரூ.520 கோடி செலவில் 1.30 லட்சம் ஏக்கர் பயிர்ப் பரப்பு சொட்டுநீர் பாசனத்தின் கீழ் கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறு, குறு விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசன திட்டங்களின் கீழ் பயன்பெறுவதற்கான ஒரு ஏக்கர் என்ற உச்சவரம்பு நீக்கப்படும்.
அணை புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.399 கோடி நிதி ஒதுக்கீடு.
பாரம்பரிய நீர் நிலைகளை மேம்படுத்த ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு.
காவிரி டெல்டா மாவட்டங்கள் அல்லாத மற்ற மாவட்ட விவசாயிகளுக்கும் விரைவில் நிவாரணம் வழங்கப்படும்
கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம்
விலையில்லா கறவை பசுக்கள், வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் வழங்கும்
திட்டத்தின் கீழ் இதுவரை 24,000 கறவை பசுக்களும், 10 லட்சம் வெள்ளாடுகள்
மற்றும் செம்மறி ஆடுகளும் வழங்கப்பட்டுள்ளன.2013-2014 ஆம் ஆண்டில் 12,000 கறவை பசுக்களும், 1.5 லட்சம் நிலமற்ற ஏழைப்பெண்களுக்கு ஆறு லட்சம் செம்மறி ஆடுகள் மற்றும் வெள்ளாடுகளும் வழங்க ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பால் உற்பத்தி சங்கங்கள் மூலம் கால்நடை தீவனத்தை வழங்க ஈரோட்டில் உள்ள கால்நடை தீவன உற்பத்தி தொழிற்சாலை ரூ.14 கோடியில் புனரமைக்கப்படும்.
கோழி வளர்ப்பு பிரபலமாகாத பகுதிகளில் கோழி வளர்ப்பை ஊக்குவிக்க ரூ.25 கோடி.
மீன்வளம்
மீனவர் நலத்திட்டங்களுக்காக ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுமீன் பிடிப்புத் தடை கால நிவாரணத்திற்கு நிதி ஒதுக்கீடு.
ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவிப்பதற்காக, புதிய ஆழ்கடல் டியூனா மீன்பிடி படகுகளை வாங்குவதற்கு வழங்கப்படும் 25% மானியம் 50% ஆக உயர்த்தப்படும் (ரூ.30 கோடி ஒதுக்கீடு).
கடலூர் மாவட்டம் முடசலோடையில் புதிய நவீன மீன் இறங்கு தளம் அமைக்க ரூ.7.78 கோடி ஒதுக்கீடு.
தமிழ்நாடு தொழில்வளர்ச்சி நிறுவனம் மூலம் தூத்துக்குடியில், புதிய கப்பல் கட்டும் தளம் அமைக்கப்படும்.
ராமநாதபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தனியார் துறை பங்கேற்புடன் 2 மீன்பதப்படுத்தும் பூங்காக்கள் அமைக்கப்படும்.
மேற்கண்ட செலவினங்களுக்காக மீன்வள துறைக்கு ரூ.467.44 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
பொது விநியோகம்
உணவு மானியத்திற்காக 2013 - 2014 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.4,900 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.பொது வினியோகத் திட்டத்தில் நல்ல தரமான அரிசி கிடைக்கச் செய்யும் வகையில், தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஏழு அரிசி ஆலைகள் ரூ.26.27 கோடி செலவில் நவீனமயமாக்கப்பட்டுள்ளன.
2013 - 2014 ஆம் ஆண்டில் தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் நிறுவனத்தின் கட்டுப் பாட்டில் உள்ள 7 அரிசி ஆலைகள் ரூ.32.6 கோடி செலவில் நவீன மயமாக்கப்படும்.
விலைவாசியைக் கட்டுப்படுத்தும் விதமாக பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. உளுத்தம் பருப்பு பாமாயில், துவரம் பருப்பு குறைந்த விலையில் வழங்கும் திட்டம் மேலும் ஓராண்டுக்கு 2014 ஆண்டு மார்ச் மாதம் வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
விலைவாசியை கட்டுப்படுத்த பொது வினியோக கடைகள் மூலமாக, அரிசி கிலோ 20 ரூபாய்க்கும் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு ஆகியவை கிலோ ரூ.30 க்கும், பாமாயில் லிட்டர் ரூ.25 க்கும் வழங்கப்படும்.
அவசர காலங்களில் அத்தியாவசிய பொருள்களை வாங்கி வினியோகம் செய்வதற்கான நிதியின் அளவு ரூ.100 கோடி ரூபாயாக உயர்த்தப்படும்.
ஒரு லட்சம் மெட்ரிக் டன் அரிசியை கிலோ ஒன்றிற்கு ரூ.20 என்ற விலையில் வெளிச்சந்தையில் விற்க நடவடிக்கை எடுக்கப்படும்.
காய்கறி விலையைக் கட்டுப்படுத்த, கூட்டுறவு மற்றும் தோட்டக்கலை துறைகள் மூலம் 'பண்ணை பசுமை நுகர்வோர்' கடைகள் திறக்கப்படும்
கல்வி
அனைத்துப் பள்ளிகளிலும் 2013 - 14ம் ஆண்டுக்குள், பாதுகாக்கப்பட்ட
குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் கிடைப்பது உறுதி செய்யப்படும். பள்ளிக் கல்வித்துறை வளர்ச்சிக்காக ரூ.16,965.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
97.7 லட்சம் மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள் வழங்க ரூ.217.22 கோடியும், 86.71 லட்சம் மாணவர்களுக்கு இலவச நோட்டுகள் வழங்க ரூ.110.96 கோடியும், 24.76 லட்சம் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகையாக ரூ.381 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கு ரூ.700 கோடியும் இடைநிலைக் கல்வி மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.366.57 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
13 லட்சம் மாணவர்களுக்கு இலவச புத்தகப் பைகள் வழங்க ரூ.19.77 கோடியும், மாணவர்களின் இலவச பேருந்து பயணச்சீட்டுகள் வழங்கும் திட்டத்திற்கு ரூ.322 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைத் துறை
2012-2013ம் ஆண்டில் 5,615.71 கோடி ரூபாயாக இருந்த நெடுஞ்சாலை துறைக்கான
நிதி ஒதுக்கீடு, 2013-2014ம் ஆண்டில் 6,452.77 கோடி ரூபாயாக
உயர்த்தப்பட்டுள்ளது.168 கி.மீ. நீள இடைவழித்தட மாநில நெடுஞ்சாலைகள், இருவழித் தடங்களாகவும்; 1,000 கி.மீ. நீள ஒருவழித்தட முக்கிய மாவட்ட சாலைகள், இடைவழித் தடங்களாகவும் தரம் உயர்த்தப்படும்.
ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்திற்காக 2,032 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப் பட்டு உள்ளது.
சென்னையில் இருந்து மாமல்லபுரம் வரை கிழக்கு கடற்கரை சாலையை நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்துவதற்கான பணிகள் 2013-2014ம் ஆண்டில் தொடங்கி செயல்படுத்தப்படும்.
சென்னையில், 271.68 கோடி ரூபாய் செலவில் நான்கு மேம்பாலங்களும், மதுரை, காளவாசல், கோரிபாளையம் ஆகிய இடங்களில் 130 கோடி ரூபாய் செலவில் இரண்டு மேம்பாலங்களும் அமைக்கப்படும்.
தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் இரண்டாவது கட்டப்பணியின் கீழ், அதிக போக்குவரத்து உள்ள, 1,678 கி.மீ., சாலைகள், 8,580 கோடி ரூபாயில் மேம்படுத்தப்படும். இதுவரை மாநில அரசால் செயல்படுத்தப்பட்டுள்ள வெளிநாட்டு உதவிபெறும் திட்டங்களில் இது மிகப்பெரிய திட்டமாகும்.
2013-2014ம் ஆண்டில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் போன்றே, தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம் என்ற புதிய அமைப்பு உருவாக்கப்படும். முக்கிய மாநில நெடுஞ்சாலைகள் இந்த அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டு சர்வதேச தரத்தில் சாலைகள் மேம்படுத்தப்படும்.
2013-2014 ஆம் நிதியாண்டில் பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் 8வது கட்டத்தின் கீழ் 3095.77 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகளை ரூ.1,130.10 கோடி செலவில் மேம்படுத்தப்படும். இதில், ரூ.78.18 கோடி செலவில் 45 பாலங்களையும், ரூ.772.97 கோடி செலவில் 2031.22 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகளையும் மேம்படுத்தும் பணிகளை கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளும், ரூ.278.95 கோடி செலவில் 1064.55 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகளை மேம்படுத்தும் பணிகளை நெடுஞ்சாலைத் துறையும் மேற்கொள்ளும்.
வேலைவாய்ப்பு மற்றும் இளைஞர் நலம்
தமிழகத்தில் நான்கில் ஒருவர் 20 முதல் 25 வயதுடையவர். இளைஞர் திறன்
வளர்ச்சிப் பயிற்சிக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும். மாநில திறன்
வளர்ப்பு மேம்பாட்டு பயிற்சித் திட்டத்திற்கான ஒதுக்கீடு ரூ.25 கோடி
இருந்து 100 கோடியாக உயர்த்தப்படும். உலகத் தரத்திலான பயிற்சி
இளைஞர்களுக்கு அளிக்கப்படும்.ரூ.5 கோடி தொழில் வளர்ச்சி திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்காக தொழில் கட்டமைப்புத் துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
தமிழக மக்கள் தொகையில் 25 சதவீதம் 20 முதல் 35 வயதிற்குள் உள்ளனர். சுயவேலைவாய்ப்பு பெறவோ அல்லது உற்பத்தித் துறை மற்றும் சேவைத்துறைகளில் பணிபுரியவோ, இந்த இளைஞர்கள் ஊக்குவிக்கப்பட்டு உரிய பயிற்சி அளிக்கப்பட வேண்டும். மாநில திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலமாக, திறன்வளர் பயிற்சிக்கு கடந்த ஆண்டு ரூ.75 கோடி ஒதுக்கப்பட்டது. இது வரும் நிதியாண்டில் ரூ.100 கோடி உயர்த்தப்படும்.
வடிவமைக்கப்பட்ட திறன் பயிற்சியை தொடர்ந்து அளிப்பதற்காக ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
தமிழ் வளர்ச்சிப் பணி
தமிழ் வளர்ச்சிப் பணிகளுக்கு ரூ.39.29 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சுகாதாரம்
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துக்கு, பிறப்பு, இறப்பு பதிவு, தடுப்பூசி, பேறுகால வசதி திட்டங்களுக்கு ரூ.6511.76 கோடி ஒதுக்கீடு. .முகாம்களுக்கு வெளியில் வாழும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கும், முதல்வரின் காப்பீட்டுத் திட்டம் அமல்படுத்தப்படும்
ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்த ரூ.1400 கோடி நிதி ஒதுக்கீடு
அரசு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு ரூ. 750 கோடி நிதி ஒதுக்கப்படும்.
தஞ்சை மற்றும் நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில், 30 கோடி ரூபாயில், இரண்டு மண்டல புற்றுநோய் சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும்.
குடிநீர் வழங்கல்
சென்னை குடிநீர் தேவைக்காக கண்ணன் கோட்டை, தேர்வாய் கண்டிகை
கிராமங்களின் அருகில் ரூ.330 கோடி செலவில் ஒரு புதிய நீர்த்தேக்கம்
அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும்.சோழவரம், போரூர், நேமம், அயனம்பாக்கம் ஏரிகளின் கொள்திறனை உயர்த்துவதற்கான பணிகளுக்காக ரூ.50 கோடி ஒதுக்கீடு.
ஒகேனக்கல் குடிநீர் வழங்கல் மற்றும் புளுரோசிஸ் குறைப்பு திட்டத்திற்காக பட்ஜெட்டில் ரூ.500 கோடி ஒதுக்கீடு.
மதுரை, விருதுநகர், சிவகங்கை, நாகை, வேலூர், சேலம், திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களின், முக்கிய கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்கு, 212.54 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
சென்னை பெருநகர மேம்பாட்டு திட்டத்திற்காக ரூ.500 கோடியும், ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்திற்காக ரூ.750 கோடியும் ஒதுக்கப்பட்டு உள்ளது.
மறுசுழற்சி முறை, கழிவுகளை அகற்றும் வசதிகளோடு கூடிய திடக்கழிவு மேலாண்மை முறை அனைத்து கிராமங்களிலும் ஏற்படுத்தப்படும்.
கழிவுகளை சேகரித்து கையாளும் செலவுகள் உள்ளிட்டு, இத்தகைய வசதிகளை ஏற்படுத்துவதற்காக நிதிப் பகிர்வுத் தொகையில் இருந்து ரூ.150 கோடி தனியாக ஒதுக்கப்படும். 'தூய்மை பாரதம்’ திட்டத்தில் கிடைக்கக்கூடிய ரூ.97.85 கோடியும், திடக்கழிவு, கழிவுநீர் மேலாண்மை பணிகளுக்கு பயன்படுத்தப்படும்.
2013 - 14 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் உள் கட்டமைப்பு மேம்பாட்டு நிதிக்காக ரூ.2,000 கோடி ரூபாயும், திட்ட வடிவமைப்பு நிதிக்காக ரூ.200 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
புதிய மின் உற்பத்தி திட்டங்கள்
புதிய மின் உற்பத்தி திட்டங்கள் மூலம் அடுத்த 2014 ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 3,230 மெகாவாட் கூடுதல் மின்சாரம் கிடைக்கும்.சூரிய ஒளி மின்சக்தி மேம்பாட்டிற்கு சட்டமன்ற மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
மொத்தம் ரூ.21 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் செயல்படுத்தப்பட உள்ள புதிய மின் உற்பத்தி திட்டங்களான, 660 மெகாவாட் எண்ணூர் விரிவாக்க திட்டம், இரண்டு 660 மெகாவாட் அலகுகள் கொண்ட எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல திட்டம், இரண்டு 660 மெகாவாட் அலகுகள் கொண்ட உடன்குடி மின் உற்பத்தி திட்டம் ஆகியவற்றிற்கான பணிகள் வரும் 2013-2014ம் ஆண்டில் தொடங்கும்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனமும், தேசிய அனல்மின் நிறுவனமும் இணைந்து செயல்படுத்திவரும் வல்லூர் மின் உற்பத்தி திட்டத்தில் 500 மெகாவாட் திறன் கொண்ட முதல் அலகு ஏற்கனவே செயல்பட தொடங்கி, மின் உற்பத்தியை நிலைப்படுத்தியுள்ளது.
மேட்டூர் அனல்மின் உற்பத்தி மூன்றாம் நிலை திட்டத்தின் 600 மெகாவாட் உற்பத்தித்திறன் கொண்ட அலகும், மேற்கூறிய வல்லூர் கூட்டுத்திட்டத்தின் இரண்டாவது அலகும், வட சென்னை இரண்டாம் நிலை அனல்மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது அலகும், சோதனை முறையில் செயல்பட தொடங்கியுள்ளன.
வட சென்னை மின்உற்பத்தி திட்டத்தின் 600 மெகாவாட் முதல் அலகு, வரும் மே மாதம் முதலும், வல்லூர் கூட்டுத்திட்டத்தின் மூன்றாவது 500 மெகாவாட் அலகு, வரும் அக்டோபர் மாதம் முதலும் செயல்பட தொடங்கும்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனமும், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமும் இணைந்து, தூத்துக்குடியில் அமைத்துவரும் மின் உற்பத்தி திட்டத்தின், தலா 500 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அலகுகள், முறையே வரும் டிசம்பர் மாதத்திலும், 2014ம் ஆண்டு மார்ச் மாதத்திலும் செயல்பட தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய திட்டங்கள் மூலம் 3,230 மெகாவாட் கூடுதல் மின்உற்பத்தியை அளிக்கும்.
விலையில்லா மிக்ஸிகள், கிரைண்டர்கள் மற்றும் மின் விசிறிகள் வழங்கும் முன்னோடித் திட்டம்
விலையில்லா மிக்ஸிகள், கிரைண்டர்கள் மற்றும் மின் விசிறிகள் வழங்கும்
முன்னோடித் திட்டம், வீட்டு வேலைப் பளுவிலிருந்து பெண்களை விடுவித்துள்ளது.
மலைப்பாங்கான பகுதிகளில் மின்விசிறிகளுக்குப் பதிலாக மின் அடுப்புகள்
விநியோகிக்கப் பட்டு வருகின்றன.2011-2012ம் ஆண்டில் 1,361.62 கோடி ரூபாய் செலவில் 25 லட்சம் உபகரணத் தொகுப்புகள் வழங்கப்பட்டது. 20122013ம் ஆண்டில் 1,556 கோடி ரூபாய் செலவில் 35 லட்சம் உபகரணத் தொகுப்புகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
2013 - 2014ம் ஆண்டில், மேலும் 35 லட்சம் உபகரணத் தொகுப்புகள் விநியோகிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதற்காக 20132014ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 1,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அரசு வழங்கும் அரிசி, மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி உள்ளிட்ட விலையில்லா திட்டங்களுக்கு, பட்ஜெட் மதிப்பில், 31 சதவீதத் தொகை ஒதுக்கப்பட்டு உள்ளது. இதனால், நிதிப் பற்றாக்குறை, 23 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
சத்துணவுத் திட்டம்
2013-14ம் ஆண்டில் 53.53 லட்சம் குழந்தைகளுக்குப் பயனளிக்கும் வகையில்
சத்துணவுத் திட்டத்தை செயல்படுத்திட 1,492.86 கோடி ரூபாய் ஒதுக்கீடு.2013-2014ம் ஆண்டில் 359.70 கோடி ரூபாய் செலவில் 14,130 மதிய உணவு மையங்களில் சமையலறைக் கட்டுமானப் பணிகள் செயல்படுத்தப்படும்.
சென்னை, வேலூர், திருச்சி, திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய 5 மாவட்டங்களில் சோதனை முறையில் அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு வண்ண உடைகள் வழங்குவதற்கான திட்டம் 2012-2013ம் ஆண்டில் செயல்படுத்தப்பட்டது. 2013-2014ம் ஆண்டில் விழுப்புரம், அரியலூர், பெரம் பலூர், நாகப்பட்டி னம் மற்றும் திருநெல்வேலி ஆகிய 5 மாவட்டங்களுக்கும் இத்திட்டம் விரிவுப்படுத்தப்படும்.
அங்கன்வாடி குழந்தைகளுக்கு வண்ணச் சீருடைகள் வழங்குவதற்காக 4.30 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
2013-2014ம் ஆண்டில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்திற்காக 1,320.52 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நில வங்கி
தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும், தொழில் உற்பத்தியைப்
பெருக்கவும், புதிய தொழில்களை ஊக்குவிப்பதற்காகவும், சிப்காட் நிறுவனம்
மூலம் 25 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட நில வங்கி ஏற்படுத்தப்படும்.தென் மாவட்டங்களில் தொழில்களை ஊக்குவிக்க, புதிய சலுகை தொகுப்பு விரைவில் அறிவிக்கப்படும். சிறிய மற்றும் நடுத்தர கட்டமைப்பு திட்டங்களுக்கு 770 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை ஊக்குவிக்கவும், சிறப்பு சலுகை தொகுப்பு அறிவிக்கப்படும்.
சுற்றுச்சூழல்
65 லட்சம் மரக் கன்றுகள் நடும் திட்டம் இந்த ஆண்டும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.கூவம், அடையாறு, கொசஸ்தலை ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளை சீரமைக்க நடவடிக்கை.
சுற்றுச்சூழல் வன பாதுகாப்புக்காக ரூ. 880 கோடி ஒதுக்கீடு.
மாமல்லபுரத்தில் ரூ. 250 கோடி செலவில் சர்வதேச கடல்வாழ் உயிரின காட்சியகம் அமைக்கப்படும்.
அரியலூரில் புதிய தொல் படிமப் பொருள் அருங்காட்சியகம் ரூ. 2 கோடி செலவில் அமைக்கப்படும்.
காதி, சர்வோதய சங்கங்களுக்கு தள்ளுபடி மானியம் ரூ. 12 கோடி ஒதுக்கீடு.
முதியோர் பென்ஷன், ஆதரவற்ற விதவைகள் பென்ஷன் திட்டங்களுக்கு ரூ. 3461.75 கோடி ஒதுக்கீடு.
நான்காவது மாநில நிதி ஆணைய அறிக்கை, நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும்.
மத்திய அரசின் டீசலுக்கான இரட்டை விலைக் கொள்கையினால், மாநில போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்ய பட்ஜெட்டில் 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஏன் நிதிப் பற்றாக்குறை?
2013 - 2014ல் சம்பளம் குறித்த ஒதுக்கீடு ரூ.34,569.28 கோடி மற்றும்
ஓய்வூதியம் குறித்த செலவினத்திற் கான ஒதுக்கீடு ரூ.15,117.82 கோடியாகும்.
இவ்வரவுசெலவுத் திட்ட மதிப்பீட்டில் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் குறித்த
செலவுகள் மொத்த வருவாய் செலவுகளில் 42 சதவீதமாகும்.2013-2014 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்ட மதிப்பீட்டில் மானியம், உதவித் தொகைக்கான ஒதுக்கீடு ரூ.45,176 கோடி. அடுத்தடுத்த ஆண்டுகளில் இதன் வளர்ச்சி விகிதம் 15 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலவச அரிசி வழங்குதல் மற்றும் பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் தமிழக மின்சார வாரியத்திற்கு கூடுதல் உதவித் தொகை ஆகியவற்றால் அதிக ஒதுக்கீடு அவசியமாகிறது.
கடன் மற்றும் முன்பணங்கள் உள்ளடக்கிய மூலதனம் குறித்த செலவினத்திற்கு ரூ.23,602.63 கோடி மதிப்பிடப்பட்டுள்ளது.
2013-2014 ஆம் ஆண்டில் நிதிப் பற்றாக்குறை ரூ.22,938.57 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 2.84 சதவீதமாக இருக்கும். வரும் ஆண்டுகளில் மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் நிதிப் பற்றாக்குறை விகிதம் 2014-2015 ஆம் ஆண்டில் 2.78 ஆகவும், 2015-2016 ல் 2.71 ஆகவும் இருக்கும்.
2013-2014 ஆம் ஆண்டில் மாநில அரசு வாங்க அனுமதிக்கப்பட்ட கடன் அளவு ரூ.24,263 கோடியாகும்.
கடன் வாங்குவதைக் குறைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு தொகுநிதியில் நிகர கடன் வாங்குதல் ரூ.21,142.47 கோடியாக மட்டுமே மதிப்பிடப்பட்டுள்ளது. 31.03.2014 அன்று வருங்கால வைப்பு நிதி போன்றவை உள்ளிட்ட ஏனைய கடன் ரூ.1,55,129.62 கோடியாக இருக்கும். இது மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 19.18 சதவீதமாகும்.
மொத்த நிதிப் பற்றாக்குறை 19 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பற்றாக்குறையை ஈடுகட்ட, தமிழக அரசு மேலும் கடன் வாங்க வேண்டியிருக்கும். இந்த ஆண்டு வாங்க உத்தேசிக்கப்பட்டுள்ள கடன் அளவுகளின்படி, தமிழக அரசின் மொத்த கடன் சுமை ஒரு லட்சத்து 55 ஆயிரம் கோடி ரூபாயாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment